Thursday 23 January 2014

சில நேரங்களில் சில மனிதர்கள்




அது ஒரு அழகான குடும்பம். என் நெருங்கிய  தோழியின் உடன் பிறந்த அக்காவின் குடும்பம். என் தோழிக்கு ஒரு அக்கா ஒரு அண்ணா. அக்கா திருமணம் முடித்து கணவரோடு ஹோசூரில் செட்டில் ஆகி இருந்தார். அக்காவுக்கு மின் வாரியத்தில் எஞ்சினியர் வேலை. அக்கா வீட்டுகாரருக்கு பெங்களூருவில் சாப்ட் வேர் வேலை. அடிக்கடி வெளி நாடுகளுக்கும் சென்று வருவார். இரண்டு மகன்கள்.அக்கா அப்படி ஒரு அழகு. பன்னீர் புஷ்பங்கள் காயத்ரி மாதிரியே இருப்பார்.  அந்த கணவன் மனைவியின் அன்யோநியத்தை பார்க்கவே ஆசையாக இருக்கும். மாமாவின்(அக்கா கணவர்) நகைச்சுவை உணர்வால் வீடே கல கலவென இருக்கும்.

 தோழிக்கு அப்பா இல்லை.அப்பா இறந்த பின் அம்மா அக்கா வீட்டோடு தங்கி பேரப்பிள்ளைகளை கவனித்துக் கொண்டார். அண்ணனோ எந்த வித கவலையுமின்றி அவருடைய மாமனாரின் குடும்பத்தோடு ஏதோ ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தார். தாத்தா, பாட்டி எழவு, அப்பா எழவு என்று துக்கம் விசாரிக்க மட்டுமே இந்தியா வருவார். கோடை விடுமுறையில் நாமக்கலுக்கு ஏதோ நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு காரில் வந்தனர் அக்கா குடும்பத்தினர். 
கோவிலை சென்றடைவதற்கு  முன்னரே ஏதோ ஒரு நெடுஞ்சாலையில் அந்த கோர விபத்து நிகழ்ந்தது.  ஒரு லாரிக்கு பின்னால் சென்ற இவர்கள் காரை ஓவர் டேக் செய்ய முயன்ற பேருந்து ஒன்று, எதிரில் வேறேதோ ஒரு லாரி வர , இவர்கள் காரின்  பின்புறத்தில் கடுமையாக மோதியுள்ளது.  பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய பையனுக்கும்   அக்காவுக்கும் மட்டும் அடி. பையனுக்கு முகத்தில் அடி. அக்காவுக்கு எந்த காயமும் இல்லை. பின்னால் பேருந்து இடித்ததில் முன் சீட்டில் இடித்து அதே வேகத்தில் அப்படியே பின்னாடி சாய கழுத்து எலும்பு முறிந்து விட்டது. 

இன்ஸ்டன்ட் கோமா.  எந்த காயமுமே இல்லாமல் ஹெட் இஞ்சுரி, கோமா. டாக்டர்கள் கொடுத்த நம்பிக்கையின் பேரில் காத்திருந்தனர் குடும்பத்தினர். பிரைன் ஸ்டெம் அடி வாங்கி இருந்ததால் ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்க மாட்டார்.நிச்சயம் தேறி விடுவார் என்று நம்பிக்கை துளிர் விடும் போது அடுத்த நாள் படு மோசமாக போயிருக்கும் நிலைமை.  மாமாவும் , என் தோழியின் கணவரும்,  இரவு பகல் பாராமல் பழியாய் கிடந்தனர் மருத்துவமனையில். சேலத்திலிருந்து பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றினர். ஒரு வாரம் ஆயிற்று. ஹெட் இஞ்சுரி கேஸ்கள் என்ன ஆகும் என்று கணிப்பது மிகவும் கடினம். தலையில் அடிப்பட்டு நன்றாகவே இருப்பவர் திடீரென கோமாவுக்கு போவதும் கோமாவில் இருந்தவர் அடுத்த நாள் எழுந்து உட்கார்ந்து காபி குடிப்பதும் மனித மூளையின் பிடிபடாத ஆச்சர்யங்கள். அவ்வாறு ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டால் நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவரை கடவுளாகவும் , மருத்துவர் யாமறியேன் பராபரமே என வானத்தை நோக்கி கையை தூக்குவதும் சினிமாவில் அல்ல, நிஜத்தில் நிறையவே பார்க்கலாம்.

அதே வாரத்தில்  ஒரு காலை வேளையில் நண்பன் போன் செய்தான் அக்கா போயிடாங்க என்று. ஆக்சிடென்ட்  கேஸ் ஆதலால்  பிரேதப் பரிசோதனை முடித்து உடலைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். மாமா பித்து பிடித்தவர் போல் இருந்தார். சின்ன பையனுக்கு  விவரம் தெரியவில்லை சரியாக. கம்ப்யூட்டரை நோண்டிக் கொண்டிருந்தான். பெரியவன் ஒரு மூலையில் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தான். தோழியின் அண்ணன் வழக்கம் போல எழவுக்கு வந்திருந்து காரியத்துக்கு கூட காத்திராமல் அடுத்த  நாளே கிளம்பிவிட்டான். 
ஒரு வழியாக நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து முடிந்தன. 
மாமாவின் குடும்பம் பெரிய குடும்பம். ஐந்து அண்ணன்கள். இவர் தான் கடைக்குட்டி.மாமாஅண்ணன்கள் குடும்பம் அங்கேயே டேரா போட்டிருந்தன. பதினோராம் நாள் காரியம் முடித்த அடுத்த நாளே மனசாட்சியே இல்லாமல் அவருக்கு மறுமண பேச்சை ஆரம்பித்தனர். 

கொதித்து போய்விட்டனர் தோழியின் அம்மாவும் அவள் கணவரும்.  மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் மாமா.தோழியும் அவள் அம்மாவும் அவர்களோடு சண்டை போட்டு ஒரு வழியாக இந்த டாபிக்கை கைவிட செய்தனர். தோழியின் அம்மா அங்கேயே தங்கி குழந்தைகளை கவனித்து கொண்டார். மூன்று மாதம் கழித்து மறுபடியும் பூதம் கிளம்பியது.  இந்த முறை மாமா ஆரம்பித்தார். 
தோழி அவள் கணவரோடு தன் அக்கா வீட்டிற்கு சென்று மாமாவோடு பேசினார்.  பெரியவன் இப்போது +2.  அவன் படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படி கேட்க, மாமா ஒத்துக்கொள்ளவில்லை. இப்ப கல்யாணம் பண்ணலேன்னா நாளைக்கே நான் செத்து போய்டுவேன் என்ற ரீதியில் பேசவே, தோழியும் அவள் கணவரும் சரி குழந்தைகளை தங்களிடம் கொடுத்துவிடுமாறு கேட்டனர்.  பேச்சு வளர்ந்து வளர்ந்து கடைசியில் கைகலப்பில் முடிய... மாமா தன் இறந்த மனைவியின் சொந்தபந்தங்கள் யாரும் வீட்டு பக்கம் காலடி வைக்க கூடாது என அனைவரையும் விரட்டி அடித்தார். தோழியின் அம்மா மட்டும் தன்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை என குழந்தைகளுக்காக அங்கேயே தங்கி விட்டார்.ஒரு தாய் இல்லாவிட்டால் எப்படியெல்லாம் ஒரு குடும்பம் அலைகழிக்கப்படுகிறது என்பதை பார்த்து அக்கம் பக்கம் இருப்பவர்கள் , அக்காவுடன் பணி புரிந்தவர்கள், நண்பர்கள், தோழிகள் ,மற்ற சொந்தபந்தங்கள் என அனைவரும் பார்த்து நொந்து போகாதவர்களே இல்லை.இந்த நொந்த லிஸ்டில் நானும் சேர்த்தி. தோழிக்கு ஆதரவாய் இருப்பதை தவிர வேறு எந்த ஆணியையும் எந்நாளும் என்னால் கழட்ட முடியாது. 

எனக்கு உள்ள ஆதங்கமே பதினைந்து வருடம் குடும்பம் நடத்திய மனைவிக்கு மாற்று மூன்றே மாதங்களில் ஒரு ஆணுக்கு தேவைப்படுகிறதா? இது கடந்த  ஒரு  வருடத்தில் நான் பார்க்கும் மூன்றாவது நிகழ்வு . இந்த  மாமாவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கே உள்ளது மற்ற இரண்டு ஆண்களும் செய்தது . ஒருவர், மனைவி புற்றுநோயால் இரண்டு வருடம்  படாத பாடுப்பட்டு இறந்த மூன்றாவது மாதம் மேள தாளத்துடன் பத்திரிக்கை அடித்து தடபுடலாக திருமணமே முடித்துவிட்டார். இவர் ரொம்ப வெகுளி,விவரமே பத்தாது என்று பல முறை அவர் மனைவி சொல்ல கேட்டிருக்கிறேன்! மற்றொருவர் மனைவிக்கு  அடிக்கடி தலைவலி என்று டெஸ்ட் செய்யப்போய் மூலையில் கட்டி என்று கண்டறியப்பட்டு, உடனடியாக அறுவைசிகிச்சை செய்த பின் இரண்டு நாட்களில் இறந்துவிடுகிறார். எல்லாம் ஒரே வாரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட, இரண்டாவது மாதம்  ரெஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டார்.  இந்த இருவருக்குமே குழந்தைகள் இல்லாமல் இல்லை. முதலாமவருக்கு கல்லூரியில்  படிக்கும் பையன்,இரண்டாமவருக்கு  பள்ளிக்கு செல்லத் தொடங்கியுள்ள இரண்டு நண்டு சிண்டுகள். இத்தகைய அவசர கல்யாணங்கள் எல்லாம் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளத்தான் என்று சொல்பவர்களை தூக்கிப்போட்டு யோசிக்காமல் சங்கிலேயே மிதிக்கலாம். இவர்களுக்கென்று,  கல்யாணம் ஆனால் போதும் என்று  தள்ளி விடப்படும் பெண்களும்,தோஷம் என்று மணம் தட்டிப்போன முதிர்கன்னிகளும் கிடைக்கிறார்கள் என்பது ஒரு புறமிருக்க இதைப்  போன்ற ஆண்கள் திருமணம் செய்யும் வேகத்தை பார்த்தால் இரண்டு விஷயங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கின்றன. ஒன்று,ஆண்கள் இந்த அளவுக்கா காய்ந்து போய் இருக்கிறார்கள் ? இரண்டாவது, மனைவியின் இடத்தில் வேறொருவரை ஏதோ வீட்டு வேலைக்கு ஆள் மாற்றுவதை போல ஜஸ்ட் லைக் தட் ஏற்றுக்கொள்ளும் திறமை. எல்லா ஆண்களையும் குறை சொல்ல வரவில்லை என்றாலும் இவர்களும் சராசரி குடும்பஸ்தனாக இருந்தவர்கள் தானே! யாரும் மனைவி சீக்கிரம் செத்து போய்விட வேண்டும் என்று வேண்டிக்  கொண்டிருந்த ஆசாமிகளும் அல்ல. சட சடவென தனது தேவைக்கேற்ப வாழ்கையை மாற்றி அமைத்து,அதை உடனுக்குடன் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மனநிலையும் பார்த்து அசந்து போனேன்.

ஒரு இழப்பிலிருந்து மீண்டு வர எவ்வளவு காலம் ஒரு சராசரி மனிதனுக்கு தேவைப்படும்? தெய்வாதீனமாக தப்பிப்பிழைத்த   ஒரு விபத்திலிருந்து மீண்டுவரவே ஒரு மனிதனுக்கு பல மாதங்கள் ஆகிறது. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒன்றாக படுத்து உறங்கி பிள்ளை பெற்று சுக துக்கங்களில் ஆதரவாய் நின்று, ஒரு ஆணின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிற ஒரு பெண்ணின் இழப்பை ஈடு செய்ய மூன்று மாதம் போதுமா? இதில் பெண்ணீயம் ஆணீயம் என்று எந்த ஈயம் பித்தளை பற்றியும் நான் பேசவில்லை. மனைவிகளின் மரணங்களைவிட எனக்கு அவர்கள் கணவர்களின் செயல்களே கடுமையான அதிர்ச்சியை தருகின்றன என்பதையே சொல்ல வருகிறேன்.

பெண்களை புரிந்து கொள்ளவே முடிவதில்லை என்று பல நூற்றாண்டு பழம் பல்லவியை இன்றும் வெள்ளித்திரையில் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களின் இந்த 'adaptive nature ' குறித்து எதிலும் கோடிட்டு கூட காட்டப்படுவதாக தெரியவில்லை.   
 நண்பிகளிடம் இந்த தலைப்பை பற்றி பேசிய பொழுது அவர்கள் தனக்கு தெரிந்த  கதைகளை கூறினார். அதே மனைவி அகால மரணம் கணவர் மூன்றே மாதத்தில் மறுமணம் கதைகள். ஆணோ பெண்ணோ வாழ்க்கைத்துணை இறந்த பின் வேறு துணையே தேட கூடாது, இறந்தவரையே நினைத்து கடைசி வரை உருகி உருகி சாகவேண்டும் என்ற லூசுத்தனமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் ஆண்களின் இந்த மறுமண வேகம் தான் ஆயாசத்தை தருகிறது. 

'கணவனை இழந்தோருக்கு காட்டுவதற்கு இல்'... மனைவியை இழந்தோருக்கு?உடனடியாக இன்னொரு பெண்ணை காட்டினால் போதும் போல! 



Monday 20 January 2014

மாகடிகாரம்




தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் என்ற 'டாக் லைனுடன்' சிறுவர்களுக்கான புத்தகம்.  
தீமன் என்ற பத்து வயது விடலை சிறுவன் தான் கதையின் நாயகன். ஏட்டறிவோடு நின்று விடாமல் கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். தன் குடும்பத்தாருடன் ஏலகிரி மலைக்கு செல்ல, அவனை இருட்டுவதற்குள் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு திரும்பிவிட சொல்லி, மலையில் தனியே உலவ அனுமதிக்கிறார் தீமனின் அப்பா. அங்கு உள்ள ஒரு காட்டில் ஹெர்குலஸ் என்னும் தாத்தாவை சந்திக்கிறான் தீமன்.  அவர் தீமனை ,தான் இவ்வளவு நாளாக தேடிக்கொண்டிருந்த வாரிசாக கருதி மாகடிகாரம் பற்றிய உண்மையை அவனிடம் சொல்கிறார். அடுத்த ஐம்பது வருடங்களுக்கு அதற்கு சாவி கொடுக்க வேண்டிய பொறுப்பையும் அவனிடம் ஒப்படைக்கிறார். மறுநாள் காலையே தீமனை அழைத்துச் செல்ல யூக் என்ற இளைஞன் வருகிறான்.  பெற்றோரிடம் கூட சொல்லாமல் யூக்குடன் நீர்மூழ்கி கப்பலில் பயணிக்கிறான் தீமன். மரியானா ட்ரன்ச் என்ற இடத்திற்கு சென்று மாகடிகாரதிர்க்கு கொடுக்க வேண்டிய சாவியை ஒரு கோட்டையிலிருந்து எடுத்துக்கொண்டு மோன லோ ஆ என்ற இடத்தை சென்றடைகிறான்.  

அங்கு மடாகஸ் என்ற மற்றொரு வெள்ளை தாடி தாத்தாவையும் இன்பா என்ற சிறுவனையும் சந்திக்கிறான். ஹெர்குலசிற்க்கு தீமனைப் போல மடாகசிற்க்கு இன்பா தான் வாரிசு. தீமனை மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை விளக்குகிறார் மடாகஸ். அன்று இரவே யாருக்கும்  தெரியாமல்  யார்  துணையும் இன்றி மாகடிகாரம் இருக்கும் இடத்திற்கு வந்து அதன் செயல்பாட்டை நிறுத்திவிடுகிறான் தீமன் . அடுத்த நாள் டிசம்பர் மாதம் இருபத்தியோராம் நாள், 2012 ஆம் ஆண்டு. உலகம் அழியப்போவதாக மாயன் காலேண்டர் குறித்த நாள். கடிகாரம் நின்று போனால் சுனாமி, பூகம்பம் போன்ற அசம்பாவிதம் உலகில் நிகழும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையை முந்தின நாள் இரவே கடிகாரத்தை நிறுத்தி முறியடிக்கிறான் தீமன். 

கடிகாரத்திற்கும் இயற்கை அசம்பாவிதங்களுக்கும் என்ன அறிவியல் தொடர்பு இருந்து விட முடியும், இந்த கேள்வியை ஏன் இவ்வளவு நாள் யாரும் கேட்கவில்லை என்பதோடு முடிகிறது மாகடிகாரம். அறிவியலுக்கு அடிப்படையே ஏன் எதற்கு எப்படி தானே என்று கதையின்  முடிவில் வரும் ஒற்றை வரியே கதையின் சாராம்சம். என்னை கவர்ந்த வரியும் கூட! 
........................................
அம்புலிமாமா, தெனாலிராமன், விக்கரமாதித்யன், மாயாவி .கோகுலம், பூந்தளிர் இவற்றோடு நின்று விட்டது எனது குழந்தைகளுக்கான சிறுவயது தமிழ் வாசிப்பு.  இது நான் படிக்கும் குழந்தைகளுக்கான முதல் தமிழ் நாவல். குழந்தைகள் வாசிப்பிற்கு ஏற்றார் போல தெளிவான,இயல்பான,எளிமையான நடை. ஆனால் சுலபமாக புரிந்துக்கொள்ள கூடியதா - கதையும் கதைக்களமும் என்பதில் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் டௌட்டு... 

விகடனின் 2013 ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய விருதை வாங்கி இருக்கும் இந்த கதை நான் எதிர் பார்த்த அளவு என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். நான் எழுதியுள்ள இந்த கதையின் சுருக்கம் எப்படி எந்த வித டெஸ்க்ரிப்ஷனும் இல்லாமல் மொட்டையாக உள்ளதோ கதையும் எனக்கு அப்படி தட்டையாக உள்ளாதாகவே பட்டது.எந்த ஒரு திருப்பமோ வளைவோ இல்லாத சென்னை பெங்களூரு ஹைவே போல ஒரே சீராக நேராக பயணிக்கிறது. . மரியானா  ட்ரன்ச் ,மோன  லோஆ , நீர் மூழ்கி கப்பல் போன்ற அறிவியல்/ பொது அறிவு சார்ந்த செய்திகள் இருந்தாலும் ஏனோ ஏலகிரி மலையை ஜப்பான் அருகிலிருக்கும் மரியானா  ட்ரன்ச்சோடு   இணைத்துப் பார்க்க முடியவில்லை. கதை நெடுக கற்பனை வறட்சி. குழந்தைகளுக்கு என்று எழுதும் போது அவர்களுடைய கற்பனைக்கு தீனி  போடுவது மிகவும் அவசியம். அது சாதாரண விஷயமும் அல்ல. ஒரு தீவைப் பற்றி விவரிக்கும் போதோ ஒரு ஆழ் கடல் பயணத்தைப் பற்றி சொல்லும் போதோ ஒரு எழுத்தாளரின் கற்பனைக்கு எவ்வளவு வேலை இருக்க வேண்டும்? நம்மை அந்த உலகத்துக்கே அழைத்து சென்றிட வேண்டாமா? நாமே கற்பனை செய்து படிப்பதற்கு கூட நல்ல கதை களம் இருந்த போதும் அதை விவரிக்கவோ வர்ணிக்கவோ இல்லை கதாசிரியர். ஒருவேளை குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்க வேண்டுமோ?கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு இன்னும் நல்ல அறிமுகம் கொடுத்திருந்தால் ஒன்றி படித்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை.  ஒரு புத்தகத்தை ஒன்றிப் போய் வாசித்தால் எனக்கு அந்த கதையிலிருந்து வெளியே வரவே சில நாட்கள் ஆகும்.படித்து முடித்த பின்னும் மனதுக்குள் ரீ டெலிகாஸ்ட் மாதிரி கதை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த கதையை படித்து முடித்து கதை சுருக்கம் எழுதும் போதே மறுபடி புத்தகத்தை எடுத்து ஒரு முறை பார்த்தேன். அவ்வளவு தான் என் மனதில் பதிந்திருந்தது. 


குழந்தைகளுக்கு தெரியாத சில முக்கிய இடங்களின் பெயர்களை சொல்வதற்கென்றே இந்த கதை எழுதப்பட்டது போன்ற உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை. இப்படி எழுதினால் தான் குழந்தைகளுக்கு வாசிக்க முடியும் என்ற ஏதாவது வரையறைக்குட்பட்டு  எழுதப்பட்டதா இந்த மாகடிகாரம் ? தெரிந்தவர்கள்  புரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். 
விகடன் விருது தவிர்த்து, பேஸ் புக்கில் ஆளாளுக்கு கொடுத்த லிஸ்டில் இந்த புத்தகத்தை நிறைய பேர் சிபாரிசு செய்திருந்தனர். விழியன் மேலும் பல குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். நான் அவற்றையும் படிக்க முடிவெடுத்துள்ளேன். குழந்தைகளுக்கான இலக்கியம் இப்படி தான் இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள ஆவல். எனக்கு இதை போன்ற வேறு யாரவது எழுதிய குழந்தை இலக்கியங்கள் தெரிந்தால் பரிந்துரை செய்யவும்.  




Monday 13 January 2014

பொங்கல் போனஸ்.




இத்தனை  காலமாய் சென்னையிலேயே இருந்தாலும் ஒரு முறை கூட சென்னை உயர்நீதி மன்றத்தின் உள்ளே சென்றதில்லை.  அதன் அழகை வெளியில் இருந்து ரசித்ததோடு சரி. அண்மையில் ஒரு வழக்கு விஷயமாக உயர்நீதி மன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியது. 

இது அரசுப்பணி பதவி உயர்வு குறித்த வழக்கு. சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு பெரிய குளிரூட்டப்பட்ட அறையில் நடந்தது . மிக அழகான வேலைப்பாடமைந்த உயரமான கூரை. சுமார் பத்தடி உயரத்தில் நீதிபதி அமரும் இருக்கை. டர்கி டவல் எல்லாம் போட்டு வைத்திருந்தார்கள் மெத்துமெத்தென்று. நீதிபதி இருக்கைக்கு பின்னே உள்ள சுவர் முழுக்க வண்ணமயமான கண்ணாடி. அதன் மேல்  சூரிய ஒளி படும் போது இன்னும் அழகாக ஒளிர்ந்தது கலர் கண்ணாடி. அந்த காலத்திய வேலைப்பாடமைந்த பெரிய பெரிய மர நாற்காலிகள் இன்றைய வார்னிஷுடன் பளபளத்தன. அந்த உயரமான கூரையிலிருந்து நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை  பெயிண்ட்  அடித்த பழைய மின்விசிறிகளையும் ஏசி பத்தாது என்று  சுழலவிட்டிருந்தார்கள். மின்விசிறி கூட ஒழுங்காக ஓடாத கோர்ட்டை பார்த்திருந்த  எனக்கு இது ஒரு 'சொபிஸ்டிகெடெட்' வொர்கிங் அட்மாஸ்பியராக  பட்டது.'உயர்' நீதி மன்றம் அல்லவா! 

நீதிமன்றத்துக்கு போனது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு ஸ்டே  வாங்குவதற்கு .சிலரின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப் போகும் வழக்கு.  மனதில்  இருந்த கலவரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்  இத்தனையும் பார்த்து ரசித்துக்  கொண்டிருந்தேன் . 
அன்று சுபமுகூர்த்த தினமாக ஏதோ வழக்கறிஞர்கள் வேலைக்கு வராமல் போராட்டம் வேறு- அதாவது கறுப்பி அங்கி அணிந்து வாதிடமாட்டார்கள் என்று சொன்னார்கள். இன்று  வழக்கு நடக்கா விட்டால் எங்கள் நிலைமை  ரொம்பவே கவலைக்கிடம்.நம்ம ராசில தான் எப்பவுமே சனி பகவான் கல்லாச கலசலா பாட்டுக்கு சிம்புவுக்கு இணையாக தரையில் படுத்து படுத்து எழுந்து குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்ததால் எல்லா விஷயங்களுமே கடைசி நேரத்தில் கழுத்தை நெரிப்பவையாகவே இருந்தன.

இந்த போராட்டத்தை சாக்கு சொல்லி எங்கள் வக்கீல் அவர் வராமல் அவரது ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார். அந்த வக்கீலம்மாவோ செத்தவன் கையில வெத்தல பாக்கு குடுத்த மாதிரியே  ஜீவனே இல்லாமல்  எங்கள் கேஸ் கட்டை கையில் வைத்திருந்தது. நேர்ந்து விட்ட ஆடு மஞ்சள் தண்ணிக்கு சிலிர்ப்பதைப் போல திடீர் திடீரென விழித்துக் கொண்டு எங்களை கேள்வி கேட்டார். அந்த அம்மாவை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கி ஏந்திரு அஞ்சலி  ஏந்திரு என்று கத்தினாலும் பெரிய ரியாக்ஷன் எதிர்பார்க்க முடியாது  போல் தோன்ற அவரோடு  பேசவே எரிச்சலாக இருந்தது. 

'எப்போ மேடம் கேஸ் ஆரம்பிப்பாங்க?'என்று வெள்ளந்தியாக எங்க அஞ்சலி பாப்பாவிடம் கேட்டுத் தொலைக்க , 'நடந்துட்டு தான் மேடம் இருக்கு, நமக்கு முன்னாடி இன்னும்  ஏழெட்டு ஐட்டம் தான்'  என்று அவர் சொன்ன பிறகு தான்  நீதிபதியை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.
(சட்டத்தில் ஐட்டம், ப்ரேயர், கேஸ் என்பதற்கெல்லாம் சரியான முறையான அர்த்தம் உண்டு ). 
 'இட்ஸ் கிவென் இன் பேஜ் செவென் பாரா டூ மை லார்ட் ' என்று ஒரு பக்கம் சத்தம் வர, எதிர் தரப்பு 'பேஜ் த்ரீ லாஸ்ட் லைன் மை லார்ட்' என்று சொல்ல... ஜட்ஜ் எந்த பக்கத்தையும் திருப்பாமல் மசூதியில் பாடம் செய்பவரைப் போல  ஏதோ முணுமுணுத்தபடி கேஸ் கட்டை கீழிருக்கும் அம்மாவிடம் கொடுத்து விடுகிறார். அம்புட்டுத்தேன்.
ஒவ்வொவொரு கேசுக்கும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள். இரு தரப்பு வக்கீல்களும் அன்று கேஸ் முடிந்து விட்டாதாக கிளம்பி விடுகிறார்கள். 

ஒரு பக்கம் ஏதோ ஒரு வழக்கு நடக்க அதை சட்டையே செய்யாமல் காமா சோமாவென வக்கீல்கள் கும்பலாக நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.நீதிபதி பேசுவது சுத்தமாக கேட்க வில்லை.  சர்வீஸ் வழக்குகள் பலருடைய வாழ்கையை நிர்ணயிப்பவை. அரசு பணியில் தவறாக மாற்றலானவர்கள், நியாயமாக வரவேண்டிய பதவி உயர்வை பெற முடியாதவர்கள்,உத்தியோகத்தை இழந்தவர்கள்,டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் ... என அரசுப் பணியில்  நியாயம்  தேடி வரும் வழக்குகளை, எத்தனையோ குறைகளை நிவர்த்தி செய்து நீதி கிடைக்கச் செய்யும் இடமாகவே நான் அறிந்துள்ளேன். ஆனால் இங்கு நடப்பவை அனைத்தும்  என் அறிவுக்கு எட்டிய  வரை அந்த எண்ணத்தை ப்ரீத்தி மிக்சியை விட வேகமாக தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்தன. 
எங்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
நிச்சயம் நான் சினிமாவில் இருப்பதைப் போன்ற ஒரு செட்-அப்பை எதிர்பார்த்து நீதி மன்றத்துக்கு வரவில்லை.  ஆனால் பேசும்படம் போல் ஒரு ஸ்க்ரீன்ப்ளேயை கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இதைப் போன்ற சர்வீஸ் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒரு நாளைக்கு 150 நடக்குமாம். கேட்கவே உச்சி குளிர்ந்தது. ஒரு மனிதரால் எப்படி ஒரு நாளைக்கு 150விதவிதமான வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க முடியும்? முந்தைய நாளே சம்மந்தப்பட்ட   பார்ட்டியை 'பார்த்திருந்தாலும்'  வழக்கை பற்றி வாசித்து இருந்தாலும்  ஞாபகம் இருக்குமா, தீர்ப்பை முன்பே தீர்மானிக்காமல் இருந்தால்? ஸ்டே வாங்குவதர்க்கெல்லாம் நீதிபதியை ''தெரிந்திருந்தால்'' போதும், வாதிட ஏதும் கிடையாது  என்பது சட்ட உலகில் உலவும் ஒரு பொதுவான கருத்து. என்ன கண்றாவியோ திருப்பதியில் லட்டுக்கு பதிலாக ஜாங்கிரி தரப் போகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. 

இவ்வளவு பெரிய அறையில் ஏன் (நீதிபதிக்கு மட்டுமாவது )ஒரு மைக் வைக்க கூடாதா? நீதிபதியும் வக்கீல்களும் என்ன பேசுகிறார்கள் என்று எவ்வளவு அருகில் போய் நின்றும் தெளிவாக காதில் விழவில்லை.நானாகவே நிறைய அனுமானித்து ஃபில் இன் தி ப்லான்க்ஸ் செய்துக்கொண்டிருந்தேன். சரி நமக்கு தான் ரெண்டு ஸ்பீக்கரும்  அவுட் போல என்று எனக்கு நானே சமாதானம் செய்துக்கொண்டிருக்கையில் திடீரென எனக்கு தெரிந்த பெயர்களாக வாசிக்கப்பட... அட நம்ம கேஸு! எங்கள் அஞ்சலி பாப்பா  சடாரென விழித்துக்கொண்டு ஏதோ சொல்ல நீதிபதி ,இப்படி ஒரு ஜீவன் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருப்பதை கவனிக்க கூட இல்லை! எதிர் தரப்பு வக்கீல் பேசியதையும் சரியாக கேட்டதாக தெரியவில்லை. மற்ற எல்லா கேஸ்களைப்  போலவே முன்பே முடிவு செய்திருந்த தீர்ப்பை வழங்கி சாரி முனகி கேஸ் கட்டை தூக்கிப் போட்டார். 

மற்ற வழக்குகளைப் கவனித்த  பொழுதே ஓரளவு எனக்கு எங்கள் தீர்ப்பு தெரிந்திருந்தது. அதற்காக பெரிய ஏமாற்றம் எல்லாம் இல்லை என சப்பைக்கட்டு கட்டமுடியாது.நொறுங்கிப் போய் தான் வெளியே வந்தோம். அந்த இரண்டு நிமிடங்கள் எங்கள் வாழ்கையையே புரட்டி போட போவதன் தீவிரத்தை உணர நீண்ட நேரம் ஆனது. இந்த வழக்கிற்காக செலவிட்ட கிட்டத்தட்ட ஒன்றரை வருட உழைப்பின் பலனை இரண்டே நிமிடங்களில் இழந்துவிட்டிருந்தோம்.நீதி மன்ற அறைக்குள் இல்லாமல் போயிருந்தது நியாயத் தராசை  ஏந்திய நீதிதேவதை சிலையும் , காந்தி புகைப்படமும் மட்டும் அல்ல(ஆமா ஏன் இல்ல? சினிமால இருக்கே..)  என்பதை ஏற்றுக்கொள்ள தடுமாறிக்கொண்டிருந்தோம்.  

அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை சாமானியர்கள் சிலர் தடுத்த நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கும் பொழுது 'என்ன காரணத்திற்காக நிறுத்த சொல்கிறீர்கள்?'என்ற அடிப்படை கேள்வி கூட  எழவில்லை நீதிபதியிடமிருந்து! பதவி, அதிகாரம்,பணத்திற்கு முன்னால் சாமானியனுக்கும் நீதிக்கும் சம்பந்தமே இல்லை. அரசுக்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளும், போடப்படும் வழக்குகளும் வெற்றி அடைந்ததாக சொல்லப்படும் ஒற்றைப்படை சதவிகித புள்ளிவிவரம் எந்த காலத்திலும் மாறாது போல.  சரி,அதற்காக வாழ்கை அப்படியே நின்று விடுவதில்லையே! நமக்கு பிடிக்க வில்லை என்றாலும் நம்மை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் அடுத்த நாளில் விட்டுவிடுகிறது  பாழாய்ப்போன காலம்! 

நடக்க  கூடாது என்று நினைத்த கலந்தாய்வும் மறுநாள் நடந்தேற நமக்கு ஆப்பு தலை  வாழை இலையில் படையல் போட்டு ஐஸ் கிரீம் டெஸ்ஸர்ட்டோடு பரிமாறப்பட்டது. அரசுப்பணியை பொறுத்த வரை ஆப்பை கூட இளித்துக்கொண்டே வாங்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஆப்பு கூட கிடைக்காது. காலி சட்டியும் அகப்பையும் மட்டும் கொடுத்து ருசியாக சமைக்க சொல்லுவார்கள் இல்லையேல்  உயர் அதிகாரிகள் நாம் உயிரோடு இருக்கும் போதே  நம்மை மார்ச்சுவரிக்கு அனுப்பி விடுவார்கள்!  

பொங்கலுக்கு இப்படி ஒரு போனஸ்! சரி நடப்பது நடக்கட்டும்.... 

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!