Monday 29 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்... தொடர்ச்சி - 2

மக்கள் சிறுதானியத்திற்கு மாற யோசிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். 

ஒன்று சுவை. அடுத்து விலை.

சுவையை பொறுத்தமட்டில் அரிசியை உபயோகிக்கும் அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களை சப்ஸ்டியூட் செய்யலாம். சுவையில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. மாற்றம் தெரிந்தாலுமே அதை பழகிக்கொள்வதில் தவறேதும் இல்லை. 

சிறுதானியத்தை சோறாகத் தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரவை, சேமியா, மாவு என எல்லா வடிவங்களிலும் சிறுதானியங்கள் கிடைக்கின்றன. அன்றாடம் உண்ணக்கூடிய இட்லி, தோசை, ரொட்டி , உப்புமா, பொங்கல் , அடை, வடை ,பனியாரம், இடியாப்பம், புலவ்  என எல்லாவற்றையும் இந்த சிறுதானியங்களில் செய்யலாம். இதற்காக ஏகப்பட்ட ரெஸிபி புத்தகங்களும் கிடைக்கின்றன. அவற்றை விரும்பி சாப்பிடுவதற்கு நம் வயனமான நாக்கை காட்டிலும் நம் மனநிலையே முக்கியம். 

அடுத்து விலை.

 நமக்கு நன்கு  பரிச்சயமான கேழ்வரகு, கம்பு ஆகியவை குறைந்த விலையில் தான் கிடைக்கின்றன. புதிதாக மார்கெட்டை பிடித்திருக்கும் மற்ற சிறுதானியங்கள் தான் ஏகத்துக்கு விலை. கிலோ 120 ரூபாய்  என்பது ரொம்பவே அதிகம். அரசாக பார்த்து சாதாரண வெள்ளை அரிசி, கோதுமை போல இந்த சிறுதானியங்களை பல்பொருள் அங்காடிகளில் விநியோகம் செய்ய ஆரம்பித்தால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது. 

உலகிலேயே இந்தியா தான் இந்த தானியங்கள் (major & minor millets) உற்பத்தியில் முதலிடம் என்பது ஆச்சர்யமான விஷயம். எழுபதுகளில் ஸ்டேபில் (staple) டயட்டாகவே இருந்த சிறுதானியங்கள், 2000 மாவது ஆண்டில் கிட்டதட்ட 75% குறைந்து விட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. 2005 ம் ஆண்டு முதல் இவை பெரும்பாலும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகவே (fodder) மாறிவிட்டது. 

நம் ஊரில் மனிதர்கள் இந்த தானியங்களை சீண்டுவதே இல்லையா என்று கவலை கொள்ள வேண்டாம். ஆல்கஹால் (மது) உற்பத்தியில் இவை பயன்படுகின்றன. மில்லட் பீர் நேபால், ஜப்பான்,ஆப்பிரிக்கா,இந்தியா நாடுகளில் டோங்பா(tongpa), அஜோனோ(ajono), ரக்‌ஷி, போஸோ (bozo ) என வெவ்வேறு பெயர்களில் பிரசித்தம். 

சரி இங்கே விளையும் தானியங்கள் அனைத்தும் என்ன தான் ஆகின்றன? வழக்கம் போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் , உற்பத்தி செய்யப்படும் நாட்டிலேயே கொள்ளை விலை போவது புதிய விஷயம் அல்ல . இங்கே அவற்றுக்கான சந்தை இல்லாத போது வேறு என்ன செய்ய முடியும் ? இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் நம் நாட்டில் இந்த தானியங்களின் உபயோகத்தை அதிகரிக்க 'விலைக் குறைப்பு' என்ற அத்தியாவசிய தேவை தவிர மற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக வழக்கமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

எளிதில் கிடைக்கக் கூடிய/ கிடைக்க வேண்டிய பொருள்களே நான்கு குட்டி கர்ணம் அடித்து, வராத சாகசங்களை எல்லாம் செய்து காட்டினால்  தான் சாமானிய மனிதனுக்கு கிட்டுகிறது (உ.த. எல் பி ஜி சிலிண்டர்).  சுலபமாக சல்லிசாக கிடைக்க கூடிய தானியங்கள்களை சந்தைப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளுமா? செய்தால் நன்றாகத் தானிருக்கும். அரசு இந்த வகை தானியங்களை விநியோகிக்க முன் வரும் நிலையில், இதனை எவ்வளவு பேர் அரசு பல்பொருள் அங்காடிகளில் வாங்க முன் வருவர்?

இன்று சிறுதானிய உணவு ஒரு வகையான லக்‌ஷுரி உணவாகவே பார்க்கப்படுவது வருந்தத்தக்க விஷயம்.  'ப்ரௌன் ரைஸ்' சாப்பிடுவதையே மட்டமாக நினைப்பவர்கள் நம்மிடையே இருக்கதானே செய்கிறார்கள். அரிசி சோறு சாப்பிடுவதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைத்த/ நினைக்கும் தலைமுறை நாம்.

சில யோசனைகள்...

பள்ளியில் பாட திட்டத்தில் சிறுதானியங்கள்  பற்றி சேர்த்து குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவற்றின் அருமை பெருமையை புரிய வைக்கலாம். 

பண்டிகை கொண்டாட்டங்களில், கோவில்களில் நிறைய பயன்படுத்தலாம். 

தரம் குறைந்த அரிசியை உபயோகிப்பதாக வரும் சத்துணவு புகார்களுக்கு சிறுதானியங்கள் மூலம் பதில் தரலாம். 

அதே இட்லி தோசை பனியாரத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புதிது புதிதாக சமைக்கும் முறைகளை கண்டறியலாம். 

இது போன்ற ஏதாவது புது ஐடியாக்களை இப்போதே செயல்படுத்த ஆரம்பித்தால் கூட சிறுதானிய உணவு மாற்றம் அடுத்த தலைமுறையில் நிச்சயம் சாத்தியப்படலாம். 

சிறுதானிய உணவு முறைக்கு மாறுவது ஒன்றும் தலைகீழாக நின்று தண்ணி குடிக்கும் சாசகசமல்ல.சைனீஸ் ஃப்ரைடு ரைஸையும் நூடுல்ஸையும் எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணத் தெரிந்த நமக்கு சத்துள்ள இந்த சிறுதானிய சுவையை பழகுவதிலும் சிரமம் இருக்காது. 

முயற்சி செய்வோம். 

Monday 22 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்...


சீரில்ஸ் என்ற பெயரில் நமக்கு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், ம்யுஸ்லி (muesli)  பரிச்சயமான அளவு  சமீபகாலங்கள் வரை சிறுதானியங்களின் பெயர்கள் கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. 

மொத்தம் ஏழு சிறுதானியங்கள்
(லிட்டில் மில்லெட்) . வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் (மக்கா சோளம் அல்ல), கேழ்வரகு. இதில் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் எல்லாம் சிறு வயதிலிருந்தே ஓரளவு பரிச்சயம்.  மீதமுள்ள நான்கும் சமீபத்தில் தெரிந்து கொண்ட பெயர்கள். 

இந்த சிறுதானியங்கள் வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை வெளிர் பச்சை, மஞ்சள் , ப்ரவுன் என பல கலர்களில் இருந்தாலும் பாலிஷ் செய்யப்பட்டு கடைகளில் வைக்கப்பபட்டிருக்கும் பாக்கெட்டுகளில் எல்லாம் உருண்டை உருண்டயாக ஹோமியோபதி குளிகை மாதிரியே இருக்கின்றன.ஹோமியோபதி மருந்தை பார்த்திராதவர்கள் பாலிஷ் செய்யப்படாத ஜவ்வரிசியின் மினியேச்சர் சைஸை கம்பேர் செய்துக் கொள்ளலாம். 

அதனால் சிறுதானியங்களை பாக்கெட்டுகளில் போடப்பட்டுள்ள பெயரை வைத்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது.பெயரை மாற்றி ஒட்டி வைத்திருந்தால் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். இவை பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவையிலும் ஒரே மாதிரி தான்.  கம்பு , கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் தனித்துவமான சுவையை போல மற்ற சிறுதானியங்களுக்கு ப்ரத்யேக சுவை என எதுவும் உணர முடிவதில்லை. 

கேழ்வரகு,கம்பங் கூழ் தவிர்த்து வேறு எதையும் நாம் இது நாள் வரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதுமே கூட சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று எதையாவது சொல்லி பயமுறுத்தி தான் ஓட்ஸின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நம் கவனத்தை சிறுதானியங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சக்கரை நோயாளிகள் மட்டுமில்லாது பொடென்ஷிடயல் டயாபிடிக் லிஸ்ட்டில் வருபவர்களும் இந்த வகை உணவுகளுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

பல் துலக்கும் பேஸ்டில் ஆரம்பித்து இரவு உபயோகிக்கும் கொசுவத்தி வரை உலகமயமாக்கலின் தாக்கத்தை எல்லா நிலைகளிலும் உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்ம ஊர் மக்கா சோளத்தை விட்டு விட்டு குழந்தைகளுக்கே அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் தானே வாங்கித் தருகிறோம்? எதற்கு மவுசு அதிகமோ அதற்கு விலையும் அதிகமாக இருப்பது ஆச்சர்யமில்லை. கிலோ நாற்பது ரூபாய்க்கு அரிசி வாங்குவதை தவிர்த்து கிலோ நூற்றியிருபது ரூபாய்க்கு விற்கப்படும் வரகு, சாமை, தினையை எவ்வளவு பேர் வாங்கி சாப்பிட முடியும்? அந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்த உணவை இன்று எங்கேயோ தூக்கி வைத்துள்ளோம்! ஆர்கானிக் ஸ்டோர் என்ற பெயரில் தனியே கொள்ளையடிக்க விட்டுவிட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறோம். நம்முடைய சிறுதானியங்களை கண்டுகொள்ளாமல் ஓட்ஸின் பின்னால் அலைந்ததற்கான விலையே இந்த நூற்றியிருபது ரூபாய். 

என் அப்பா காலத்தில் இது போன்ற சிறுதானிய உணவை தாத்தாவின் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் தான் சாப்பிடுவார்களாம். அதாவது அரிசி சோறு பொங்கி சாப்பிட வசதி இல்லாதவர்கள்.என்றைக்காவது ஒரு நாள் பாட்டி வரகு அரிசியிலோ சாமை சோறோ பிள்ளைகளுக்கு வடித்துப் போட்டால் தாத்தா பாட்டியை அடிக்கவே வந்து விடுவாராம். இன்று அப்பாவிடம் வரகரிசி சாதம் , தினை இட்லி , குதிரைவாலி தோசை , சாமை பொங்கல் என்று ஏதோ புது ரெஸ்பி கண்டுபிடித்துவிட்ட களிப்பில் சிலாகித்தால் அப்பா அவருடைய அந்த கால கதையை சொல்லி சிரிக்கிறார். 




Thursday 18 December 2014

என்னமோ போங்க!



என்னமோ போங்க! 


நம் ஊரில் வீடு வேலை செய்பவர்,குழந்தை பார்த்துகொள்கிறவர்கள் , சமையல் செய்வோர் ஆகியோரை பெரிதும் நம்பியே வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை நகர்கிறது. எல்லா வேலைகளையும் தானே செய்தாலும் கூட கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த காலத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது  ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.  

வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த பிரச்னையை சந்தித்திருப்பீர்கள்  என்றே நம்புகிறேன். ஊருக்குச்  செல்லும் வேலைசெய்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவது. ஊருக்கு போகும்  போது நன்றாகவே பேசிவிட்டு செல்பவர்கள் ஊருக்கு போன பின் நம்மை சுத்தலில் விட்டு விடுகிறார்கள். நிச்சயமாக சொன்ன தேதியில் கிளம்பி வர மாட்டார்கள். நாம் போன் செய்தால் பெரும்பாலும் சுவிட்ச் ஆப் என்றே வரும்.அப்படியே தவறி போன் எடுத்து பேசினாலும் இது வரை கேள்வியே பட்டிராத அவங்க  ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தங்கச்சியோட மச்சினனுக்கு கையில நகசுத்தி, ஆபரேஷன் பண்ணனும் என்பார்கள். நமக்கோ ஆபீசில் போட்ட லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியாத நிலைமையா  இருக்கும்.அப்போது  தான் வேலையிடத்தில்  எக்ஸாம் வரும்,மினிஸ்டர் வருவார், ஹெல்த் செக்ரட்டரி திடீர் விசிட் அடிப்பார் , இன்ஸ்பெக்ஷன்  வரும், மாதாந்திர கிளினிகல் மீட்டிங் வரும்... கட்டாயம் வந்துடறேனு சொல்லிட்டு போன வேலையாள் தவிர மற்ற எல்லோரும் கும்மி கொட்டிக்கொண்டே ஒரு சேர வந்து நிற்பார்கள்.  

மேலதிகாரியிடம் லீவ் கேட்கவும் தர்மசங்கடம்.யார் என்றே தெரியாத ஒருவரின் நகசுத்து  எனக்கே வந்திருந்தால் தேவலை போல தோன்றும். 
சரி எப்போ தான் வருவீங்க என்று கேட்டால் இதோ நாளைக்கு ,இன்னும் ரெண்டு நாள் ,இன்னும் நாலு நாள்...இப்படி வரையறை இல்லாமல் நீண்டு கொண்டே போகும் அவர்களின் லீவும் வேலையிடத்தில் சகட்டு மேனிக்கு லீவ் எடுக்கும் எனது கிரைம் ரேட்டும்.வேலையாள் வரும் வரை சூர்யாவின் அவள் வருவாளா தான் எங்க பேமிலி சாங்.டெய்லி ஒரு முறையாவது பாடிவிடுவோம். 

வேலைக்கும் செல்ல முடியாமல், முழுமனதோடு வீட்டிலும் ஒன்றி வேலை செய்ய முடியாமல்,வேலைக்கு வேற ஆள் தேடலாமா இல்லை  நானே வேலையை விட்டுவிடலாமா என்று போராட்டமாக இருக்கும் போது போன் வரும் வேலைக்காரியிடமிருந்து .லவ் பண்ணும் போது அவர் நம்பர் பார்த்து கூட இவ்வளவு குஷியாகி இருக்குமா மனது தெரியவில்லை! வேலையாள் ஒரு சிறிய தயக்கம் கூட இல்லாமல் ,' யக்கா நான் இனிமேல் வேலைக்கு வரலைக்கா ' என்பாள். இன்று வருவாள் நாளை வந்து விடுவாள் என்று நம்பி இருந்துவிட்டு வரவே மாட்டாள் என்பதை ஜீரணிக்க எத்தனை பாட்டில் ஜெலுசில் தேவைப்படும் என்றே புரியாமல் குழம்பி நின்ற தருணங்கள் கணக்கே இல்லை!  தான் வேறு இடம் பார்த்துவிட்டதாக படு கேஷுவலாக சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். 

வீட்டில் உள்ளவர் சொல்லும் சமாதானம், பரவயில்லையே சொல்லிட்டு தான நின்னுச்சி   என்பதே. இதை முன்பே சொல்லி இருந்தால் லீவில் இருந்த போதே வேறு ஆளையாவது தேடி இருப்பேனே என்று அங்கலாய்ப்பாக இருக்கும். வெளியில் இருந்து பார்ப்போருக்கு ( பல நேரம் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கே கூட)இது ஒரு மேட்டரா    என்று தோன்றும். புது ஆளை தேடிப்பிடித்து , நமக்கு ஏற்றார் போல டியூன் செய்வது லேசான வேலை அல்ல. குழந்தையைப் பார்த்துக் கொள்பவரை குழந்தைக்கும் வேறு பிடிக்க வேண்டும்! 

நமது தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைப்பது பெண் தேடுவதை விட சிரமமான  ஒன்று.ஏஜென்சி மூலம் தேடிச் சலித்துவிட்டேன் . பெரும்பாலான ஏஜென்சிகள் ப்ராத்தல் நடத்தும் இடங்களைப்  போலவே உள்ளன. அதுவும் நடக்குமோ என்னவோ யார் கண்டா! இத்தனைக்கும் ஏஜென்சியின் நம்பர் மற்றும் அட்ரஸ் பெருமைமிக்க JUS DIAL லில் வாங்கியது. ஒரு மட்டமான தெருவில் ஏஜென்சி என்று எந்தவித போர்டும் இல்லாத ஒரு அரதப்பழசான வீட்டின் மாடியில் ஒரு குறுகலான அறையில் வரிசையாக லேடீஸ் எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். நாம் அவர்களில் யார் வேண்டுமோ செலக்ட் செய்து கொள்ளலாம். எனக்கு கமல்ஹாசன் படங்களில்  பார்த்த பலப்பல காட்சிகள் மண்டைக்குள் ஓடும்.ஒன்றிரண்டு இடங்களை  பார்த்த(!) பின்பு ஏஜென்சிகளுக்கு நேரில் செல்வதையே விட்டு விட்டேன்.

இதனால் கண்ட சிக்கல்களும் பல. அட்ரஸ் கொடுத்து விட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்பி வைப்பார்கள்.ஒரு முறை அது போல சமையலுக்கு ஒரு ஆள் வந்தது.35 வயது அம்மா என்று சொல்லியிருந்தார்கள். நேரில் பார்த்த போது பகீரென்றது.  ஒரு 55வயது சொல்லலாம் . ஆயா என்பதே சரி.வயதானவர்களை எப்போதுமே வேலைக்கு வைத்ததில்லை. ஏஜென்சிக்கு போன் போட்டு திட்டினேன். ஆள் இல்லை மேடம் அதுவரைக்கும் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்க என்றார்கள். வேற வழி? 

ஆயா கேஸ் அடுப்பில் சமைத்ததில்லையாம்.மற்றபடி எல்லா வகை சமையலும் தெரியுமாம்.எந்த அடுப்பில் எல்லா சமையலும் பழகி இருக்கும் ஆயா என்ற யோசனை வராமல் இல்லை. ஒரு மாதம் ஆளில்லாமல் கஷ்டப்பட்டதற்கு வந்திருந்த ஆயா மல்லிகா பத்ரிநாத் போலவே தெரிந்தார் எனக்கு!ஒரு வேளை தந்தூரி, க்ரில்ட் ஐடம்ஸ் மட்டும் செய்யுமோ ஆயா  என்று நினைத்துக்கொண்டே  முதல் நாள் அடுப்பை பற்ற வைக்க செய்ய சொல்லி கொடுத்து நானே சமைத்தும் வைத்தேன். எல்லாம் புரிந்ததாக மண்டைய மண்டைய ஆட்டினார் ஆயா. அடுத்த நாள் காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம்.நாங்கள் கிளம்பும் போது ஆயா ஒரு கேள்வி கேட்டது. ஏம்மா அந்த அடுப்பு அணையலேனா  தண்ணி தெளிச்சு அணைசிக்கலாமா? வாயே திறக்கவில்லை நான்.  லீவ் போட்டு  வீட்டிலேயே உட்கார்ந்து விட்டேன். 
ஏஜென்சி கதை இப்படி! 

தற்போது அடுத்து வேலையாள் தேடும் படலம் இனிதே ஆரம்பமாகி உள்ளது.தெரிந்தவர் அறிந்தவர் புரிந்தவர் மற்றும் பல வர்கள் மூலம் ஆள் தேட ஆரம்பித்துள்ளேன்.வேலைக்கு ஆள் தேடி அலைந்து அலைந்து, வேலைக்கரர்களோடு  எனக்கு இருக்கும் அனுபவத்தை கணக்கில் கொண்டு  டாக்டர் தொழிலை விட்டு விட்டு ஒரு மேன் பவர்  ஏஜென்சி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும். வேலைக்கு விருப்பமுள்ளோர் உங்கள் ரெசுமே கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

vaippome_ aappu@ yakov . co.in


Aruna😊

Monday 15 December 2014

என்ன சாப்பிடுகிறோம் -2

GI பற்றிக் கொஞ்சம் இன்னும் சமாச்சாரம்....

GI குறைவாக உள்ள உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீரமைக்க உதவுவதுடன், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய கோளாறுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகளை குறைப்பதாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளில் சொல்லப்படுகின்றன. புரத சத்து, கொழுப்பு சத்து, நார் சத்து, முழு தானியங்கள், பயிறு வகைகள், பழங்கள், காய்கறிகள் என GI குறைவாக உள்ள ஏராளமான உணவுகள் சடுதியில் ஜீரணம் அடையாது. அதாவது நீண்ட நேரம் நம்மால் பசியை தாக்குப்பிடிக்க முடியும். அதிக GI உள்ள உணவு வகைகள் இதற்கு நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் குறைந்த GI உள்ள உணவுகளின் பங்கு கேள்விக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. 
ஏனெனில் ஒரு உணவுப் பொருளின் GI அதைப் பதப்படுத்தும் முறை, சமைக்கும் முறை, அதனோடு சேர்த்து சமைத்து , பரிமாறப்படும் மற்ற உணவுகள் போன்ற வெவ்வேறு காரணிகளை சார்ந்துள்ளது. 

GI என்பதே அவசியமற்ற ஒன்று, அது சர்க்கரை நோயாளிக்களுக்கு மட்டும் தான் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.GI யை மட்டும் கணக்கில் கொண்டு சாப்பிடுவதனால் உடலுக்குத் தேவையான மற்ற அத்தியாவசிய சத்துக்களை நாம் இழக்கிறோம் என ஒரு கோஷ்டி கூவிக்கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் அதற்கான மாற்றுக் கருத்தையும் ஆராய்ந்து பார்ப்பதே புத்திசாலித்தனம். யாராவது ஒரு சாரார் சொல்லுவதை அப்படியே நம்பிக் கொண்டு வண்டிமாடு போல ஒரே தடத்தில் போக வேண்டிய அவசியமில்லை. 

டயடிங் என்பதை எடைக்குறைப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் சுருக்காமல், உடல் ஆரோக்கியம் என்ற பரந்த சிந்தனையோடு அணுகலாம். உடலுக்கு நல்லது வயிற்றுக்கு நல்லது என்று சொல்லப்படும் பெரும்பாலான உணவு வகைகள் வாய்க்கு ருசியாக இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதி. இதனாலேயே டயடிங் என்று பேச்செடுத்தாலே பலரும் தெறித்து ஓடிவிடுகின்றனர். 

உணவு முறையை பொருத்தமட்டில் ஹார்ட் அன்ட் ஃபாஸ்ட் ரூலாக (hard & fast) எதை மேற்கொண்டாலுமே சில நாட்களிலேயே சலிப்பு தட்டும். அதைப்போல ஒரே மாதிரியான உணவு வகைகளை அன்றாடம் உண்பதும் சீக்கிரமே உணவு கட்டுப்பாட்டின் மீதே வெறுப்பை உண்டாக்கிவிடும். இந்த சலிப்பு வெறுப்போடு சேர்த்து நமக்கு பிடித்தமான உணவினை பார்க்கும் போது காஞ்ச மாடு கம்பங்கொல்லையை பார்த்த கதையாகிவிடுகிறது.

நாம் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு ருசியான உணவினை மட்டும் இஷ்டம் போல முழுங்குவதை தவிர்த்து GI குறைவாக உள்ள உணவுகளோடு சேர்த்து உடலுக்கு தேவையான மற்ற வகை உணவுகளையும் உட்கொள்ளலாம். வொயிட் ப்ரெட்டுக்கு பதிலாக ஹோல் வீட்(whole wheat)  ப்ரெட் சாப்பிடலாம்.(நாங்கெல்லாம்  காய்ச்சல் வந்தால்  தான் ப்ரெட் சாப்பிடுவோம் வம்சாவளியில் வந்தவர்கள்,மன்னிக்க )வெள்ளை அரிசிக்குப் பதில் கைக்குத்தல் அரிசியோ சிறுதானிய சோறோ சாப்பிடலாம். அதோடு சேர்த்து கொஞ்சம் பச்சை காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், முட்டை, மாமிசம் என கதம்பமாக நமது டயட்டை நாமே சுவாரஸ்யமாக டிசைன் செய்து கொள்ளலாம்.

 சிக்கன் என்றாலே செக்கச்செவேலென எண்ணெயில் பொறித்த சிக்கன் 65 தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்காமல், கோழியையும் மீனையும் அவித்தோ, குழம்பு வைத்தோ உண்ணலாம். சுவைக்காக சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், நன்றாக இல்லையென்றாலும் கூட ஆரோக்கியத்துக்காக சில உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும் என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே இருந்தே பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையுமே ஸ்பூன்ஃபீட் செய்து பழகிக் கொண்டிருக்கும் இந்த தலைமுறையில் நல்ல உணவு முறைகளையும் பழக்கிவிடுவதில் தவறேதும் இல்லை. 

உணவுக் கட்டுப்பாட்டை எவ்வளவு சீராக கடைப்பிடிக்க முடிந்தாலும் தினமும் ஏதோவொரு வகையில் உடலுக்கு கொஞ்ச‌ம் வேலையும் தருவது அவசியம். ரிமோட்டில் சானல் மாற்றுவதையே மாபெரும் வேலையாக நினைக்கும் உழைப்பாளிகள் வீட்டுக்கு வீடு இருக்கத்தான் செய்கிறார்கள்.தானாக எழுந்து நடந்து தாகத்துக்கு தண்ணி மோந்து குடிப்பதை கூட மானக்கேடாக நினைத்து அடுத்தவரை வேலை வாங்குபவர்கள் அதிலிருந்தே ஆரம்பிக்கலாம், அதாவது தங்கள் வேலையை தானே செய்துக்கொள்ள. வாக்கிங், ஜாகிங், வொர்க்கவுட், ஸ்விம்மிங், டென்னிஸ் , பேட்மின்ட்டன் என ஏதாவது ஒரு பயிற்சி உடலுக்கு நிச்சயம் தேவை. நாம தான் நடக்கிறோமே, ஓடுறோமே என்று இஷ்டப்படி உண்ணுவதையும் தவிர்க்க வேண்டும்.மூக்கு பிடிக்க முழுங்கிவிட்டு மூச்சு வாங்க ஓடுவதில் பெரிய பலனேதும் எதிர்பார்க்க கூடாது.  

 நீங்க இதையெல்லாம் தொடவே கூடாது , அதையெல்லாம் வாசனை கூட பிடிக்க கூடாது, வாக்கிங் போகாமல் தூங்கவே கூடாது  என்று டாக்டர் வந்து ஏகத்துக்கு ரூல்ஸ் போடும் வரை காத்திருக்க வேண்டாம் .பிறகு நாம் சாப்பிடாமல் இருக்க அவருக்கு வேறு மொய் எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து மோட்டு வலையை பார்த்து கேவி கேவி அழுவதற்கு நாமே என்ன சாப்பிடுவது என்பதை தேர்ந்தெடுத்து உண்பது நல்ல பழக்கம் தானே? 

முயற்சிப்போம். 

சந்தூர் அம்மாக்கள்


காலையில் பிள்ளையை பள்ளியில் கொண்டு விடுவதை என்ஜாய் பண்ணுவதற்கு ஒரு ஜென் மனநிலை தேவைப்படுகிறது. ஆனால் மதிய வேளையில் பிள்ளைக்காக காத்திருந்து பள்ளியிலிருந்து அழைத்து வருவது ஒரு சுகமான அனுபவம். எப்போதாவது தான் வாய்க்கும் இந்த பாக்கியம். அதனாலேயோ என்னவோ வேலைக்கு செல்லாத அம்மாக்களின் மேல் எனக்கு எப்போதுமே துக்கிளியூண்டு பொறாமை உண்டு. 

ஆடிக்குப் போனால் அடுத்து புரட்டாசிக்கு தான் பள்ளிக்கு செல்லும் ப்ராப்தம் வாய்க்கிறது எனக்கு. இதனால் க்ளாஸ் மிஸ்ஸை தவிர வேறு யாரையும் தெரிந்துவைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்பாக்களை பற்றி கேட்கவே வேண்டாம், பிள்ளைகளுக்கே பல நேரங்களில் அவர்களை அடையாளம் தெரிவதில்லை. அதனால் பள்ளியில் பிள்ளையுடன் படிக்கும் சக மாணவர்களின் அம்மாக்கள் சுத்தமாக பரிச்சயம் கிடையாது. 

யோஹானின் பள்ளி விளையாட்டு விழாவின் போது சுமார் பத்து பேர் அடங்கிய பெண்கள் கூட்டம் ஒன்று  ஒரே மாதிரி கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் உடையணிந்திருந்தனர். ஏதோ டான்ஸ் ட்ரூப் போல என்று நினைத்து விசாரித்தால் அந்த அழகு கும்பல் முழுக்க  எல்கேஜி குழந்தைகளின் அம்மாக்களாம்!கூடி கூடி க்ரூப் செல்ஃபி எடுப்பதை  தவிர பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் அந்த அழகு அம்மாக்களை பார்த்த  போது காலேஜ் படிக்கும் காலத்தில் சொல்லி வைத்து ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு வந்த அலப்பரை விட்டது ஞாபகம் வந்தது. திருமணம் முடித்து, குழந்தை பெற்று, பிள்ளையின் பள்ளி விழாவிற்கு இவ்வாறு இந்த அம்மாக்களால் வர முடிந்தது என்னைப் பொருத்த மட்டில் ஆச்சர்யமான விஷயம். 

சாயங்காலம் ஸ்கேடிங், ட்ராயிங் , ஃபோனிக்ஸ்,டென்னிஸ் போன்ற எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள் நடக்கும் இடங்களில் அழகழகான இளம் அம்மாக்களை காணலாம். எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் இந்த சந்தூர் அம்மாக்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. 

முக்கால்வாசி பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்து மதியம் அரைகுறையுமாக தூங்கியெழுந்து பாதி தூக்கத்தில் தள்ளாடியபடியே தான்  வரும் க்ளாஸுக்கு.ஆனால் அம்மாக்கள் படு ஃப்ரெஷ்ஷாக  ஸ்டைலான கெட்டப்பில் தினமும் அசத்துகிறார்கள். 

பிள்ளையை டென்னிஸிலோ ஸ்கேட்டிங்கிலோ விட்டுவிட்டு தங்கள் ஜாக்கிங், வாக்கிங்கை முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே ஹவுஸ் பார்ட்டி, ட்ரீட், அவுட்டிங் என அழகாக நேரத்தைப் பிரித்து அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். 

ஜாக்கிங்,  வாக்கிங் போகாதவர்கள் காலையில் தூங்கி எழுந்து பிள்ளைக்கு வாயில் ப்ரஷை வைத்தது முதல் ஆரம்பிக்கிறார்கள் அரட்டையை. அப்படியே சினிமா, ம்யூசிக், சமையல், ட்ரெஸ், பார்ட்டி, ஷாப்பிங் ,கணவர், ஸ்போர்ட்ஸ் என டேக் ஆஃப் ஆகி மறுபடி அடுத்த நாள் பிள்ளைக்கு என்ன ஸ்நாக் தருவது என்பதில் முடிகிறது கச்சேரி. 

இந்த இளம் அம்மாக்கள் அனைவருமே  பட்டதாரிகள். பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டவர்கள். குழந்தை ஒரளவு வளர்ந்து வரும் வரையோ அல்லது 'நாம் இருவர் நமக்கு இருவர்'என்ற எழுதப்படாத திட்டத்தை பூர்த்தி செய்யவோ வேலைக்கு செல்வதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளவர்கள். 

பேச்சில் தெறிக்கும் இளமை, குறும்பு, அலட்சியம் அவற்றோடு கூட இழையோடும் ஒரு வெகுளித்தனம் தான் இந்த சந்தூர் அம்மாக்களின் ஈர்ப்புக்கு காரணம் எனலாம். வயது ஏற ஏற பெண்கள் இளமையோடு சேர்த்து முதலில் தொலைப்பது அவர்களுக்கே உரிய வெகுளித்தனத்தை தான். இதனாலேயே பெரும்பலான பெண்கள் முப்பது வயதைக் கடக்கும் போதே நாற்பதை கடந்த முதிர்ச்சியோடு ஆளே உருமாறி வான்டடாக பெருசுகள் ஜீப்பில் ஏற முயலுகின்றனர். முகத்தின் முதிர்ச்சியும், உடலின் தளர்ச்சியும் அளவுக்கு மீறி வெளிப்படுவது இந்த வெகுளித்தனத்தை தொலைக்கும் போது தான் என தோன்றுகிறது. 

இவர்கள் வயதில் நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தால்.. கண்றாவி, அப்போதும் ஏதோ ஒரு நுழைவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டுத்தானிருந்திருக்கிறேன். 
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேடிக்கை பார்க்கும் எனக்கு இந்த சந்தூர் அம்மாக்களின்  குதூகலம் பட்டாம்பூச்சி போல சடுதியில் தொற்றிக்கொள்கிறது. காலேஜ் வாழ்க்கை முடிந்த பின்பு இது போன்ற இளமை கச்சேரிகள் சாத்தியப்படாததால் தான் இன்னமும் இவர்களை ரசிக்க முடிகிறதோ என்னவோ .ஆனால் அதிக பட்சம் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் இந்த அழகு அம்மாக்கள் அனைவரும் ஒரு 'டிபிகல் அம்மா'வாக மாறி இருப்பார்கள் என்பதே நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனம் . 


பி. கு

இது போன்ற இடங்களில் அப்பாக்களை பார்க்கவே முடிவதில்லை.உண்மையில் அப்பாக்களுக்கு பொழுது போக்க அருமையான இடம் இந்த மாலை நேர எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள். 

Thursday 4 December 2014

என்ன சாப்பிடுகிறோம்?

உணவுக் கட்டுப்பாடு என்பது எதாவது உடல் உபாதை வந்த பிறகோ, வரக்கூடிய அபாயம் உள்ளது என்று எதிர்பார்த்தோ , ஒரு எச்சரிக்கை மணிக்குப் பின்னே தான் நம்மால் மேற்கொள்ள முடிகிறது. சுயமாக முடிவெடுத்து நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்வோம் என்றெல்லாம் தினமும் கட்டுப்பாடாக சாப்பிடுவது நடைமுறையில் சிரமமான விஷயம். அவ்வாறு தாமாகவே மனமுவந்து உணவுகட்டுப்பாட்டுடன் இருப்பவரை ஹெல்த் ஃப்ரீக் என்று அழைப்பதுண்டு. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நானெல்லாம் எப்பவுமே ஸ்ட்ரிக்டா ஹெல்த்தி ஃபுட் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்பவர்களுக்கு ஒரு ஷொட்டு. ஸ்கிப் திஸ் போஸ்ட். 

என்னைப் போன்ற ஆட்கள் மேலே தொடரலாம். 

டயடிங் / உணவுக் கட்டுப்பாடு மற்றும் எடை குறைத்தல் என்று ஆரம்பித்தாலே முதலில் காதில் விழும் வார்த்தை ரைஸ் சாப்பிடாதீங்க என்பதே.அரிசி சார்ந்த கார்போஹைட்ரேட் வகை உணவு வகைகளை நம் மருத்துவர்கள் நம்மை தவிர்க்கச் செய்யச் சொல்வதற்கான அடிப்படை காரணத்தை  ரொம்ப மேலோட்டமாக கீழே சொல்லியுள்ளேன். 

காருக்கு பெட்ரோல்/ டீசல் மாதிரி நம் உடலுக்கு தேவையான எரிபொருளை (fuel) இரண்டு வகையில் பெற முடியும்.   ஒன்று சர்க்கரை(glucose) இன்னொன்று கொழுப்பு (fat) . சர்க்கரை சத்து அதிகமுள்ள அரிசி சோறு உண்ணும் போது, உடலுக்குத் தேவையான எரிபொருளை சர்க்கரையிலிருந்தே எடுத்துக்கொள்கிறோம். நாம் சேர்த்து வைத்துள்ள கொழுப்பு (உ.த. தொப்பை)  உபயோகிக்கப்படாமல் அப்படியே உடலில் நின்று விடுகிறது. அதாவது வெயிட் குறைவதில்லை. மேலும், உபயோகப்படுத்தியது போக மிச்சமுள்ள சர்க்கரை மீண்டும் கொழுப்பாக மாற்றப்பட்டு நம்மை டிஸ்ஃபிகர் செய்யக்கூடிய அனைத்து இடங்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது. அளவுக்கதிகமாக போகும் பட்சத்தில் இரத்த நாளங்களிலும் படியத் தொடங்கும். 

ஒரு குறிப்பிட்ட உணவில் சர்க்கரையின்  அளவு எவ்வளவு உள்ளது என்பதை க்ளைஸிமிக் இன்டெக்ஸ் (glycemic index) நம்பரை வைத்து சொல்கிறார்கள்.GI  அதிகம் உள்ள உணவு எளிதில் ஜீரணமடைந்து  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சடுதியில் அதிகப்படுத்தும். உதாரணத்திற்கு க்ளூகோஸின் GI-100 , பொன்னி அரிசியின் GI-75, கைக்குத்தல் அரிசியின் GI - 50 , ஓட்ஸ் GI- 49 ... இப்படி. 
GI -75க்கு அதிகம் உள்ள உணவு அதிகமான GI உள்ள உணவாக கருதப்படுகிறது. பழங்கள் காய்கறிகளுக்கு GI மிகவும் குறைவு.

GI வால்யூ (value) முழுக்க முழுக்க க்ளூகோஸை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகிறது. அதிக  GI உள்ள உணவினை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் உடல் பருமன் (obesity), சர்க்கரை நோய், இருதய கோளாறு(coronary heart disease)  போன்று பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கிலியூட்டுகிறார்கள். சிகரெட் பிடித்தால் கான்சர் வரும், சீக்கிரம் செத்துப்போய்டுவீங்க போன்ற மிரட்டல்களுக்கே அசராதவர்கள் ஆச்சே நாம். என்னத்த பெரிசா நமக்கு வந்துடப் போகுது என்று தெனாவட்டாக திரிபவர்கள் எல்லாம் சர்க்கரை நோயோ,ஹார்ட் அட்டாக்கோ வந்த ஒரே மாதத்தில் உருக்குலைந்து போய் விடுகிறார்கள் என்பதே நிதர்சனம். 

குறைந்த GI உள்ள எல்லா உணவும் உடலுக்கு நல்லது என்றும் சொல்லவிட முடியாது. உதாரணமாக சாக்லேட் கேக், ஐஸ்க்ரீம் போன்றவை உடலுக்கு நல்லது அல்ல எனினும் இவற்றின் GI 50க்கும் குறைவு. எனவே GI ஒன்றை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு உணவை தெரிவு செய்ய முடியாது.

GI 100 உள்ள வெள்ளை அரிசியையும் உருளைக்கிழங்கையும் மட்டும் சாப்பிட்டு எந்த தொந்தரவும் இல்லாமல் நலமாக வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புகை பிடிக்கும் அனைவருக்கும் புற்றுநோய் வருவதில்லையே அது போல. அது அவரவர் உடற்கூறு (constitution of body) பொறுத்த விஷயம். பிரச்சனை இல்லாத பத்து பேரை முன்மாதிரியாக வைத்து நமது உணவுப் பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதை விட பிரச்சனை உள்ளவர்களின் காரணத்தை தெரிந்துக் கொண்டு அதை தவிர்க்க முயல்வது புத்திசாலித்தனமில்லையா? 

இந்த அரிசி மோகத்திலிருந்து விடுபடுவது சாதாரண விஷயமே அல்ல. நாம் எல்லோருமே ஒரு வகையில் சோத்துமாடு தான்.நாம் அவ்வாறே பழக்கப்பட்டுவிட்டோம். மன அழுத்தத்துடன் கூடிய செடன்ட்ரி வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டது நாம் தானே? அப்படியானால் அந்த வாழ்க்கை முறைக்கேற்ற உணவு பழக்கத்தையும் நாமாக மாற்றிக் கொள்வது நல்லதில்லையா?  

அதனால் ஏதாவது வியாதி வந்த பின்பு தான் அரிசி சோறு தின்பதை நிறுத்துவேன் என்று அடம் பிடிப்பவர்கள் கொஞ்சம் உஷாராக முன்கூட்டியே அரிசியை குறைத்து சிறுதானியங்கள், நிறைய பழங்கள்,  காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம்.ஏழு வகை சிறுதானியங்களுக்குமே அரிசியை விட GI குறைவு. அதைப்பற்றி அடுத்த பதிவில் காண்போம். 

இன்றைய காலகட்டத்தில் நலிந்திருக்கும் வியாதிகளையும் கட்டுப்பாடற்ற பழக்க வழக்கங்களையும் கருத்தில் கொண்டால் ஒவ்வொருவருமே ஹெல்த் ஃப்ரீக்காக இருப்பது நல்லது. முப்பத்தி ஐந்து , நாற்பது வயது வரை நம் உடலை இப்படி பார்த்து பார்த்து பேண வேண்டிய அவசியம் இருப்பதில்லை. அது வரை தன்னை தானே தட்டி கொடுத்து ஒடத் தெரிந்த நமது உடல் நாற்பதை எட்டும் போது என்னையும் கொஞ்சம் கவனிக்கலாமே என்று குரல் கொடுக்க ஆரம்பிக்கிறது. 'லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி'என்பதை வேண்டுமானால் 'ஹெல்த்தி லைஃப் ஸ்டார்ட்ஸ் அட் ஃபார்டி' என்று மாற்றிக் கொள்ளலாம். 'ஸ்டேயிங் ஹெல்த்தி' என்பதை ஒரு வாழ்க்கைமுறையாகவே கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.                                

(தொடரும்)