Wednesday, 4 February 2015

மெமோ



அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு டிஏ அரியர்ஸ், இன்க்ரிமென்ட், ஈட்டிய விடுப்பு மாதிரி பழக்கப்பட்ட ஒரு வார்த்தை 'மெமோ'. பழக்கப்படாத வார்த்தை தமிழில் 'குறிப்பாணை'. 
அடுத்தடுத்து தொடர்ச்சியாக மெமோ வாங்கியதாலோ என்னவோ பணியிடத்தில் நான் ஒரு கைப்புள்ளை. உடனே கைப்புள்ளைக்கே இந்த கதின்னா என்று யாரும் யோசிக்கப்படாது. கட்டதுரை யாருன்னும் கேட்கப்படாது. 

ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு முதல் முறை மெமோ வாங்கிய போது முதல் வருடம்  பிசியாலஜியில் முதல் கிளாஸ் டெஸ்ட்டில் ஃபெயில் ஆன போது கிடைத்த ஷாக் மறுபடியும் கிடைத்தது. இருக்காதா பின்ன? +2 வரை துக்ளியூண்டு புத்தகங்களை படித்து, உரு போட்டு ஜில்லாவிலேயே அதிக மதிப்பெண் பெற்று, இதுவரை பள்ளி வாழ்க்கையில் ஃபெயில் என்பதையே அறியாமல் இருந்துவிட்டு காலேஜ் வந்து பெயிலானால்? ஆங், அதே ஷாக் தான். தலைகாணி அளவு பெரிய புத்தகத்தில் படிக்கத் தெரியாமல் கப் வாங்கியது மறக்கவே முடியாது வாழ்நாள் முழுதும். அப்புறம் அதுவே பழகி விட்டது.ஃபெயில் ஆக அல்ல. மெமோ வாங்கினால் அலட்டிக்கொள்ளாமல் பதில் எழுத. 

முதல் முறை மெமோ வாங்கிய போது கிடைத்த 'ஷாக் வேல்யூ'அடுத்தடுத்து வாங்கும் போது நீர்த்துப் போய் மெமோவுக்கான மதிப்பு குறைந்துவிடுவதென்னவோ உண்மை. அதே சமயம் மெமோ வாங்கி விட்டால் நம் குலப்பெருமையே களங்கப்பட்டு விட்டதாக நம்மை சுற்றி உள்ளவர் போடும் படங்களை தான் சகித்துக் கொள்ளவே முடியாது. உங்க பொண்ணு யார் கூடவோ ஓடி போயிடிச்சாமே என்ற ரீதியில் தொடரும் மெமோ பற்றிய போலியான விசாரிப்புகளை கடக்கவே அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். 

நான் வான்டடாக ஜீப்பில் ஏறிய மற்றொரு விஷயம் கோர்ட் கேஸ். கோர்ட்டில் கிடைத்த ஆப்பு பத்தாது என்று காலேஜிலும் கிடைத்தது பம்பர் பரிசு. 
வழக்கு தோற்ற கையோடு கேஸ் போட்ட மூவருக்கும் மெமோ கையில் திணிக்கப்பட்டது உச்சபட்ச கொடுமை. அந்த கேஸ் தோற்றதன் விளைவுகளை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருப்பது தான் ஆறாத சோகம்.

ஆனால் மெமோ வாங்கியதில் புரிந்து கொண்ட ஒரு அரிய உண்மை என்னவென்றால் நாம் கஷ்டப்படுகிறோமா இல்லையா என்பது இரண்டாம் பட்சம், தனக்கு ஆதாயம் இல்லையெனில்  நியாயத்துக்காக கூட உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதே. சிவப்பாக இருந்தாலே ரத்தம் தான், தக்காளி சட்னி அல்ல என நம்பும் என்னை போன்ற ஆட்களுக்கு ,சுற்றியிருந்த பலருடைய நீலச்சாயம் வெளுத்தது இந்த மெமோ விஷயத்தில் தான். 

மேலும் நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என்று நாட்டாமை சரத்குமார், விஜய்குமார் ரேஞ்சுக்கு கையில் சொம்போடு அலைந்தால் உண்மையிலேயே நாம் வாங்கும் மெமோக்களுக்கு என  தனியாக ஒரு ஃபைலை சுமந்தபடி மரத்தடிக்கே வர வாய்ப்பிருக்கிறது.அதற்காக நேர்மையாக இருக்கவே கூடாது என்று சொல்ல வரவில்லை.ஹமாம் சோப்பு போட்டு குளித்தால்  மட்டும் போதாது, அரசுப்பணியில் சமயோஜிதமாக நடந்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். 

அரசுத் துறையில் இருப்பவர்கள் அனைவரும் மெமோ என்ற விஷயத்தை ஒரு மானக்கேடானா விஷயமாகவே கருதுகின்றனர், என் பெற்றோர் உட்பட . 
இருவருமே அரசு பள்ளிக்கல்வி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள்.நான் வாங்கிய மெமோக்களினால் பெரிதும் வருந்தியது என் பெற்றோர் மட்டுமே. ஏனோ எனக்கு மெமோவுக்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுத்து வருந்த முடிந்தில்லை. 

உண்மையிலேயே தவறு இழைத்து, அரசு விதிமுறைகளை மீறுவதற்காக தரப்படும் மெமோக்கள் நிச்சயம் மதிக்கப்பட வேண்டியவை. அவற்றுக்கான சரியான விளக்கத்தை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டியது மெமோ வாங்கியவரின் கடமை. 

அரசுப் பணியில இதெல்லாம் சாதாரணமம்பா என்ற 'டேக் இட் ஈஸி ஆட்டிடியூட்' டிஎன்பிஎஸ்சி பரீட்சை எழுதும் போதே வந்துவிட்டால் நல்லது. அதை விட நல்லது அரசு வேலையாக இருந்தாலும் நேரமும் நேர்மையும் தவறாமல் இருப்பது. 

டிஸ்கி: 
இந்த பதிவுக்காக மண்டையை உடைத்துக் கொண்டு அரசு குறிப்பாணையை நீங்கள் அவமதித்துவிட்டீர்கள்  என்று அவசியமில்லாமல் யாரும் பொங்கி பொங்கல் வைத்துவிடாதீர்கள். இது ஒரு ஜாலி பதிவு. அதற்கேற்ற முக்கியத்துவம் அளித்தாலே போதுமானது. 




Friday, 16 January 2015

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

சட்டை போடாமல் மூன்று பேர்.அதில் ஒருவன் வேஷ்டி, ஒருவன் சின்ன ஜட்டி, இன்னொருவன் கொஞ்சம் பெரிதாக கட்டிய கோவணம். பாவாடை சட்டையோடு ஒரு பெண். குல்லாய் போட்டுக்கொண்டு இரு சிறுவர்கள். இவர்களோடு சேர்ந்து ஒரு குரங்கு.

 எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் இந்த ஏழு பேர் அடங்கிய கும்பல் சேர்ந்தது தான் அந்த ஊர் பள்ளியில் ஒரு வகுப்பு! அதற்கு ஒரு வாத்தியார் குரங்குக்கும் சேர்த்து பாடம் வேறு எடுப்பார்.  

எகிப்து மம்மியாகட்டும், சீனாவின் புத்தர் சிலையாகட்டும், பக்கத்து ஊரில் காணாமல் போன ஒரு மாணிக்க கல்லாகட்டும், சொந்த ஊரில் மாயமாய் மறைந்த பாதி தின்ற லட்டாகட்டும் ... எதுவாக இருந்தாலும் அந்த ஊரின் குற்ற புலனாய்வுதுறை, சிபிசிஐடி, சிஐஏ எல்லாமே இந்த ஏழு பேர் அடங்கிய குழு தான். 

நடுநடுவே ஒரு சயின்டிஸ்டோடு சேர்ந்து ரோபொடிக்ஸ், பறக்கும் பந்து, கதிர்வீச்சு  போன்ற கண்டுபிடிப்புகளில் சயின்டிஸ்டுக்கே சொல்லி தருவார்கள். 

ஊரில் எந்த  போட்டி நடந்தாலுமே இந்த ஏழு பேருமே கலந்து கொள்வார்கள், அவர்களில் ஒருவர் கட்டாய வின்னர். 

இது போக ரேக்ளா ரேஸ்,பனிச்சறுக்கு,  கேரளாவில் நடைபெறும் களரி, ஜப்பானில் நடக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டிகள், உலகளவில் நடக்கும் கிராண்ட் ப்ரீ என்று வெளுத்துக்கட்டும் இந்த குழு. கவனிக்க, எல்லாவற்றிலும் குரங்கும் உண்டு. 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல குதிரை வண்டி, மாட்டு வண்டி, சில சமயம் பறக்கும் கம்பளம் என ஏதோ ஒன்றில் மொத்த கும்பலும் பயணிக்கும் .  திடீரென க்ளைடர், ட்ரெயின், நீர்மூழ்கி கப்பல்கள் என மார்டன் டே ட்ரான்ஸ்போர்ட்டை அவர்களே அனாயாசமாக ஓட்டவும் செய்வார்கள். 
 
இவர்கள் எது கேட்டாலும் செய்யக்கூடிய ஒரு ராஜா. நாட்டில் எந்த ப்ரச்சினை வந்தாலும் ராஜா இவர்களிடம் கலந்தாலோசிக்காமல் ஒரு துரும்பை கூட அசைப்பதில்லை. கதை தமிழ் நாட்டில் நடப்பது போல தோன்றுவது இந்த ராஜாவை பார்க்கும் போது மட்டும்தான் தான். மற்றபடி மேற்கூறிய அனைத்தும் நடப்பது வடநாட்டில் ஒரு கிராமத்தில். 

இதெல்லாம் என்ன கொடுமையோ. சரி, இருந்துட்டு போகட்டும். 

நேக்கு ஒரே ஒரு டவுட்டு தான். 

 இந்த கதைகளும் சம்பவங்களும் எந்த கால கட்டத்தில் நடக்கின்றன? முன்னுக்குப் பின் முரணாக ஏகத்துக்கு பூ சுற்றும் இந்த தொடர் சிலபல வருடங்களாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆதர்சம்! பிள்ளைகளுக்கு இதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. காலங்கள் புரிய தொடங்கும் போது பென் டென்னுக்கோ டீனேஜ் ம்யூட்டன்ட் நின்ஜா டர்ட்லுக்கோ மாறி இருக்கும் கவனம். உடன் அமர்ந்து பார்க்கும் நமக்கு தான் மண்ட காயீ!! 

இதில் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கான தமிழ் சேனல்களில் இது போன்ற தூக்கிவைத்து கொண்டாடும்படியான ஹீரோ கதாபாத்திரம் எதுவுமே இல்லை.அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், ராணி காமிக்ஸ் இவற்றில் நாமெல்லாம் படித்து ரசித்தளவு கூட தமிழ் சேனல்களில் குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் இல்லை. சுட்டி டிவியின் டப்பிங் செய்யப்பட்டும், சுடப்பட்டும்  ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் படு மொக்கை. 

அது ஏன் குழந்தைகளுக்கான ஹீரோக்கள் வடக்கிலோ வெளிநாட்டிலோ தான் உருவாகிறார்கள்? சோட்டாபீம்,ஹிஷிமோரோ,கிட்டரெட்சு,
டோரேமான்,கிஸ்னா, ரோல் நம்பர் 21, டோரா, டியகோ, ஷக்திமான்,ஸ்பைடர்மேன், பவர் ரேஞ்சர்ஸ், சூப்பர்மேன்,  லிட்டில் கிருஷ்ணா, பால் கணேஷ், ஜாக்கி சான் என எல்லாமே இரவல் ஹீரோக்கள் தான். தமிழ் திரையுலகில் சொந்தமாக தமிழ் பேசும் ஹீரோயினுக்கு பஞ்சம் மாதிரி குழந்தைகளுக்கான லோக்கல் ஹீரோக்கள் பஞ்சம்.

'ஓடு ஓடு  அது நம்மை நோக்கி தான் வருது'  போன்ற டப்பிங் தமிழுக்கு நமது குழந்தைகள் கைகொட்டி சிரிப்பதைப் பார்த்து திருப்தியடைந்து விடுகிறோமோ?! 
யாராவது நல்ல தமிழ் பேசும் சூப்பர் ஹீரோவை உருவாக்கினால் நன்றாகத்தானிருக்கும். ஆனால் என்ன, நாமளே 'டாமில் ஈஸ் யுவர் மதர் டங்' என்று பிள்ளைக்கு சொல்லும் நிலையில் தானே இருக்கிறோம்.
 வாட் டு டூ?? 

Sunday, 4 January 2015

ஆட்டோ


ஆட்டோ ஒன்று செய்ய வேண்டும். ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை வைத்து. 

இது ஒரு எல்கேஜி ஸ்கூல் பையனுக்கான அஸைன்மென்ட்.  இதுப் போன்றதொரு வேலையை எனக்கு காலேஜ் படிக்கும் போது கொடுத்திருந்தால் கூட என்னால் செய்திருக்க முடியாது. கைவினைப் பொருட்கள் செய்வதோ, ஏதாவது மாடல் செய்வதோ, வரைவதோ எதுவுமே வராது. ஒரு வட்டத்தை கூட வட்டமாக  போட வராது. நான் பிள்ளைக்கு என்னத்த சொல்லித் தர போகிறேன்? 

எந்த துறையாக இருந்தாலும் நமக்கு வழிக்காட்டிகளுக்கா பஞ்சம்!அறிந்த தெரிந்த நண்பர்களிடம் ஆட்டோ மாடல் யார் செய்து தருவார்கள் என்று விசாரித்து சில நம்பர்களை பிடித்தேன். யாராவது சைட் பிஸினெஸாக இது போல ப்ராஜெக்ட்டுகள் செய்ய கிடைப்பார்கள் என்று நினைத்திருந்தேன்.மௌண்ட் ரோட்டில் ஸ்கூல்/ சயின்ஸ் ப்ராஜெக்ட்ஸ் செய்வதர்க்கென்றே ஒரு தனி கடையே இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. வெப்சைட், ஈமெயில் சகிதம் நிறைய பேர் வேலை செய்யும் ஒரு கடை! 
ஃபேஸ்புக் ஐடி போட்டு 'லைக் அஸ் ஆன் ஃபேஸ்புக்' என்று நேற்று ஒரு மெசேஜ் வேறு! 

அந்த கடைக்கு ஃபோன் பண்ணியதில் ஒரு முதியவர் லைனில் சிக்கினார். 

'ஆட்டோ மாடல் செய்து தர முடியுங்களா?'

'செய்யலாம் மேடம்'

'குச்சி, துணி,வைக்கோல், களிமண் மாதிரி ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருள் வச்சு செய்யனும்'

'ஓ செய்யலாமே. எவ்வளோ பெருசா வேணும்?' 

'ரெண்டு உள்ளஙகையகலம் இருந்தா போதுங்க‌'

'சரி, பேட்டரி போடற மாதிரியா இல்ல கரெண்ட்ல ஓடற மாதிரியா'

'இல்லைங்க ஆட்டோ ஒடற மாதிரி வேணாம்' (மைண்ட் வாய்ஸ் - களிமண்ணில் செய்யும் ஆட்டோ ஓடுமா??) 

'எந்த க்ளாசுக்கு?' 

'எல்கேஜி'

'ஓ அப்பிடியா. ஆனா ஆட்டோ ஓடற மாதிரி தான செய்யணும்? '

'இல்லைங்க , சின்ன பசங்க இல்ல, அதனால மாடல் மாதிரி இருந்தா போதும்'

'ஆனா ஆட்டோன்னா ஓடணுமே? '

அய்யோ இவர் ஐஐடி ப்ராஜெக்ட் லெவல்ல பேசறாரே என்று கொஞ்சம் அதிர்ச்சி ஆனது.விட்டா சோலார் எனர்ஜி , மூலிகை பெட்ரோல் என்று அடுத்து ஆரம்பிப்பார்  போலிருந்தது. 

'இல்லைங்க ஆட்டோ ஸ்ட்ரைக்னு நெனச்சிக்கோங்களேன்,ஓடாத ஆட்டோ தான் வேணும்'.

'கஷ்டம் மேடம், நாங்க அப்படி சிம்பிள் ப்ராஜெக்டஸ் எடுக்கறதில்லீங்க. நீங்க இந்த கடைல ட்ரை பண்ணி பாருங்களேன்' என்று வேறு இரண்டு நம்பர்களை கொடுத்தார். 

சரி இந்த ஸ்கூல் ப்ராஜெக்ட் விஷயம் ஆட்டோவோடு நிற்கப்போகிறதா என்ன. ஃப்யூச்சர்ல  ஏரோப்ளேன் பறக்க வைக்கிற ப்ராஜெக்டுக்கு இவரை யூஸ் பண்ணிக்கலாம் என்று நம்பரை சேவ் செய்து விட்டு,  அவர் கொடுத்த வேறு நம்பர்களை முயன்றால் எல்லோருமே 'சயின்ஸ டே'வுக்கு ப்ராஜெக்ட் செய்யும் லெவலிலேயே பேசினார்கள். கடைசியாக உடன் பணிபுரியும் ஒருவரின் உதவியால் ஓடாத பொம்மை ஆட்டோ செய்ய ஒருவரை பிடித்தாயிற்று. 

இதற்கு மேல் வருவது கொஞ்சம் புலம்பல். முகநூலில் இதை பாலிஷ்டாக அறச்சீற்றம் என்று சொல்வதுண்டு. யு-டர்ன் எடுப்பவர்கள் எடுத்துக்கொள்ளவும். 

எனக்கு சில விஷயங்கள் புரியவேயில்லை. 
ஒரு எல்கேஜி பிள்ளைக்கு எதை புரிய வைக்க இந்த மாடல் என்று ஆராய்ந்து பார்த்தால், ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளவதற்காக என்று பதில் வருகிறது பள்ளியிலிருந்து. என்ன கொடுமை இது? இதற்கு ஈக்கோ ஃப்ரெண்ட்லி பொருட்களை கொண்டு வர சொன்னால் பத்தாதா? இல்லை பிள்ளையின் கைவினைப் பொருள் செய்யும் திறமையை (ஆர்ட் & க்ராஃட்) ஊக்குவிக்க வேண்டுமென்றால் அதை பள்ளியில் தானே பயிற்றுவிக்க வேண்டும்? 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகள் 'பேரண்ட் சைலட் இன்ட்ராக்ஷன்' மேம்படுத்த தான் என்றால், என்னைப் போன்ற பெற்றோர் என்ன செய்வார்கள்? எல்லா பெற்றோருக்குமே க்ராஃப்ட் வொர்க்கும் ஆர்ட் வொர்க்கும் நன்றாக வருமா என்ன? பெற்றோருக்கே இவ்வாறான வேலைகள் நன்றாக செய்ய வரும் பட்சத்தில்  பிள்ளைகளையும் அதில் ஈடுபடுத்தலாம். யாரோ ஒருவரிடம் கொடுத்து செய்யப்படும் ப்ராஜெக்டில் பிள்ளை என்ன கற்றுக்கொள்ள முடியும்? அப்படியனால் இந்த ப்ராஜெக்ட் யாருக்கான ஹோம்வொர்க்? 

நாம் படிக்கும் காலத்தில் வீட்டுப்பாடம் எழுதுவதற்கே நேரம் சரியாக இருக்கும். இது போல ஆட்டோ , ஹெலிகாப்டர் எல்லாம் எதிலும், எந்த காலத்திலும் யாரும் செய்ய‌ சொன்னதில்லை. மிஞ்சிப் போனால் தையல் க்ளாஸுக்கு பாவாடை தைக்க துணியும் கலர் நூலும் வாங்கி வர சொல்லியிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் பிள்ளைகளை தையல் மிஷினே வாங்கி வர சொன்னாலும் ஆச்சர்யப்பட கூடாது. 

பள்ளிப் புத்தகங்களுக்கு அட்டைப் போடுபவர் என்று கூட அறியப்படும் ஒருவர் இருக்கிறார் என்பது இந்த ப்ராஜெக்ட் விஷயமாக அலையும் போது தான் தெரிந்துக்கொண்டேன். அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விட , தன் பிள்ளைகளுக்கு அட்டைப் போட்டுத்தர  கூட நேரம் கிடைக்காத பிஸியான ஒபாமா, மோடிக்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சி! 

இது போன்ற ப்ராஜக்ட் வேலைகளினால் பெற்றோருக்கு வீண் செலவு என்ற குறைபாடு  இருந்தாலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் திறமையுள்ள நிறைய பேருக்கு  கிடைத்துள்ள வேலை வாய்ப்பு. 
இது ஒரு நல்ல பயனுள்ள பிசினெஸாகவே மாறியிருக்கிறது.

 நம் ஊரில் கல்வியே பிசினெஸ் தானே? 










Thursday, 1 January 2015

மூணாவது சனிக்கிழமை


புரட்டாசி மாதம் மூணாவது சனிக்கிழமை வகை வகையாக சமைத்து , படையல் போட்டு வைத்து , பூஜை புனஸ்காரங்களை எல்லாம் சீராக முடித்து, கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்த சாப்பாட்டை  மயங்கி விழுவதற்குள் ஒரு வழியாக கடைசியாக வாயில் வைப்பார்கள் வீட்டு பெருசுகள். 

அதுப்போல, காலேஜில் ஒரு கருத்தரங்கு. மாதம் ஒரு முறை நடக்கும் சடங்கு இது. வார  நாட்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாவது சனிக்கிழமையும் அதுவுமாக மதிய உணவு  வேளையின் போது ஆரம்பிக்கும் இந்த கருத்தரங்கு. 

பெரும்பாலான உத்தியோகஸ்தர்களுக்கு சனி, ஞாயிறு இரு நாட்களுமே லீவ். வெள்ளிக்கிழமை சாயங்காலமே வீக்கெண்ட்  உற்சவம் காண்பவர்கள் சனிக்கிழமை வேலை செய்வதன் கடி உணர வாய்ப்பில்லை. மாதம் ஒரு முறை தான் கருத்தரங்கு என்றாலும் சனிக்கிழமை அன்று வேலை நேரம் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக வேலையிடத்தில் இருக்க வேண்டி இருந்தாலும் , பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு நிலைகொள்ளாமல் தவிக்கும் அம்மாக்கள் லிஸ்டில் நானும் சேர்த்தி. அப்பாக்களுமே தவிப்பார்கள், ஆனால் ஏன் என்று புரிந்ததில்லை. 

நான் முதுகலைப் படிப்பு முடிந்து அதே கல்லூரியில் பணியில் சேர்ந்த புதிதில் அறிவுப்பசியும் ஆர்வக்கோளாறும் சண்டைப்போட்டு என்னை வலுக்கட்டாயமாக இந்த கருத்தருங்குக்குள்    தள்ளிவிட்டுக்கொண்டிருந்தன.  நாட்கள்  செல்ல செல்ல வர வர மாமியார்  என்னவோ போல ஆனாளாம் கதையாக  அறிவும் ஆர்வமும் போய் பசியும் கோளாறும்  மட்டுமே  என்னை கருத்தரங்குக்குள் இழுத்துக் கொண்டிருந்தன. பசி  நேரமாதலால் அவர்கள் பொறையை  கொடுத்தாலும் பாய்ந்து பிடுங்கித் தின்றுக் கொண்டிருந்தேன். சில பல வருடங்களுக்குப் பிறகு அவ்வளவு சிரமப்பட்டு வலுக்கட்டாயமாக என்னால் என் அறிவை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால் வேற வழி? 

தொடர்ந்து இரண்டு மூன்று  கருத்தரங்குகளுக்கு  வரவில்லை  என்றால் மெமோ வரும். என்றுமே கருத்தரங்குக்கு வராதவர்களுக்கு வராது. நடுவில் டிமிக்கி கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த சன்மானம். இது வரை இந்த கருத்தரங்குக்கு வரவில்லை என்ற காரணத்திற்காக எல்லாம் நான் மெமோ வாங்கியதில்லை. காண்டீனில் போட்ட வாழைக்காய் பஜ்ஜியில் சோடா உப்பு கொஞ்சம் தூக்கலாமே போன்ற மிகவும் சீரியசான விஷயங்களுக்கு தான் மெமோ வாங்கியுள்ளேன். 

இந்த கருத்தரங்கு மேட்டரை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த புத்தாண்டிலிருந்து மாதாந்திர கருத்தரங்கு புதன் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. கிட்டதட்ட நூறு கருத்தரங்குகளாக இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, தோல்வியடைந்து(!) , அப்படியே கிடப்பில் போடப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் கருத்தரங்கு வைக்காத வரை சந்தோஷம் என்று சலிப்போடு சடங்கு செய்துக்கொண்டிருந்த பொழுது இந்த கருத்தரங்கு நாள் மாற்றம் குறித்த சந்தோஷம் உண்மையிலேயே புத்தாண்டு பம்பர்.

 ஒரு பாஸிட்டிவ் நோட்டோடு வருடத்தை ஆரம்பிப்பது நல்ல விஷயம் தானே? வேலையிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு ஓடி வருவது எப்படி பாஸிட்டிவான விஷயமாகும் என்று சனிக்கிழமை காலை வீட்டில் சூப் சாப்பிட்டுக்கொண்டே கேள்வி  கேட்பவர்களுக்கு புத்தாண்டில் கொடுமையான சாபம் விடப்படும் . 

இனிமேல்  அந்த மூன்றாவது சனிக்கிழமை கொஞ்சமே கொஞ்சம் சீக்கிரம் வீடு வந்து சேரலாம் என்ற திருப்தியோடு இந்த வருடத்தை ஆரம்பிக்கிறேன் . 

Monday, 29 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்... தொடர்ச்சி - 2

மக்கள் சிறுதானியத்திற்கு மாற யோசிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்லலாம். 

ஒன்று சுவை. அடுத்து விலை.

சுவையை பொறுத்தமட்டில் அரிசியை உபயோகிக்கும் அனைத்து இடங்களிலும் சிறுதானியங்களை சப்ஸ்டியூட் செய்யலாம். சுவையில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. மாற்றம் தெரிந்தாலுமே அதை பழகிக்கொள்வதில் தவறேதும் இல்லை. 

சிறுதானியத்தை சோறாகத் தான் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரவை, சேமியா, மாவு என எல்லா வடிவங்களிலும் சிறுதானியங்கள் கிடைக்கின்றன. அன்றாடம் உண்ணக்கூடிய இட்லி, தோசை, ரொட்டி , உப்புமா, பொங்கல் , அடை, வடை ,பனியாரம், இடியாப்பம், புலவ்  என எல்லாவற்றையும் இந்த சிறுதானியங்களில் செய்யலாம். இதற்காக ஏகப்பட்ட ரெஸிபி புத்தகங்களும் கிடைக்கின்றன. அவற்றை விரும்பி சாப்பிடுவதற்கு நம் வயனமான நாக்கை காட்டிலும் நம் மனநிலையே முக்கியம். 

அடுத்து விலை.

 நமக்கு நன்கு  பரிச்சயமான கேழ்வரகு, கம்பு ஆகியவை குறைந்த விலையில் தான் கிடைக்கின்றன. புதிதாக மார்கெட்டை பிடித்திருக்கும் மற்ற சிறுதானியங்கள் தான் ஏகத்துக்கு விலை. கிலோ 120 ரூபாய்  என்பது ரொம்பவே அதிகம். அரசாக பார்த்து சாதாரண வெள்ளை அரிசி, கோதுமை போல இந்த சிறுதானியங்களை பல்பொருள் அங்காடிகளில் விநியோகம் செய்ய ஆரம்பித்தால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது. 

உலகிலேயே இந்தியா தான் இந்த தானியங்கள் (major & minor millets) உற்பத்தியில் முதலிடம் என்பது ஆச்சர்யமான விஷயம். எழுபதுகளில் ஸ்டேபில் (staple) டயட்டாகவே இருந்த சிறுதானியங்கள், 2000 மாவது ஆண்டில் கிட்டதட்ட 75% குறைந்து விட்டதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. 2005 ம் ஆண்டு முதல் இவை பெரும்பாலும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவாகவே (fodder) மாறிவிட்டது. 

நம் ஊரில் மனிதர்கள் இந்த தானியங்களை சீண்டுவதே இல்லையா என்று கவலை கொள்ள வேண்டாம். ஆல்கஹால் (மது) உற்பத்தியில் இவை பயன்படுகின்றன. மில்லட் பீர் நேபால், ஜப்பான்,ஆப்பிரிக்கா,இந்தியா நாடுகளில் டோங்பா(tongpa), அஜோனோ(ajono), ரக்‌ஷி, போஸோ (bozo ) என வெவ்வேறு பெயர்களில் பிரசித்தம். 

சரி இங்கே விளையும் தானியங்கள் அனைத்தும் என்ன தான் ஆகின்றன? வழக்கம் போல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துக்கொண்டிருக்கிறோம். உலகிலேயே அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள் , உற்பத்தி செய்யப்படும் நாட்டிலேயே கொள்ளை விலை போவது புதிய விஷயம் அல்ல . இங்கே அவற்றுக்கான சந்தை இல்லாத போது வேறு என்ன செய்ய முடியும் ? இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் நம் நாட்டில் இந்த தானியங்களின் உபயோகத்தை அதிகரிக்க 'விலைக் குறைப்பு' என்ற அத்தியாவசிய தேவை தவிர மற்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக வழக்கமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

எளிதில் கிடைக்கக் கூடிய/ கிடைக்க வேண்டிய பொருள்களே நான்கு குட்டி கர்ணம் அடித்து, வராத சாகசங்களை எல்லாம் செய்து காட்டினால்  தான் சாமானிய மனிதனுக்கு கிட்டுகிறது (உ.த. எல் பி ஜி சிலிண்டர்).  சுலபமாக சல்லிசாக கிடைக்க கூடிய தானியங்கள்களை சந்தைப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளுமா? செய்தால் நன்றாகத் தானிருக்கும். அரசு இந்த வகை தானியங்களை விநியோகிக்க முன் வரும் நிலையில், இதனை எவ்வளவு பேர் அரசு பல்பொருள் அங்காடிகளில் வாங்க முன் வருவர்?

இன்று சிறுதானிய உணவு ஒரு வகையான லக்‌ஷுரி உணவாகவே பார்க்கப்படுவது வருந்தத்தக்க விஷயம்.  'ப்ரௌன் ரைஸ்' சாப்பிடுவதையே மட்டமாக நினைப்பவர்கள் நம்மிடையே இருக்கதானே செய்கிறார்கள். அரிசி சோறு சாப்பிடுவதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக நினைத்த/ நினைக்கும் தலைமுறை நாம்.

சில யோசனைகள்...

பள்ளியில் பாட திட்டத்தில் சிறுதானியங்கள்  பற்றி சேர்த்து குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அவற்றின் அருமை பெருமையை புரிய வைக்கலாம். 

பண்டிகை கொண்டாட்டங்களில், கோவில்களில் நிறைய பயன்படுத்தலாம். 

தரம் குறைந்த அரிசியை உபயோகிப்பதாக வரும் சத்துணவு புகார்களுக்கு சிறுதானியங்கள் மூலம் பதில் தரலாம். 

அதே இட்லி தோசை பனியாரத்தை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு புதிது புதிதாக சமைக்கும் முறைகளை கண்டறியலாம். 

இது போன்ற ஏதாவது புது ஐடியாக்களை இப்போதே செயல்படுத்த ஆரம்பித்தால் கூட சிறுதானிய உணவு மாற்றம் அடுத்த தலைமுறையில் நிச்சயம் சாத்தியப்படலாம். 

சிறுதானிய உணவு முறைக்கு மாறுவது ஒன்றும் தலைகீழாக நின்று தண்ணி குடிக்கும் சாசகசமல்ல.சைனீஸ் ஃப்ரைடு ரைஸையும் நூடுல்ஸையும் எவ்வளவு மோசமாக இருந்தாலும் உண்ணத் தெரிந்த நமக்கு சத்துள்ள இந்த சிறுதானிய சுவையை பழகுவதிலும் சிரமம் இருக்காது. 

முயற்சி செய்வோம். 

Monday, 22 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்...


சீரில்ஸ் என்ற பெயரில் நமக்கு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், ம்யுஸ்லி (muesli)  பரிச்சயமான அளவு  சமீபகாலங்கள் வரை சிறுதானியங்களின் பெயர்கள் கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. 

மொத்தம் ஏழு சிறுதானியங்கள்
(லிட்டில் மில்லெட்) . வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் (மக்கா சோளம் அல்ல), கேழ்வரகு. இதில் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் எல்லாம் சிறு வயதிலிருந்தே ஓரளவு பரிச்சயம்.  மீதமுள்ள நான்கும் சமீபத்தில் தெரிந்து கொண்ட பெயர்கள். 

இந்த சிறுதானியங்கள் வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை வெளிர் பச்சை, மஞ்சள் , ப்ரவுன் என பல கலர்களில் இருந்தாலும் பாலிஷ் செய்யப்பட்டு கடைகளில் வைக்கப்பபட்டிருக்கும் பாக்கெட்டுகளில் எல்லாம் உருண்டை உருண்டயாக ஹோமியோபதி குளிகை மாதிரியே இருக்கின்றன.ஹோமியோபதி மருந்தை பார்த்திராதவர்கள் பாலிஷ் செய்யப்படாத ஜவ்வரிசியின் மினியேச்சர் சைஸை கம்பேர் செய்துக் கொள்ளலாம். 

அதனால் சிறுதானியங்களை பாக்கெட்டுகளில் போடப்பட்டுள்ள பெயரை வைத்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது.பெயரை மாற்றி ஒட்டி வைத்திருந்தால் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். இவை பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவையிலும் ஒரே மாதிரி தான்.  கம்பு , கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் தனித்துவமான சுவையை போல மற்ற சிறுதானியங்களுக்கு ப்ரத்யேக சுவை என எதுவும் உணர முடிவதில்லை. 

கேழ்வரகு,கம்பங் கூழ் தவிர்த்து வேறு எதையும் நாம் இது நாள் வரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதுமே கூட சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று எதையாவது சொல்லி பயமுறுத்தி தான் ஓட்ஸின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நம் கவனத்தை சிறுதானியங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சக்கரை நோயாளிகள் மட்டுமில்லாது பொடென்ஷிடயல் டயாபிடிக் லிஸ்ட்டில் வருபவர்களும் இந்த வகை உணவுகளுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

பல் துலக்கும் பேஸ்டில் ஆரம்பித்து இரவு உபயோகிக்கும் கொசுவத்தி வரை உலகமயமாக்கலின் தாக்கத்தை எல்லா நிலைகளிலும் உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்ம ஊர் மக்கா சோளத்தை விட்டு விட்டு குழந்தைகளுக்கே அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் தானே வாங்கித் தருகிறோம்? எதற்கு மவுசு அதிகமோ அதற்கு விலையும் அதிகமாக இருப்பது ஆச்சர்யமில்லை. கிலோ நாற்பது ரூபாய்க்கு அரிசி வாங்குவதை தவிர்த்து கிலோ நூற்றியிருபது ரூபாய்க்கு விற்கப்படும் வரகு, சாமை, தினையை எவ்வளவு பேர் வாங்கி சாப்பிட முடியும்? அந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்த உணவை இன்று எங்கேயோ தூக்கி வைத்துள்ளோம்! ஆர்கானிக் ஸ்டோர் என்ற பெயரில் தனியே கொள்ளையடிக்க விட்டுவிட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறோம். நம்முடைய சிறுதானியங்களை கண்டுகொள்ளாமல் ஓட்ஸின் பின்னால் அலைந்ததற்கான விலையே இந்த நூற்றியிருபது ரூபாய். 

என் அப்பா காலத்தில் இது போன்ற சிறுதானிய உணவை தாத்தாவின் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் தான் சாப்பிடுவார்களாம். அதாவது அரிசி சோறு பொங்கி சாப்பிட வசதி இல்லாதவர்கள்.என்றைக்காவது ஒரு நாள் பாட்டி வரகு அரிசியிலோ சாமை சோறோ பிள்ளைகளுக்கு வடித்துப் போட்டால் தாத்தா பாட்டியை அடிக்கவே வந்து விடுவாராம். இன்று அப்பாவிடம் வரகரிசி சாதம் , தினை இட்லி , குதிரைவாலி தோசை , சாமை பொங்கல் என்று ஏதோ புது ரெஸ்பி கண்டுபிடித்துவிட்ட களிப்பில் சிலாகித்தால் அப்பா அவருடைய அந்த கால கதையை சொல்லி சிரிக்கிறார். 




Thursday, 18 December 2014

என்னமோ போங்க!



என்னமோ போங்க! 


நம் ஊரில் வீடு வேலை செய்பவர்,குழந்தை பார்த்துகொள்கிறவர்கள் , சமையல் செய்வோர் ஆகியோரை பெரிதும் நம்பியே வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை நகர்கிறது. எல்லா வேலைகளையும் தானே செய்தாலும் கூட கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த காலத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது  ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.  

வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த பிரச்னையை சந்தித்திருப்பீர்கள்  என்றே நம்புகிறேன். ஊருக்குச்  செல்லும் வேலைசெய்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவது. ஊருக்கு போகும்  போது நன்றாகவே பேசிவிட்டு செல்பவர்கள் ஊருக்கு போன பின் நம்மை சுத்தலில் விட்டு விடுகிறார்கள். நிச்சயமாக சொன்ன தேதியில் கிளம்பி வர மாட்டார்கள். நாம் போன் செய்தால் பெரும்பாலும் சுவிட்ச் ஆப் என்றே வரும்.அப்படியே தவறி போன் எடுத்து பேசினாலும் இது வரை கேள்வியே பட்டிராத அவங்க  ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தங்கச்சியோட மச்சினனுக்கு கையில நகசுத்தி, ஆபரேஷன் பண்ணனும் என்பார்கள். நமக்கோ ஆபீசில் போட்ட லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியாத நிலைமையா  இருக்கும்.அப்போது  தான் வேலையிடத்தில்  எக்ஸாம் வரும்,மினிஸ்டர் வருவார், ஹெல்த் செக்ரட்டரி திடீர் விசிட் அடிப்பார் , இன்ஸ்பெக்ஷன்  வரும், மாதாந்திர கிளினிகல் மீட்டிங் வரும்... கட்டாயம் வந்துடறேனு சொல்லிட்டு போன வேலையாள் தவிர மற்ற எல்லோரும் கும்மி கொட்டிக்கொண்டே ஒரு சேர வந்து நிற்பார்கள்.  

மேலதிகாரியிடம் லீவ் கேட்கவும் தர்மசங்கடம்.யார் என்றே தெரியாத ஒருவரின் நகசுத்து  எனக்கே வந்திருந்தால் தேவலை போல தோன்றும். 
சரி எப்போ தான் வருவீங்க என்று கேட்டால் இதோ நாளைக்கு ,இன்னும் ரெண்டு நாள் ,இன்னும் நாலு நாள்...இப்படி வரையறை இல்லாமல் நீண்டு கொண்டே போகும் அவர்களின் லீவும் வேலையிடத்தில் சகட்டு மேனிக்கு லீவ் எடுக்கும் எனது கிரைம் ரேட்டும்.வேலையாள் வரும் வரை சூர்யாவின் அவள் வருவாளா தான் எங்க பேமிலி சாங்.டெய்லி ஒரு முறையாவது பாடிவிடுவோம். 

வேலைக்கும் செல்ல முடியாமல், முழுமனதோடு வீட்டிலும் ஒன்றி வேலை செய்ய முடியாமல்,வேலைக்கு வேற ஆள் தேடலாமா இல்லை  நானே வேலையை விட்டுவிடலாமா என்று போராட்டமாக இருக்கும் போது போன் வரும் வேலைக்காரியிடமிருந்து .லவ் பண்ணும் போது அவர் நம்பர் பார்த்து கூட இவ்வளவு குஷியாகி இருக்குமா மனது தெரியவில்லை! வேலையாள் ஒரு சிறிய தயக்கம் கூட இல்லாமல் ,' யக்கா நான் இனிமேல் வேலைக்கு வரலைக்கா ' என்பாள். இன்று வருவாள் நாளை வந்து விடுவாள் என்று நம்பி இருந்துவிட்டு வரவே மாட்டாள் என்பதை ஜீரணிக்க எத்தனை பாட்டில் ஜெலுசில் தேவைப்படும் என்றே புரியாமல் குழம்பி நின்ற தருணங்கள் கணக்கே இல்லை!  தான் வேறு இடம் பார்த்துவிட்டதாக படு கேஷுவலாக சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். 

வீட்டில் உள்ளவர் சொல்லும் சமாதானம், பரவயில்லையே சொல்லிட்டு தான நின்னுச்சி   என்பதே. இதை முன்பே சொல்லி இருந்தால் லீவில் இருந்த போதே வேறு ஆளையாவது தேடி இருப்பேனே என்று அங்கலாய்ப்பாக இருக்கும். வெளியில் இருந்து பார்ப்போருக்கு ( பல நேரம் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கே கூட)இது ஒரு மேட்டரா    என்று தோன்றும். புது ஆளை தேடிப்பிடித்து , நமக்கு ஏற்றார் போல டியூன் செய்வது லேசான வேலை அல்ல. குழந்தையைப் பார்த்துக் கொள்பவரை குழந்தைக்கும் வேறு பிடிக்க வேண்டும்! 

நமது தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைப்பது பெண் தேடுவதை விட சிரமமான  ஒன்று.ஏஜென்சி மூலம் தேடிச் சலித்துவிட்டேன் . பெரும்பாலான ஏஜென்சிகள் ப்ராத்தல் நடத்தும் இடங்களைப்  போலவே உள்ளன. அதுவும் நடக்குமோ என்னவோ யார் கண்டா! இத்தனைக்கும் ஏஜென்சியின் நம்பர் மற்றும் அட்ரஸ் பெருமைமிக்க JUS DIAL லில் வாங்கியது. ஒரு மட்டமான தெருவில் ஏஜென்சி என்று எந்தவித போர்டும் இல்லாத ஒரு அரதப்பழசான வீட்டின் மாடியில் ஒரு குறுகலான அறையில் வரிசையாக லேடீஸ் எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். நாம் அவர்களில் யார் வேண்டுமோ செலக்ட் செய்து கொள்ளலாம். எனக்கு கமல்ஹாசன் படங்களில்  பார்த்த பலப்பல காட்சிகள் மண்டைக்குள் ஓடும்.ஒன்றிரண்டு இடங்களை  பார்த்த(!) பின்பு ஏஜென்சிகளுக்கு நேரில் செல்வதையே விட்டு விட்டேன்.

இதனால் கண்ட சிக்கல்களும் பல. அட்ரஸ் கொடுத்து விட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்பி வைப்பார்கள்.ஒரு முறை அது போல சமையலுக்கு ஒரு ஆள் வந்தது.35 வயது அம்மா என்று சொல்லியிருந்தார்கள். நேரில் பார்த்த போது பகீரென்றது.  ஒரு 55வயது சொல்லலாம் . ஆயா என்பதே சரி.வயதானவர்களை எப்போதுமே வேலைக்கு வைத்ததில்லை. ஏஜென்சிக்கு போன் போட்டு திட்டினேன். ஆள் இல்லை மேடம் அதுவரைக்கும் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்க என்றார்கள். வேற வழி? 

ஆயா கேஸ் அடுப்பில் சமைத்ததில்லையாம்.மற்றபடி எல்லா வகை சமையலும் தெரியுமாம்.எந்த அடுப்பில் எல்லா சமையலும் பழகி இருக்கும் ஆயா என்ற யோசனை வராமல் இல்லை. ஒரு மாதம் ஆளில்லாமல் கஷ்டப்பட்டதற்கு வந்திருந்த ஆயா மல்லிகா பத்ரிநாத் போலவே தெரிந்தார் எனக்கு!ஒரு வேளை தந்தூரி, க்ரில்ட் ஐடம்ஸ் மட்டும் செய்யுமோ ஆயா  என்று நினைத்துக்கொண்டே  முதல் நாள் அடுப்பை பற்ற வைக்க செய்ய சொல்லி கொடுத்து நானே சமைத்தும் வைத்தேன். எல்லாம் புரிந்ததாக மண்டைய மண்டைய ஆட்டினார் ஆயா. அடுத்த நாள் காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம்.நாங்கள் கிளம்பும் போது ஆயா ஒரு கேள்வி கேட்டது. ஏம்மா அந்த அடுப்பு அணையலேனா  தண்ணி தெளிச்சு அணைசிக்கலாமா? வாயே திறக்கவில்லை நான்.  லீவ் போட்டு  வீட்டிலேயே உட்கார்ந்து விட்டேன். 
ஏஜென்சி கதை இப்படி! 

தற்போது அடுத்து வேலையாள் தேடும் படலம் இனிதே ஆரம்பமாகி உள்ளது.தெரிந்தவர் அறிந்தவர் புரிந்தவர் மற்றும் பல வர்கள் மூலம் ஆள் தேட ஆரம்பித்துள்ளேன்.வேலைக்கு ஆள் தேடி அலைந்து அலைந்து, வேலைக்கரர்களோடு  எனக்கு இருக்கும் அனுபவத்தை கணக்கில் கொண்டு  டாக்டர் தொழிலை விட்டு விட்டு ஒரு மேன் பவர்  ஏஜென்சி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும். வேலைக்கு விருப்பமுள்ளோர் உங்கள் ரெசுமே கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

vaippome_ aappu@ yakov . co.in


Aruna😊