Wednesday 26 November 2014

இக்கரைக்கு அக்கரை...

ஒரு நாளின் முடிவில் இன்று முழுக்க என்ன செய்தேன் என்று யோசித்துப் பார்த்ததால்  "நாய்க்கு நிக்க நேரமும் இல்ல வேலையும் இல்ல" என்று நண்பன் சொல்வது தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. 

இந்நேரம் ஒரு ஹோம் மேக்கராக இருந்திருந்தால் வேலைக்கு செல்பவர்களை பார்த்து ஜெலூசில் சாப்பிட்டுக்கொண்டே ஸ்டேடஸ் போட்டிருப்பேன்.வேலைக்கு செல்வதைக் காட்டிலும் கடினம் ஹோம்மேக்கராக இருப்பது. ஆனால் அம்மாவை வேலைக்குப் செல்பவராகவே பார்த்துப் பழகியவர்கள் ஹோம்மேக்கராக இருக்க முடியும் என்று தோணவில்லை. பதினைந்து இருபது நாட்கள் லீவ் எடுத்தால் கூட பத்து நாட்களுக்கு மேல் வீட்டில் இருப்பு கொள்ளாது. இந்த பர பர வாழ்க்கை பழகிவிட்டது. 

வேலையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பிரச்சனை இல்லாமல் பேலன்ஸ் செய்ய முடிகிறது என்றாலும், அது முழு திருப்தியை தருகிறதா என்று கேட்டுப் பார்த்தால் விடை தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து, அதற்கு பிறகு பிள்ளையை எக்ஸ்ட்ரா வகுப்புகளுக்கு அழைத்து வரும் அம்மாக்கள், பகல் முழுதும் வேலை செய்துவிட்டு மாலையும் க்ளினிக் ஓடும் அம்மாக்கள்... என்று பிஸியான அம்மாக்களோடு ஒப்பிட்டு  பார்த்து நம்ம நிலைமை பரவாயில்லை தான் போல என்று மனதை தேற்றிக் கொள்ள முடிந்தாலும் ப்ரொஃபஷனல் லைஃபில் ஒரு வெற்றிடம் உருவாகி இருப்பதை முழுவதுமாக அகற்ற முடியல்லை.

முழு நேர வேலையை தியாகம் செய்யத் தோன்றாவிட்டாலும் எனக்கான விருப்பங்கள் கனவுகள் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு பிள்ளைக்காக மாலை வேளை முழுவதையும் டெடிகேட் செய்ய முடிவது ஒரு வகையில் கொடுப்பினை தானோ? தெரியவில்லை. ஆனால் அப்படி நினைத்துக் கொண்டு காலந்தள்ள சௌகர்யமாக உள்ளது என்பது தான் நிதர்சனம். 

எனது உடனடி தேவை எனக்கே எனக்கான நேரம் எனப்படும் "மீ-டைம்". இருபத்திநாலு மணி நேரத்தில் தூங்கும் அந்த ஐந்து மணி நேரம் மட்டும் தான் என்னுடயது என்று நினைத்தால் அந்த நேரம் கூட பெரும்பாலும் கனவுகளுக்கு சொந்தமாகிப் போகிறது. கஞ்சூரிங் பேய் முதல் பழக்கடைக்கார சின்ன பையன் வரை கனவில் வருகிறார்கள். பின் எனக்கான நேரம் தான் எது? 

பல நேரங்களில் நாம்  இருக்கும் கரையை தவிர்த்து மற்ற எல்லா கரையுமே பச்சையாக தெரியும் வியாதிக்கு இன்னும் சரியான பெயர் வைக்கப்படவில்லை. இந்த வியாதிக்கெல்லாம்  அமேசான் காடுகளில் அரிய வகை மூலிகை மருந்து எதுவும் கிடைப்பதில்லையா? 

இருப்பதை வைத்து திருப்தி அடைந்து இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிப் புலம்பாமல் இருந்தால் இந்நேரம் 'மாதா அருணானந்தமை' ஆகி என் பக்த கோடிகளுக்கு  தீட்சை வழங்கிக் கொண்டிருந்திருப்பேனோ என்னவோ. அக்கரைக்கே வெளிச்சம்! 


ட்ராயிங்



எல்லா குழந்தைகளையும் போல வண்ணங்களுடன் விளையாடுவதில் யோஹானுக்கு அலாதி பிரியம்.கலர் பென்சில்,க்ரேயான்,ஸ்கெட்ச்,வாட்டர்கலர்,வாட்டர் பெயின்ட் என வண்ணங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து உபகரணங்களும் சகட்டுமேனிக்கு வீடெங்கும் சிதறி இருக்கும். வண்ணங்கள் மீதான அவனது மோகம் போதாதா ட்ராயிங் க்ளாஸில் சேர்க்க?

கிட்டதட்ட இரண்டு மாதமாக சென்றுக் கொண்டிருக்கிறான் டிராயிங் க்ளாஸுக்கு. நடுவில் இரண்டு முறை மிஸ் திட்றாங்க, ரொம்ப ரூடா(!) பேசுறாங்க என்று மக்கர் பண்ணினான். அவனது மிஸ் மற்றும் அவருடைய இரண்டு காலேஜ் செல்லும் மகள்கள் அனைவருமே யோஹானின் வயதொத்த குழந்தைகளுக்கு டிராயிங் சொல்லி தருபவர்கள். டிராயிங் க்ளாஸில் போய் என்னத்த திட்ட முடியும் என்று அவனை சமாதானப்படுத்தி கொண்டு போய் விட்டுவிட்டேன்.

இரண்டு வாரங்க‌ளுக்கு முன் டிராயிங் க்ளாஸிலிருந்து அவனை அழைத்து வர சென்ற போது, ஒர் ஓரமாக நின்று அழுதுக்கொண்டிருந்தான். 
என்னவென்று விசாரிக்கும் முன்னரே மூன்று பேரும் சரமாரியாக கம்ப்ளைன்ட் யோஹானின் மீது. 

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ... 

 நன்றாக கலர் செய்தால் ஸ்டார் போடுவார்கள் ட்ராயிங் டீச்சர்ஸ். அன்று கலரிங் செய்யும் போதே ஸ்டார் வேண்டும் என கேட்டிருக்கிறான் பையன். நீ நல்லா கலர் பண்ணா தான் ஸ்டார் தருவேன் என்று மிஸ் கூற, நீங்க தரலைன்னா பரவாயில்ல, நானே வீட்ல போய் ஸ்டார் போட்டுக்குவேன் என்று கூறியுள்ளான்.அதோடு நிற்காமல் நீங்க ஸ்டார் தரலைன்னா நான் இந்த க்ளாஸுக்கே வர மாட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறான். இப்படி பேசினா அடி விழும் என்று மிஸ மிரட்ட சற்றே அடங்கியுள்ளான் .ஆனால் இது நடந்து முடிந்து கிளம்பும் வேளையில், எல்லோர் முன்னிலையிலும் உங்களுக்கு சின்ன பிள்ளைங்க கிட்ட எப்படி பேசனும்னு தெரியாதா என்று கேட்டுள்ளான். ட்ராயிங் மிஸ்ஸின் இரண்டு மகள்களும் அவனை ஸாரி கேட்கச் சொல்ல , தலைவர் முடியாது என்று மறுக்க, அவர்கள் திட்ட, இவன் அழ ஆரம்பித்திருக்கிறான். 

பேக் டு முந்தின பத்தி... 

பையன் பேசியதற்காக டிராயிங் மிஸ் மற்றும் அவரது மகள்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.இவனால் மற்ற குழந்தைகளும் கெட்டு விடுவார்களோ என்று பயமாக உள்ளதாக மிஸ் புலம்பினார்.தர்மசங்கடமான நிலை. மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுவிட்டு, இனிமேல் இப்படி பேசமாட்டான் என்று உறுதியளித்துவிட்டு வந்துவிட்டேன்.
காருக்குள் ஏறினது தான் தாமதம் என்னைக் கட்டிக்கொண்டு ஓவென கதற ஆரம்பித்து விட்டான். அவனிடம் ஒன்றுமே கேட்காமல் அவனை சமாதானம் செய்து அழுகையை நிறுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தேன். 

யோஹான் அவனது மிஸ்ஸிடம் பேசியது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம். கொஞ்சம் துடுக்குத்தனமாக பேசக் கூடியவன் தான், ஆனால் இந்த வயதில் மிஸ் ஸை கேள்வி கேட்பதெல்லாம் அதிகம். மண்டை குடைச்சல் தாளாமல் என் அம்மாவிடம் புலம்ப உன் பிள்ளை எப்படி இருக்கும், நாங்க கேட்காத மன்னிப்பா என்று சிம்பிளாக சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்கள். இப்படி எல்லாமா இருந்திருக்கிறேன் என்று யோசித்தாலும், மனது சமாதானம் அடைய மறுத்தது.

 கிட்டதட்ட ஒரு வாரமாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவனுக்கு அவனுடய தவறை உணர வைத்தேன். எல்லோரும் எல்லா நேரங்களிலும் ஸ்டார் தர மாட்டார்கள், மிஸ்ஸிடம் எப்படி பேச வேண்டும், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று என்னைப் பார்த்தாலே தெறித்து ஓடும் அளவுக்கு வேப்பிலை அடித்திருந்தேன். இரண்டு வருடம் அந்நியன் வரவே இல்லைன்னா தான் அம்பிய வெளில விடுவாங்க மாதிரி எப்படா இந்த கச்சேரியை நிறுத்துவேன் என்று பையன் பரம சாதுவாக என்ன சொன்னாலும்  புரிந்தது போலவே தலையை ஆட்டினான். 

ஆனால் எனக்கு தான் சில விஷயங்கள் விளங்கவேயில்லை. குழந்தைகள் எதிர்பார்ப்பது ஒரு சிறு அங்கீகாரம் தானே, அவர்களை உற்சாகப்படுத்த அதை கொடுத்துவிட்டு போனால் தான் என்ன? அதற்கு ஏன் இத்தனை கெடுபிடிகள்? இது ஒன்றும் பள்ளிக் கூடமில்லையே, இவ்வளவு கறாராக இருக்க. எந்த பெயின்டிங் காம்ப்படீஷன் போக வேண்டியும் இவனை நான் க்ளாஸில் சேர்க்கவில்லை. அவனுக்கு கலரிங்கில் உள்ள ஆர்வம் மட்டுமே காரணம். ஒரு வேளை மற்ற குழந்தைகள் அந்த நோக்கத்தோடு தான் க்ளாஸுக்கு வருவதனால் தான் இவ்வளவு கண்டிப்பும் கறாருமா? 

மேலும் பையன் முதல் முறை க்ளாஸுக்கு போகமாட்டேன் என்று சொல்லும் போதே என்னவென்று விசாரித்திருக்க வேண்டும். எந்த எக்ஸ்ட்ரா க்ளாஸுமே கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்பது பையனை அழ வைத்து நான் கற்ற பாடம். 

அன்று வீட்டுக்கு வந்தவுடன் அவன் என்னிடம் கேட்டது இரண்டு விஷயங்கள் தான்.1. எனக்கு நீங்க ஸ்டார் போடுவீங்களா. 2. என்னை இனிமேல் அந்த டிராயிங் க்ளாஸுக்கு கூட்டிட்டு போக மாட்டீங்க தானே.  இரண்டுக்குமே யோசிக்காமல் சரியென்று தலையாட்டினேன்.