Sunday 20 April 2014

108 #2


ஸ்ட்ரெட்சரில் படுக்கவே முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.மகனை மடியில் அமர்த்தி நானும் உட்கார்ந்து கொண்டேன். ஆம்புலன்ஸ் டிரைவர் படு வேகமாக வண்டியைக்கிளப்ப 'நான்- க்ரிடிகல் கேஸ்' தான மெதுவாவே போங்க என  நான் பிதற்ற உள்ளே இருந்த கிரிடிகல் கேர் நர்ஸ் உங்களுக்கு கொஞ்ச நாளைக்கு பயமா தாங்க இருக்கும் என்றார். 
எங்கள் ஊரில் பணியாற்றிய போது வருமுன் காப்போம் கேம்ப் செல்ல  ஆம்புலன்சில்  சென்ற அனுபவம் உண்டு.ஆனால் ஒரு பேஷன்டாக ஆம்புலன்சுக்குள் பேசியபடி, அம்புலன்சுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும் மற்ற வாகனங்களை பார்த்தபடி, மெயின் ரோட்டில் போட்டிருந்த தற்காலிக தடுப்பை நீக்கி அம்புலன்சுக்கு வழி அமைத்துக்கொடுத்த போலீஸ்காரர்களை  கவனித்தபடி எனக்கு எதுக்கு ஆம்புலன்ஸ் என்று யோசித்துக்கொண்டே  அமர்ந்திருந்தேன். பேஷன்டாக ஆம்புலன்சில் உட்கார்ந்துக்கொண்டு சுற்றி நடப்பதைப் பார்க்க உண்மையாகவே வித்தியாசமாக இருந்தது. பையனுக்கு எதுவும் புரியவில்லை. அம்மா இந்த வண்டியிலேயே மாமா வீட்டுக்கு போறோமா என்று கேட்டுக்கொண்டிருந்தான். 

எந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஏதோ ஒரு மருத்துவமனை பெயரை சொன்னார்கள். நான் அண்ணா நகரில் உள்ள சற்றே பிரபலமான மருத்துவமனை பெயரை சொல்லி அங்கே ஏன் செல்லவில்லை என்றேன்.  அந்த மருத்துவமனையில் அட்மிஷன் போடுவதாக இருந்தால் மட்டுமே அவசர சிகிச்சை அளிக்க ஒத்துக்கொள்வார்கள்,வெறும் முதலுதவி மட்டும் தானென்றால் சிகிச்சை அளிக்கமாட்டார்கள்  என்று அதிர்ச்சி தகவல் அளித்தனர் .அது சரி, செத்தா தான சுடுகாட்டுக்கு வழி தெரியும் ?

ஆம்புலன்சில் போகும் போது தான் கணவர் சொன்னார் அந்த சபரி மலை பார்ட்டி தான் ஸ்கார்பியோ ஓட்டி வந்தவராம், அந்த பட்டுப்புடவை கட்டிய பெண் அவர் மனைவி போல. குடும்பத்தோடு இருமுடி கட்ட சென்றுக் கொண்டிருந்தார்களாம். இந்த வேகத்தில் போனால் சாமியை நேரிலேயே பார்க்கலாம் என்றேன். ஆனால் அவர் வேகமாக வருவதை கவனிக்க நாம் மெதுவாக சென்றிருக்க வேண்டும்தானே என்றதற்கு கணவரிடமிருந்து பதிலை காணோம். எங்கள் விபத்துக்கு பிறகு அண்ணாநகரில் இரண்டு மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கண்கெட்ட பின் தானே நம் ஊரில் எப்போதுமே சூர்ய நமஸ்காரம். ஓட்டுனர்கள் இருவரும் வேகமாக போனதால் கடைசியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த எனக்கு தான் அதிகப்பட்ச அடி.ஆஸ்பத்திரியில் இடது கை மூட்டு எலும்பு ஹேர் லைன் கிராக் என்று சொல்லி மாவு கட்டு போட்டு, பதினைந்து நாள் லீவும் போட்டு அப்போதும் வலி குறையாமல் மேலும் பதினைந்து நாளைக்கு ஆர்ம் ஸ்லிங் போட்டு,எனக்கான வேலைகளை கூட என்னால் செய்துக்கொள்ள முடியாமல்  எலும்போடு சேர்த்து நானும் க்ராக்காகி இருந்தேன். இயலாமையில் வரும் வெறுப்பும் எரிச்சலும் என்னை விட்டு விலக ஒரு மாத காலம் ஆனது. . 

எனக்கு ஸ்பீட் என்றால் அந்த படத்தில் நடித்த கியனு ரீவ்ஸ் தான் முதலில் ஞாபகம் வருவார். ரேசிங் பற்றிய எனது அறிவும் ஆர்வமும் அவ்வளவே. ஆனால் இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஷூமேக்கர்களையும்  நரேன் கார்த்திகேயன்களையும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. 
பின்னால் ஒரு  லெக்கிங்க்ஸ்  போட்ட  யுவதி  இறுக கட்டியிருந்தால் ஷூமேக்கர் ஏர் போர்ஸ் ஒன் பைலட்டாகவே  மாறிவிடுகிறார். முன்புறம் யார் காலிலோ விழப்போவதை போன்ற போஸில் அமர்ந்தபடி யாராவது பைக்கில் வந்தாலே பதறி ஒதுங்க வேண்டி உள்ளது. 

இன்னமும் கணவரோடு காரில் அமர்ந்து கிராஸ் ரோடுகளில் செல்லும் போது எங்கிருந்து யார் வேகமாக வருவார்களோ என்று பயமாகவே உள்ளது. ஒவ்வொரு முறையும்  இடது கையால்  கனமான பொருளை தூக்கும் போது அந்த அதிகாலை வேகமும்,இரைச்சலும், மகனை கட்டிக்கொண்டு நடுரோட்டில் அமர்ந்து அழுத அழுகையும், ஆம்புலன்சும் ஒரு சேர நினைவுக்கு வந்து போகும், வலியோடு. 

Thursday 17 April 2014

108 #1


அழகான ஒரு  காலையின் அமைதியை கிழித்து தொங்கவிட்டிருந்தது அந்த இரைச்சல். இரண்டு வாகனங்கள் மோதிக்கொள்ளும் இடி போன்ற சத்தம். டயர்கள் க்ரீச்சிடும் ஒலி. வாகனங்களில் பயணம் செய்தவர்களின் ஓலம். அந்த குடியிருப்பு பகுதியின் விஸ்தாரமான நான்கு பாதைகள் சந்திப்பில் எந்த வண்டி எந்த புறமிருந்து வந்து எப்படி மோதியது என்று சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் யூகிக்க முடியாமல் சிரமப்பட்டனர். மோதியவை ஒரு ஸ்கார்பியோவும் வென்டோவும். இரண்டு வாகனங்களுமே சாலையின் எதிர் எதிர் திசையில் ஓர் ஓரத்திற்கு தள்ளப்பட்டிருந்தன. கார் தட்டாமாலை சுற்றி, ஒரு சிமெண்ட் டெலிபோன் போஸ்ட்டையே சாய்த்து பிளாட்ஃபார்மில் பாதியும் ரோட்டில் பாதியுமாக சொருகி நின்றிருந்தது. எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வேறு திசையை பார்த்து நின்றிருந்தது ஸ்கார்பியோ. வென்டோ இடது புறம் பப்படம் ஆகி இருந்தது. ஸ்கார்பியோ முன்புறம் பம்பர் பானெட் எல்லாம் காலி. 

வென்டோவிலிருந்து ஒரே புகை. வென்டோவின் ஓட்டுனர் கார் கதவை திறந்துக்கொண்டு இறங்கி நிற்க முயன்று கீழே விழுந்தார்.  நொடியில் கூட்டம் கூடி விட்டது. அவரை தூக்கி உட்கார வைத்தனர். ஒரே புகை மண்டலம். மறுபுறம் உள்ள கதவை யார்யாரோ தட்டி திறக்க முயன்று முடியாமல் போகவே டிரைவர் சீட் இருந்த பக்கமே ஓடி வந்தனர். யாரோ ஒரு தம்பி காருக்குள் குனிந்து அக்கா பிள்ளைய குடுங்க மொதல்ல என்று குழந்தையை  வாங்கி வெளியே நின்றிருந்தவர்களிடம் கொடுத்தான். இப்ப நீங்க கைய குடுங்க அக்கா என்று மெதுவாக கையை பிடித்து வெளியே இழுத்தான். அவன் ஒருவனால் முடியாமல் போகவே  இன்னும் இருவர் சேர்ந்து இரு கைகளையும் பற்றி  சிரமப்பட்டு காருக்கு வெளியே இழுத்தனர்.வெளியே இழுக்கப்பட்ட ஜீவன் அடியேன் தான். கணவர் தான் வண்டியை ஒட்டியது.

 நடு ரோட்டில் இழுத்துப்போட்டிருந்தார்கள் என்னை. அரை மயக்கம். தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார்கள். கணவருக்கு  கையில் ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. இந்த களேபரத்தில் பெருங்குரலெடுத்து அழுதுக்கொண்டிருந்த என் மகன் என்னைக் கண்டதும் 
இறுகக்கட்டிக்கொண்டான்.

அவன் அழுகையை நிறுத்திய பின்னும் 
நான் வெகு நேரமாக அழுதுக்கொண்டே இருந்திருக்கிறேன் என்பதே அங்கு என்னைச் சுற்றி நின்ற மக்கள்  பயப்படாதீங்க அழுகைய நிறுத்துங்க என்று சொன்ன பிறகே உரைத்தது. வென்டோ வாங்கியிருந்த அடிக்கு எங்களுக்கு பட்ட அடியை பார்த்தவர்கள் நம்புவது சிரமம். அவனுக்கு எந்த அடியும் இல்லை என்பதே பெரிய ஆறுதல். யாரோ எனக்கும் பையனுக்கும் திருநீறு வைத்து விட்டார்கள்.காலை நீட்டி நீட்டி மடக்க வைத்தார்கள்.  என் இடது கையில் மட்டும் சுரீர் சுரீரென்று வலி. அப்போது ஒரு பட்டுப்புடவை கட்டி  நகை  எல்லாம் போட்ட பெண்மணி ஒருவர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் தண்ணி குடிங்க என்று அவருடைய பாட்டில் திறந்து கொடுத்தார். வாங்கி குடித்துக்கொண்டிருக்கும்   போதே 108 ஆம்புலன்ஸ் சைரனோடு வந்து நின்றது. 

என் கணவர் கையில் ரத்தம் ஒழுக ஒரு போலீஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் ஒரு சபரிமலை வேஷ்டி கட்டிய மனிதர். ஆம்புலன்சை பார்த்ததும் பகீரென்றது.  ஸ்கார்பியோவில்  வந்த யாருக்கோ ரொம்ப சீரியஸ் போல என்று   பயந்து விட்டேன். ஆம்புலன்சிலிருந்து இறங்கிய பாரா மெடிகல் ஸ்டாஃப் நேராக ஸ்ட்ரெச்சரோடு என்னருகே வந்த பின்பு தான் நம்மை அழைத்துச் செல்லவே வந்துள்ளது ஆம்புலன்ஸ் என புரிந்தது.விபத்தில் யாருக்கு என்ன அடி என்றெல்லாம் பார்க்காமல் விபத்து நடந்த விதத்தைப் பார்த்தே யாரோ 108 க்கு போன் செய்திருந்தார்கள்.அவசர சிகிச்சைக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு செல்லும் அளவுக்கு அடிபடாமல் தப்பித்தது தம்பிரான்( இவர் யாரு?) புண்ணியம்.   எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் வலுக்கட்டாயமாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டேன்.எந்த பேஷன்ட்டும் இப்படி பேசிக்கொண்டே 108ஆம்புலன்சில் ஏறி இருப்பார்களா என்று தெரியவில்லை...... 

Friday 11 April 2014

பல்லானது...

நம்முடைய பற்கள் சொத்தையோ நல்ல பல்லோ , அவை பிடுங்கிய பிறகும் பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சிக்காக பயன்படுகிறது என்பது பல் மருத்துவம் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் தவிர்த்து மற்றவர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. சொத்தைப்பல்லை தவிர வயதானவர்களுக்கும், ஈறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆட்டம்  காணும் பற்களை பொதுவாக எடுத்துவிடுவதுண்டு. 

சமீப  காலம் வரை அவரவர் ஊரில் இருக்கும் ஒரு பல் மருத்துவரிடம் ஒரு காலி பாட்டில் கொடுத்து நல்ல பற்களை பிடுங்கினால் அதில் போட்டு வைக்க சொல்லுவார்கள்  மாணவர்கள். ஆனால்  தெருவுக்கு நாலு பல் மருத்துவர்கள் பல்கிப்பெருவிட்ட நிலையில்  ஒரு பல் மருத்துவரிடம் மட்டும் புட்டியை கொடுத்துவிட்டால் வேலைக்கு ஆகாது. தெரிந்த தெரியாத அனைத்து டென்டல் கிளினிக்குகளிலும், அவர் முந்தாநாள் தான் கிளினிக் திறந்தவராக  இருந்தாலும் ஒரு பாட்டிலில் நம் பெயர் எழுதி பல் தர்மம் பண்ணுங்க சாமி என்று அவர் கிளினிக்கில் வைத்து விட வேண்டும். இரண்டே இரண்டு பற்கள் கிடைத்தால் கூட எதற்காகவாவது பயன்படும். 

பல் மருத்துவக்கல்லூரிகளில் வாய் நோய் அறுவை சிகிச்சை துறையில் இதைப் போல நிறைய புட்டிகள்   வைக்கப்பட்டிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பல் கிடைக்கும். அதிர்ஷ்டம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த துறையில் பணி புரியும் பணியாளர்களே நாம் வைத்த புட்டியிலிருந்து பற்களை எடுத்துக் கொள்வார்கள். பல் மருத்துவமனை பணியாளர்கள் இதனை ஒரு வியாபாரமாகவே செய்து வருகின்றனர். சென்னையில் தனியார் பல் மருத்துவக்கல்லூரிகள் மொத்தமே நான்கைந்து இருந்த காலத்தில் இவர்கள் பிசினஸ் அமோகமாக நடந்தது. தற்போது சென்னையில் மட்டும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பதினைந்திற்கும் மேல் உள்ள நிலையில் பற்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது என்றே    சொல்லலாம்.அதனால் இயற்கை பற்களுக்கு பதிலாக டைஃபோடான்ட் எனப்படும் செயற்கை பற்களைக் கொண்டு செய்யப்படும் மாடல்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மாடலின் விலை மூவாயிரத்துக்கும் மேல். அவ்வளவு பல் தட்டுப்பாடு. ஆனால்
இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கு  நிஜ பற்களின் தேவை இன்னும் தீர்ந்தப்படில்லை.  பல் விற்பனையாளர்கள் இதில் நல்ல லாபம் பார்க்கின்றனர். நாங்கள் படிக்கும் காலத்தில் இருபத்தியெட்டு பற்கள் கொண்ட ஒரு முழு பல் செட் எண்ணூறு ரூபாய் வரை விற்கும். ஆனால் இப்போது ஒரு பல்லின் விலையே நூற்றி ஐம்பதிலிருந்து முன்னூறு  வரை ஆகிறது. சுலபமாக கிடைக்காத கடைவாய்பற்களின் விலை இன்னும் அதிகம். அப்படியானால் ஒரு முழு பல் செட்டின் விலை என்னவாக இருக்கும்?டிமாண்ட் இன்னும் இருப்பதால் இந்த விற்பனையாளர்கள் மருத்துவமனைகளில் பற்கள் சேகரிப்பதுப்போக இடுகாட்டிலிருந்தும் பற்களை எடுத்து வருகின்றனர். முன்பெல்லாம் அனாடமி படிக்கத் தேவையான எலும்புகளை இடுகாட்டில் வாங்கி வருவார்கள் . அண்மைக்காலங்களில் பற்களும் எலும்புகளோடு சேர்ந்துக்கொண்டன. இடுகாட்டு பல் கலெக்ஷனிலும் நிறைய வரைமுறைகள் உண்டு என்கிறார் பல் வியாபாரி ஒருவர். புதைக்கப்பட்ட பிணங்களில் இருந்து மட்டுமே பற்கள் கிடைக்கும். ஒவ்வொரு  பிணத்திலிருந்தும் புதைத்த பதினைந்திலிருந்து இருபது நாட்களுக்குள் பற்களையும் எலும்புகளையும் எடுத்து விட வேண்டும். இல்லையெனில் அதன் மீதே இன்னொரு பிணத்தை புதைத்து விடுவார்கள்.இடப்பற்றாக்குறை தான். .மீண்டும் ஒரு இருபது நாள் காத்திருக்க வேண்டும். இதில் வெட்டியானுக்கு கணிசமான பங்கு உண்டு.பிணம் புதைக்கப்படும் போதே புக்கிங் செய்துவிடுவார்களாம் பல் வியாபாரிகள். சரியாக இருபது நாட்கள் கழித்து வந்து பற்களை சுத்தம் செய்து வாங்கிச் செல்வார்களாம். ஒரு பிணத்திலிருந்தே முழு பல் செட்டும் கிடைத்துவிடாது. நான்கைந்து பிணங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பற்களில் இருந்து ஒரு முழு செட்டை உருவாக்க வேண்டும். சிரமமான வேலை தான். அதனால் தான் அவ்வளவு விலையோ என்னவோ. புதைக்க இடமில்லாமல் மின்தகனம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் இடுகாட்டிலிருந்தும் பற்கள் வரத்து குறைந்துள்ளது பல் வியாபாரிகளின் சமீபத்திய வருத்தம். 

ஆதலால் ஏதாவது தானம் செய்ய நினைத்து செய்ய முடியாமல் இறந்து போய்விட்டாலும் பெரிதாக வருத்தப்பட வேண்டாம்.நீங்கள் எரியூட்டப்படாதவரை  யாராவது உங்கள் பல்லை கையில் வைத்து நோண்டிக்கொண்டிருக்கக் கூடும்- பயிற்சிக்காக!