Wednesday 19 March 2014

வேற வழி?

 

எல்கேஜி சீட்டுக்கு நேர்காணல் என்று சொல்லி வேலை செய்யும் இடத்தில லீவ் கேட்க கூட கூச்சமாக இருந்தது. ஆனால் அபியும் நானும் படத்தில் வரும் பிரகாஷ் ராஜைப் போல் எல்லாம் எதுவும் செய்யவில்லை. யோஹான் ஒழுங்காக பேசினால் போதும் என்பதில் தெளிவாக இருந்தேன்.  
வாட்ஸ் யுவர் நேம் என்ற கேள்விக்கு சோட்டா பீம் என்று சொல்லி அதிர வைத்தது என் தோழியின் குழந்தை. இந்த குழந்தையே பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது நண்பனின் குழந்தை பேசியது- அம்மா பேர் என்ன என்ற கேள்விக்கு, 'தனுஸ்ரீ அம்மா பேரு தான் நல்லா இருக்குப்பா, திவ்யா , அதையே சொல்லிடறேன்'.
ஆமா நல்லா தான் இருக்கு என்ற நண்பனின் ஏக்கப் பெருமூச்சு மகளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. யோஹான் இப்படியான குளறுபடிகளை  செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையோடு நேர்காணலுக்கு தயாரானேன். எதற்கும் இருக்கட்டுமே என்று கண்ணா வாட்ஸ் யுவர் நேம்  என கேட்க உங்களுக்கு தெரியாதாம்மா என்றான். சரி பதில் சொல்லி விடுவான் என்றே நம்புவோம். நம்பிக்கை. அதானே எல்லாம்!

நேர்காணலுக்கு டோக்கன் வாங்கி காத்திருந்தோம். நிறைய அம்மாக்கள் குழந்தையை கடுமையாக தயார் படுத்தி இருப்பார்கள் போல. பரீட்ச்சைக்கு முன் ரிவைஸ் செய்வதைப் போல , ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த அப்பாவின்  மடியில் தேமே என்று அமர்ந்திருந்த  குழந்தையின் காதில் மந்திரம் ஓதிக்கொண்டே இருந்தார்கள் அம்மாக்கள். காலேஜில் வைவா முடிந்து வருபவர்களிடம் நாம் பாய்ந்து சென்று ஹே,என்ன கேட்டாங்க என்ன கேட்டாங்க என்று சுற்றி நின்று  மொய்த்துக்கொள்வோமே  அதேப் போல நேர்காணல் முடிந்து வெளியே வரும் அனைத்து பெற்றோரையும்  பாய்ந்து சென்று அமுக்கியது ஒரு கூட்டம். ஒவ்வொவொரு முறை ஒரு பெற்றோர் இவ்வாறு அமுக்கப்பட்டு  விடுவிக்கப்படும் போதும் குழந்தைக்கு சொல்லி தரும் டாபிக் மாறிக்கொண்டே இருந்தது. 

எங்களை கடந்து சென்ற ஒரு அம்மா ஷேப்ஸ், கேம்ஸ் எவ்ளோ சொல்லிக் கொடுத்தேன் கடைசில உங்க வீட்டு கரெக்ட் அட்ரஸ் சொல்லுங்கன்னு மட்டும் தான் கேட்டாங்க என்று புலம்பிக்கொண்டே சென்றார். குழந்தையை கேள்வி கேட்கவில்லை என்று கூட வருத்தப்படுவார்களா? என்னுடைய பயமே வேறு. பெற்றோர் பெயராக  தனக்குப் பிடித்த பெயர்களையும், தன் பெயராக குங்க்பு பாண்டா என்றும்  என் மகன் சொல்லாமலிருந்தாலே போதும். 

எங்கள் முறை வந்தது. ஒரு போர்ட் மீட்டிங்கில் அமர்வதைப் போல ஆறு பேர் அமர்ந்து  இருந்தனர். எனக்கு என் முதுகலைப் பட்டப்படிப்பு க்ராண்ட் வைவா தான் ஞாபகம் வந்தது. நாங்கள் தான் குழந்தையின் சொந்த அம்மா அப்பா என்று ஃபோட்டோ, சான்றிதழ்கள் மூலம் ஓரளவு திருப்தி அடைந்தப் பின் இந்த அட்ரஸ் எங்க வருது கரெக்டா என்று கேட்டார் ஒருவர். ஆட்டோ டிரைவருக்கு வழி சொல்லுவதைப் போல கணவர் விளக்கியவுடன்,சாயங்காலம் கட்டாயம் காஃபி சாப்பிட வீட்டுக்கு வருபவரைப் போல மையமாக அமர்ந்திருந்தவர் திருப்தியாக சிரித்தார். அவ்வளவே. ரிசல்ட் இன்ன தேதில ஓட்டுவோம் பாத்துக்கோங்க என்றனர். இதுக்கு எதுக்கு ஆறு பேர்? ஆனால் யோஹான் வாயை கிளராத வரை நல்லதே என்று எஸ்கேப் ஆனேன். 

மற்றொரு பள்ளியில் வேறு மாதிரி இருந்தது நேர்காணல். முதலில் குழந்தையிடம் இரண்டு ஆசியர்கள் உரையாடுவார்கள். பின்னர் ஒருவர் சான்றிதழ்களை சரி பார்ப்பார். கடைசியாக பள்ளி முதல்வர் நம்மிடம் மாட்லாடுவார்.குழந்தையிடும் பேசும் ஆசிரியர்கள் பெரிய பெரிய படம் போட்ட புக்ஸ்,
ரைம்ஸ்,பிளாஸ்டிக்கினால் ஆன ஷேப்ஸ், பழங்கள், காய்கறிகள் என ஏகத்துக்கு ஸ்பாட்டர்ஸ்  வைத்திருந்தார்கள். 

இவை அனைத்தும் எல்கேஜி செல்ல ஆரம்பிக்கும் முன்னரே  ஒரு குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டுமா? என்ன அநியாயம் இது! அப்ப எல்கேஜியில்  என்ன சொல்லிதருவார்கள்?ப்ளே ஸ்கூல் செல்லாத குழந்தை என்ன செய்யும்? அப்படியானால் வீட்டில் பெற்றோர் இவை அனைத்தையும் பரிச்சயப்படுத்தி வைத்து இருக்க வேண்டுமா? மூன்றரை வயது குழந்தை முதலில்  யாரென்றே தெரியாதவர்களிடம்  என்னத்த பேசும்?இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 

இந்த அட்மிஷன் ஆரம்பித்த நாளிலிருந்து நமது கல்வி முறையை நினைத்து நினைத்து புலம்பாத நாளே இல்லை எனலாம். 
புலம்பி என்னத்த ஆகப்போகிறது? போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும் என்று தூக்கி போட்டுவிட்டு வர முடியாமல் நானும் அதே ஜோதியில் ஐக்கியமாக என்னை தயார் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் நல்ல montessori  பள்ளி இல்லை என்பது ஏதோ நம் சொந்த வீட்டுக்கு மெட்ரோ வாட்டர் கனெக்ஷனே இல்லாததை போல பெருங்குறையாக வாட்டியது. 

ஒரு வழியாக மூன்று பள்ளிகளிலும் இன்டர்வியு முடித்து ரிசல்ட் வரும் திருநாளுக்காக காத்திருக்கிறேன்.  மூன்று பள்ளிகளும் கிட்டத்தட்ட ஒரே நாளில் ரிசல்ட் வெளியிடப்போவதாக தேதி குறித்துள்ளனர்.ஒரு மாங்காயாவது   விழுகிறதா பார்ப்போம். 

Sunday 9 March 2014

எல்.கே.ஜி

எல். கே. ஜி அட்மிஷன் என்பது சாதாரண விஷயமே அல்ல. என் அப்பா எங்கள் காலேஜ் அட்மிஷனுக்கு கூட இவ்வளவு அலைந்திருக்க மாட்டார். 

உண்மையில் பிரச்சனை எல்கேஜி சீட்டில் இல்லை. நமக்கு தேவையான பள்ளியில் எல்கேஜிசீட் என்பதே சரி. தேவையான என்பதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம்.வீட்டுக்கு பக்கத்தில், டொனேஷன் குறைவாக, அண்ணனோ அக்காவோ படிக்கும் அதே பள்ளியாக,வேலைக்கு செல்லும் வழியில் பள்ளியில் இறக்கி விட அம்மாவுக்கோ அப்பாவுக்கோ வசதியாக... இப்படி அவரவருக்கு ஏற்ற காரணங்கள்.  

விடிகாலை மூன்றரை மணி இருக்கும்.நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் போது  போன் அடித்தது.தூக்கம் கலைந்த எரிச்சலோடு  எடுத்தேன். மாமியார் வீட்டிலிருந்து என் கோ -சிஸ்டர் ஃபோன். 'என்னம்மா ஆச்சு அத்தைக்கு உடம்பு முடியலையா?' வயதானவர்களை வீட்டில் வைத்துக் கொண்டு வேளை கெட்ட வேளையில் ஃபோன் வந்தால் என்னவென்று நினைப்பது? தங்கை வேறு மிகவும் மெலிதான குரலில் 'அக்கா மாமாவோட ஆபீஸ் அட்ரஸ் என்ன' என்றாள். எனக்கெல்லாம் அதிகாலை நாலு மணியே நடு ராத்திரி தான். மூன்றரை  மணிக்கு தூக்கத்திலிருந்து எழுப்பி எனக்கு நான் குடியிருக்கும் வீட்டு அட்ரஸ் கேட்டாலே தெரியாது. ஏம்மா என்ன ஆச்சு என்றேன் பதட்டம் குறையாமல். 'மறந்துட்டீங்களா அக்கா, அட்மிஷன்  ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு இருக்கேன், மாமாவோட சாலரி உங்க சாலரி எல்லாம் சொல்லுங்க'. 'இந்த நேரத்துலயா?' 'ஆமா அக்கா, நைட் பன்னெண்டு மணில இருந்து ட்ரை பண்ணி இப்ப தான் சைட் ஓபன் ஆச்சு'.
'விடிஞ்ச பிறகு பண்ணிக்கலாமே?' 'இல்ல இந்த ஸ்கூல் சைட் ஒபனே ஆகாதுன்னு சொன்னாங்க அதான்...'
அதற்கு மேல் என்னால் வேறு கேள்விகள் கேட்க முடியாமல் அவள் கேட்ட கேள்விகளுக்கு பதிலை சொன்னேன்.  அதற்கு பிறகு எங்கே தூங்குவது. என்னுடைய பிள்ளைக்கும் சேர்த்து அவள் தான் அப்ளிகேஷன் பூர்த்தி செய்கிறாள் எனும்போது நான் படுத்து தூங்க முடியுமா? என்ன டௌட் இருந்தாலும் போன் பண்ணுமா என்று சொல்லிவிட்டு நாவலை விட்ட  இடத்திலிருந்து  தொடர்ந்தேன். 

எல்கேஜி அட்மிஷனுக்காக நடுராத்திரியிலிருந்து ஆன்லைன் ஃபார்ம் ஃபில் பண்ணுவது எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பட்டது.ஏனோ ஊர்க்காவலன் படத்தில் ரஜினி நடுராத்திரியில் இட்லி சாப்பிட்டது ஞாபகத்துக்கு  வந்து தொலைத்தது.நமக்காக ஒருவர் உதவி செய்யும் போது நான் அதை குறை சொல்ல விரும்ப வில்லை எனினும் இந்த ஃபார்ம் ஆன்லைனில் இரண்டு நாட்களுக்கு  கிடைக்கும். நான் விடிந்த பின் அப்ளை செய்துக்கொள்ளலாம் என்றிருந்தேன். நான் வாழ்க்கையில் என்றுமே முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்ததே இல்லை. எப்போதுமே சாகும் போது சங்கர சங்கரா தான்.அதனால் வாழ்க்கையில் பெரிய இழப்பேதும் சந்தித்ததில்லை.விடியற்காலை மூன்றரைக்கு அப்ளை செய்ததற்கே என்னுடைய டோக்கன் எண்ணூற்றி  சொச்சம்.

ஒரு பள்ளிக்கு சுமார் ஆயிரம் ஆயிரத்தி ஐநூறு பேர் அப்ளை பண்ணினால் கூட இரண்டு நாட்கள் போதுமானது என்பது என் கணிப்பு. அமெரிக்கன் கான்சுலேட் முன் இரவெல்லாம் துண்டு போட்டு மக்கள் நைட் வாட்ச்மேன் உத்தியோகம் பார்த்த கண்கொள்ளா காட்சியை சென்னையில் இருப்பவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. சென்னையின் புகழ்ப்பெற்ற சில பள்ளிகளின் வாசல்களிலும் இதே போன்ற கூட்டம் எல்கேஜி அட்மிஷனுக்கு காத்திருக்கும். அந்த நைட் வாட்ச்மேன்   வேலையை சுலபமாக்கவே இப்போதெல்லாம் அனைத்தும் ஆன்லைனில். 

ஆன்லைனில் ஃபில் பண்ண அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்ட தேதியில் தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.  பின்னர் ஒரு தேதியில் குழந்தைக்கு பெற்றோரோடு சேர்த்து ஒரு நேர்முகம். நான் வீட்டுக்கு அருகே இருக்கும் மூன்று பள்ளிகளிலும்  விண்ணப்பத்திருந்தேன். எல்லா பள்ளிகளிலும் விசாரித்த வரை இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்தி முன்னூறு விண்ணப்பங்கள் வந்திருந்தனவாம். ஒரு செக்ஷனில் இருபத்தியைந்து குழந்தைகள் வீதம் சேர்த்தாலும் ஆறு ஏழு செக்ஷனுக்கு மேல் எந்த பள்ளியிலும் இல்லை. ஆக நூற்றி ஐம்பது இடங்களுக்கு இரண்டாயிரம் விண்ணப்பங்கள். பெரும்பாலும் அனைவரும் என்னைப்போல மூன்று நான்கு பள்ளிகளுக்கு விண்ணப்பம் அளித்தவர்களே. ஆனால் எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன
 என்பது தான் புரியாத புதிர். 

பள்ளிக்கு மூன்று கி.மீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும்,பெற்றோர் படித்திருக்க வேண்டும் போன்ற அடிப்படை தகுதியை தாண்டி நிறைய கெடுபிடிகள். பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், குழந்தையை கவனிக்க மாட்டார்கள் என்று பெற்றவர்களை விட அதிக அக்கறைக்கொண்டு ஒரு பள்ளி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. 
ஒரு பள்ளியில் போர்ட் எழுதியே வைத்திருந்தார்கள்- அதிகப்படியான விண்ணப்பங்கள் வருவதால் மானாட மயிலாட முறையிலேயே தேர்வு செய்யப்படும் என்று. 

என்ன தான்டா வேணும் உங்களுக்கு என்று விசாரித்ததில் எதாவது ஒரு கரும்புள்ளி சாரி பெரும்புள்ளியின் சிபாரிசு தேவையாம். 
இந்த நேர்முகம் எல்லாம் வெறும் கண்துடைப்பே என்று தெளிவாக இருக்கிறார்கள் மக்கள்.பெரும்புள்ளி அரசியல்வாதியாக  இருக்க  வேண்டிய  அவசியமில்லை . பள்ளி  கணக்கு  வைத்துள்ள  வங்கியின்  மேலாளர்  முதல்  ஸ்கூல்  பிரின்சிபால்  காருக்கு  பெட்ரோல்  போடும்   பங்க்  ஓனர்  வரை  யாராக  வேண்டுமானால்  இருக்கலாம். சிபாரிசுக்கு  ஏத்த டொனேஷன் . சில பல லட்சங்கள் வரை கூட ஆகும் போல.  

ஆரம்பத்திலேயே சொன்னது போல எல்கேஜி அட்மிஷனில் பிரச்சினையே இல்லை.எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சீட் கிடைக்கும். ஆனால்  நம்முடைய வசதிக்காகவும் ஆசைக்காகவும் நமக்கு தேவையான பள்ளியிலேயே படிக்க வைக்க வேண்டும் என்று கொக்கு போல் நாம் நிற்பது தான் பிரச்சனை. இந்த கொக்கு பிரச்சனை உள்ளவரை கல்வி வியாபாரம் மேலும் மேலும் செழித்து வளர   பிசினஸ்மேன்களுக்கு நம்மை காட்டிலும் சிறப்பாக வேறு யாரும் உதவி செய்து விடமுடியாது. 

Sunday 2 March 2014

ப்ளே/ ப்ரீ ஸ்கூல்



எல்லோரும் வரப்போகும் தேர்தலில் யாருக்கு சீட் என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது நான் முக்கியமான எல்கேஜி சீட்டுக்காக அலைந்துக்கொண்டிருந்தேன். 
காலேஜ் சீட் கிடைப்பது கூட பெரிய விஷயமில்லை. இந்த படிப்பு இல்லை என்றால் வேற படிப்பு படிக்கலாம். எல்கேஜியை அப்படி புறக்கணிக்க முடியாதல்லவா?இதற்கான தயாரிப்புகள் ப்ளே/ப்ரீ ஸ்கூல்களிலேயே ஆரம்பமாகிவிடுகின்றன. 

மூன்றரை வயதுக்கு மேல் பிள்ளையை வீட்டில் வைத்திருந்தால் நம்மை ஏதோ கொலைக் கேசில் பெயிலில் வந்தவரை போலவே பார்க்கும் சமூகம். இன்னுமா ஸ்கூல்ல போடல என்று நம் பிள்ளைக்கு ஏதோ  அவர்கள் தான் ஸ்கூல் பீஸ் கட்டப்போவதைப்  போல போக வர விசாரித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த பிரச்சனைக்கு இடமே கொடுக்காமல் இரண்டு, இரண்டரை வயதிலேயே ப்ளே ஸ்கூலில் விட்டுவிடுகின்றனர்.பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகளில் க்ரெஷுக்கு  அடுத்த வரப்ரசாதமாக பார்ப்பது ப்ளே ஸ்கூல்களைத்தான்.

குழந்தையை ப்ளே/ப்ரீ  ஸ்கூலில் விட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் எல்லா நிலைகளிலும் குழந்தையின் நலனை விட பெற்றோரின் சுயநலம் தான் அடிப்படையாக உள்ளது புரியும். 

முழு முதற்காரணம் பெற்றோருக்கோ இல்லை குழந்தையைப் பார்த்துக் கொள்பவருக்கோ கிடைக்கும் இரண்டு மணி நேர விடுதலை.இரண்டு மணிநேரத்துக்கு மேல் ப்ளே ஸ்கூலில் இந்த சின்னப்பிள்ளைகளை  வைத்திருப்பதும் கடினம். அக்கம் பக்கம் சிறிய பிள்ளைகள் போகும் போது நம்ம பிள்ளையும் போகட்டுமே என்று சேர்ப்பவர்களே அதிகம். 

இரண்டாவது காரணம் +2 சிலபஸ்ஸை +1 னிலேயே பிள்ளையை மாங்குமாங்கென்று படிக்க வைப்பது போல எல்கேஜி,யுகேஜியில் படிக்க வேண்டியதை பிள்ளை இரண்டரை வயதிலேயே கற்று வந்து அக்கம் பக்கம், உற்றார், உறவினர், நண்பர் முன்னர் பேசியோ பாடியோ காட்டினால் பெற்றோருக்கு கிடைக்கும் பெருமிதம்.கண்ணா, மாமாவுக்கு அந்த ரைம்ஸ் சொல்லு அக்காவுக்கு இந்த பாட்டு பாடு என்று ஒரு நாள் முழுக்க பாடாய்படுத்தப்பட்ட குழந்தை ஒன்று அந்த நாளின் முடிவில் வீட்டுக்கு வந்த விருந்தினரை பார்த்து போடா பன்னி என்று சொன்னதாக முகநூலில் படித்த ஞாபகம்.  பாவம் எவ்வளவு முறை தான் அதுவும் செய்ததையே செய்து காட்டும்? 

அடுத்த வருடம் குழந்தை ரெகுலர் பள்ளியில் சேர்க்கும் பொழுது அழுது  அடம்  பிடிக்காமல் இருக்கவும்,பெற்றோரை விட்டு அரை நாள் வேறு ஒரு புது இடத்தில் கழிக்கவும்,மற்ற  குழந்தைகளோடு  சேர்ந்து  விளையாடிப் பழகவுமே  இந்த  
ப்ளே-ஸ்கூல்,ப்ரீ-ஸ்கூல் மண்ணு மண்ணாங்கட்டி  எல்லாம். ஆனால் இந்த நியாயமான காரணங்களுக்காக ப்ளே ஸ்கூல்லில் சேர்ப்பவர்கள் வெகு சிலரே. 

எல்லாமே வியாபாரமாக ஆகிவிட்ட இன்றைய உலகில் பெற்றோர்களின் பலவீனத்தை மிக அருமையாக பயன்படுத்தி ஏகப்பட்ட ப்ளேஸ்கூல்கள் காளான் போல முளைத்துக்கிடக்கின்றன. செமத்தியான லாபம் தரும் இந்த ப்ளே ஸ்கூல் வியாபாரத்தையும் விட்டு வைக்கவில்லை பெரிய பள்ளிகள். ப்ளே ஸ்கூல்களையும் தாங்களே ஆரம்பித்து அதற்கு ஒரு கோட்டாவும் ஒதுக்கி விட்டன.  சிப்லிங்க் கோட்டா, RTE கோட்டா, வடநாட்டவருக்கான கோட்டா போன்ற ஏகப்பட்ட கோட்டாக்களோடு   ப்ரீஸ்கூல் அங்கேயே படித்த கோட்டாவும் சேர்த்தி. ப்ளே/ப்ரீ ஸ்கூல்களில் குழந்தைகளை சேர்க்க மூன்றாவது   முக்கிய காரணம் இது. 

ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்க பெரிய உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இருப்பதில்லை. ஒரு பெரிய இன்டிபென்டென்ட் பங்களா இருந்தால் போதுமானது. பங்களா என்றால் நிச்சயம் கீழே ரெண்டு மேலே ரெண்டு பெட்ரூம், அதோடு கூட அட்டாச்டு பாத்ரூம், ரெண்டு கார் பார்க்,ஒரு குட்டி லான் (lawn) இதெல்லாம் கட்டாயம் இருக்கும். போதாதா? நாலு கிளாஸ் ரூம் கூட  நாலு  டாய்லெட்.ஒரு குட்டி  சறுக்கல் மற்றும் சீசாவோடு  கூடிய சிறிய  விளையாட்டு ஏரியாவாக  மாறிய  கார் பார்க்கும் லானும்.இல்லவே இல்லாத காலேஜிக்கு ரெகக்னிஷன் தரும் நம் நாட்டில் ப்ளே ஸ்கூலுக்கு பெர்மிஷன் வாங்குவது ஒரு வேலையே அல்ல.  அவ்வளவே ,ப்ளே ஸ்கூல் ரெடி. இதில் ஹோட்டல் ரூம் டாரிஃப் போல வித் ஏசி/ விதௌட் ஏசி வசதியும் உண்டு.

ப்ளே ஸ்கூல் கட்டணமும் எல்கேஜிக்கு  சளைத்தது   அல்ல. என்சான்டிங்  எல்வ்ஸ், சீசேம் ஸ்ட்ரீட், ஜங்கிள் சஃபாரி, ஸ்ப்ரிங் ப்லாசம்...என்றெல்லாம்  ஸ்டைலாக   ஆங்கிலத்தில் பெயரை வைத்துக்கொண்டு நிறைய ஃபீஸ்  வசூலித்தால்  தானே   மரியாதை?எல்கேஜி டெர்ம்  பீஸ் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியின்  வருடாந்திர  காலேஜ் பீஸ் அளவுக்கு இருக்கும்  போது  ப்ளே ஸ்கூலில் எல்கேஜி அளவுக்கு கூட பீஸ் இல்லையென்றால் எப்படி?குறைந்தது முப்பதிலிருந்து  நாற்பதாயிரம்  வரை  சர்வ சாதரணமாக வாங்குகிறார்கள் . ரெசீப்ட்டும் தருவார்கள். ஆனால் ஒரு டயபர் மாற்றினால் கூட மேடம் நேத்து உங்க சன்னுக்கு டயபர் சேன்ஜ் பண்ணினோம், ரீப்ளேஸ் பண்ணிடுங்க என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் பட்டரில் ஜாம் தடவுவார்கள்.

இதை எல்லாம் சொல்லுவதால் ப்ளே ஸ்கூலில் குழந்தையை போடுவது சரி என்றோ தவறு என்றோ எந்த தீர்ப்பும் சொல்லவரவில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலேயே சொன்னது போல்  நானும் இதே குட்டையில் ஊறிய ஒரு சுயநல மட்டை தான். என் பிள்ளையும் நான் சொன்ன ஏதோ ஒரு காரணத்திற்காக இரண்டரை வயதிலிருந்தே ப்ளே ஸ்கூல் செல்கிறான்.அவன் எழுத படிக்க கற்றுக்கொண்டானோ இல்லையோ தெளிவாக பேசவும், மற்றவர்களோடு பழகவும், சேர்ந்து விளையாடவும் ஓரளவேனும் தெளிவடைந்துள்ளான் என்று நிச்சயமாக சொல்ல முடியும்.எல்கேஜிக்கு வேறு ரெகுலர் பள்ளிக்கு அனுப்புவதில் சிரமமிருக்காது என்றே நம்புகிறேன். ஆனால் என்ன,  அதே அழகான கிளாஸ் மிஸ்ஸ கேட்பான். சமாளிக்கணும் !