Wednesday 19 March 2014

வேற வழி?

 

எல்கேஜி சீட்டுக்கு நேர்காணல் என்று சொல்லி வேலை செய்யும் இடத்தில லீவ் கேட்க கூட கூச்சமாக இருந்தது. ஆனால் அபியும் நானும் படத்தில் வரும் பிரகாஷ் ராஜைப் போல் எல்லாம் எதுவும் செய்யவில்லை. யோஹான் ஒழுங்காக பேசினால் போதும் என்பதில் தெளிவாக இருந்தேன்.  
வாட்ஸ் யுவர் நேம் என்ற கேள்விக்கு சோட்டா பீம் என்று சொல்லி அதிர வைத்தது என் தோழியின் குழந்தை. இந்த குழந்தையே பரவாயில்லை என்று சொல்லும்படி இருந்தது நண்பனின் குழந்தை பேசியது- அம்மா பேர் என்ன என்ற கேள்விக்கு, 'தனுஸ்ரீ அம்மா பேரு தான் நல்லா இருக்குப்பா, திவ்யா , அதையே சொல்லிடறேன்'.
ஆமா நல்லா தான் இருக்கு என்ற நண்பனின் ஏக்கப் பெருமூச்சு மகளுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. யோஹான் இப்படியான குளறுபடிகளை  செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையோடு நேர்காணலுக்கு தயாரானேன். எதற்கும் இருக்கட்டுமே என்று கண்ணா வாட்ஸ் யுவர் நேம்  என கேட்க உங்களுக்கு தெரியாதாம்மா என்றான். சரி பதில் சொல்லி விடுவான் என்றே நம்புவோம். நம்பிக்கை. அதானே எல்லாம்!

நேர்காணலுக்கு டோக்கன் வாங்கி காத்திருந்தோம். நிறைய அம்மாக்கள் குழந்தையை கடுமையாக தயார் படுத்தி இருப்பார்கள் போல. பரீட்ச்சைக்கு முன் ரிவைஸ் செய்வதைப் போல , ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த அப்பாவின்  மடியில் தேமே என்று அமர்ந்திருந்த  குழந்தையின் காதில் மந்திரம் ஓதிக்கொண்டே இருந்தார்கள் அம்மாக்கள். காலேஜில் வைவா முடிந்து வருபவர்களிடம் நாம் பாய்ந்து சென்று ஹே,என்ன கேட்டாங்க என்ன கேட்டாங்க என்று சுற்றி நின்று  மொய்த்துக்கொள்வோமே  அதேப் போல நேர்காணல் முடிந்து வெளியே வரும் அனைத்து பெற்றோரையும்  பாய்ந்து சென்று அமுக்கியது ஒரு கூட்டம். ஒவ்வொவொரு முறை ஒரு பெற்றோர் இவ்வாறு அமுக்கப்பட்டு  விடுவிக்கப்படும் போதும் குழந்தைக்கு சொல்லி தரும் டாபிக் மாறிக்கொண்டே இருந்தது. 

எங்களை கடந்து சென்ற ஒரு அம்மா ஷேப்ஸ், கேம்ஸ் எவ்ளோ சொல்லிக் கொடுத்தேன் கடைசில உங்க வீட்டு கரெக்ட் அட்ரஸ் சொல்லுங்கன்னு மட்டும் தான் கேட்டாங்க என்று புலம்பிக்கொண்டே சென்றார். குழந்தையை கேள்வி கேட்கவில்லை என்று கூட வருத்தப்படுவார்களா? என்னுடைய பயமே வேறு. பெற்றோர் பெயராக  தனக்குப் பிடித்த பெயர்களையும், தன் பெயராக குங்க்பு பாண்டா என்றும்  என் மகன் சொல்லாமலிருந்தாலே போதும். 

எங்கள் முறை வந்தது. ஒரு போர்ட் மீட்டிங்கில் அமர்வதைப் போல ஆறு பேர் அமர்ந்து  இருந்தனர். எனக்கு என் முதுகலைப் பட்டப்படிப்பு க்ராண்ட் வைவா தான் ஞாபகம் வந்தது. நாங்கள் தான் குழந்தையின் சொந்த அம்மா அப்பா என்று ஃபோட்டோ, சான்றிதழ்கள் மூலம் ஓரளவு திருப்தி அடைந்தப் பின் இந்த அட்ரஸ் எங்க வருது கரெக்டா என்று கேட்டார் ஒருவர். ஆட்டோ டிரைவருக்கு வழி சொல்லுவதைப் போல கணவர் விளக்கியவுடன்,சாயங்காலம் கட்டாயம் காஃபி சாப்பிட வீட்டுக்கு வருபவரைப் போல மையமாக அமர்ந்திருந்தவர் திருப்தியாக சிரித்தார். அவ்வளவே. ரிசல்ட் இன்ன தேதில ஓட்டுவோம் பாத்துக்கோங்க என்றனர். இதுக்கு எதுக்கு ஆறு பேர்? ஆனால் யோஹான் வாயை கிளராத வரை நல்லதே என்று எஸ்கேப் ஆனேன். 

மற்றொரு பள்ளியில் வேறு மாதிரி இருந்தது நேர்காணல். முதலில் குழந்தையிடம் இரண்டு ஆசியர்கள் உரையாடுவார்கள். பின்னர் ஒருவர் சான்றிதழ்களை சரி பார்ப்பார். கடைசியாக பள்ளி முதல்வர் நம்மிடம் மாட்லாடுவார்.குழந்தையிடும் பேசும் ஆசிரியர்கள் பெரிய பெரிய படம் போட்ட புக்ஸ்,
ரைம்ஸ்,பிளாஸ்டிக்கினால் ஆன ஷேப்ஸ், பழங்கள், காய்கறிகள் என ஏகத்துக்கு ஸ்பாட்டர்ஸ்  வைத்திருந்தார்கள். 

இவை அனைத்தும் எல்கேஜி செல்ல ஆரம்பிக்கும் முன்னரே  ஒரு குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டுமா? என்ன அநியாயம் இது! அப்ப எல்கேஜியில்  என்ன சொல்லிதருவார்கள்?ப்ளே ஸ்கூல் செல்லாத குழந்தை என்ன செய்யும்? அப்படியானால் வீட்டில் பெற்றோர் இவை அனைத்தையும் பரிச்சயப்படுத்தி வைத்து இருக்க வேண்டுமா? மூன்றரை வயது குழந்தை முதலில்  யாரென்றே தெரியாதவர்களிடம்  என்னத்த பேசும்?இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 

இந்த அட்மிஷன் ஆரம்பித்த நாளிலிருந்து நமது கல்வி முறையை நினைத்து நினைத்து புலம்பாத நாளே இல்லை எனலாம். 
புலம்பி என்னத்த ஆகப்போகிறது? போங்கடா நீங்களும் உங்க சிஸ்டமும் என்று தூக்கி போட்டுவிட்டு வர முடியாமல் நானும் அதே ஜோதியில் ஐக்கியமாக என்னை தயார் படுத்திக்கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. வீட்டுக்கு அருகில் நல்ல montessori  பள்ளி இல்லை என்பது ஏதோ நம் சொந்த வீட்டுக்கு மெட்ரோ வாட்டர் கனெக்ஷனே இல்லாததை போல பெருங்குறையாக வாட்டியது. 

ஒரு வழியாக மூன்று பள்ளிகளிலும் இன்டர்வியு முடித்து ரிசல்ட் வரும் திருநாளுக்காக காத்திருக்கிறேன்.  மூன்று பள்ளிகளும் கிட்டத்தட்ட ஒரே நாளில் ரிசல்ட் வெளியிடப்போவதாக தேதி குறித்துள்ளனர்.ஒரு மாங்காயாவது   விழுகிறதா பார்ப்போம். 

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

பள்ளிக்கட்டணத்தை பற்றி சொல்லி தலை சுத்த வைச்சிருப்பாங்களே... இந்த வருடம் என் மகனும் எல்கேஜி தாங்க.. நானும் பட்டேன் படாதபாடு...

அமர பாரதி said...

Wow. Nice writeup. Hope you get the adminisstion in the preferred school. Good luck.

அருணாவின் பக்கங்கள். said...

அதை ஏன் கேட்கிறீர்கள் சதீஷ்!

அருணாவின் பக்கங்கள். said...

Hi thank you sivaram