Friday 24 October 2014

சந்தோஷ்- ஜிப்ரான்


நமக்கு எல்லாவற்றிலும் வெரைட்டி வேண்டும். குடும்பம், அலுவலகம் போன்ற மாற்ற முடியாத சில  விஷயங்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும்  வெரைட்டியை எதிர்ப்பார்த்தால் தான் மனித இனத்தில் சேர்த்தி.லெட்டரை ஈமெயிலாக்கி, ஈமெயிலை எஸ் எம் எஸ் ஆக்கி,அதையும் சுருக்கி சாட்டாக்கி, பிங் மீ, போக் மீ என்று வேகமாக எல்லோரும் மங்கள்யானைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரே மாதிரியான விஷயங்கள் நம் கவனத்தை தொடர்ந்து ஈர்ப்பதுமில்லை, ஈர்த்தாலும் பெரிதாக நிலைத்திருப்பதுமில்லை. அதிலும் என்டெர்டெயின்மென்ட்- பொழுதுபோக்கு என்று வரும் பொழுது நமது எதிர்ப்பார்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கும்.இசை இதற்கு விதிவிலக்கு அல்ல. ஒரே மாதிரியான படங்களைப் பார்க்கவோ பாடல்களைக் கேட்கவோ  எப்போதும் யாரும் விரும்புவதில்லை.

ஒரு வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று இசையமைப்பாளர்களாவது பதிதாக அறிமுகமாகிறார்கள். இசையிலோ அல்லது பாடும் குரல்களிலோ வித்தியாசமும் புதுமையும் இல்லையெனில் ஒன் ஃபிலிம் ஒன்டரோடு காணாமல் போய்விடுகிறார்கள். ஒரே மாதிரியான குரல்கள் மூலமோ இசை மூலமோ நமக்கு சலிப்பு ஏற்படாமல் நமது மாறிக்கொண்டே இருக்கும் ரசனைக்கும்  எதிர்ப்பார்பிற்கும் தீனி போடும் இசையமைப்பாளர்கள் வெகு சிலரே. 

இன்றைய நிலையில் நம்பிக்கை தரும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் போட்டியின்றி சந்தோஷ் நாராயணன் மற்றும் ஜிப்ரானை சேர்த்துக்கொள்ள முடியும். 

சமீப காலங்களில் ஹிட்(மட்டுமே) அடித்துக்கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன்,பாடல்களோடு பிண்ணனி இசைக்கோர்வையிலும் பின்னி எடுக்கிறார். (அதற்காக பத்து படம் கூட முடிக்காத ஒருவரை இளையராஜாவோடு கம்பேர் செய்வதெல்லாம் அநியாயம்) சந்தோஷ் நாராயணன் இசை என்றாலே  வழக்கமான குரல்களை தவிர்த்து சற்றே வித்தியாசமான குரல்களை கேட்க முடிகிறது.வழக்கமான கார்த்திக், ஹரி சரண், ஹரன்... இவர்களின் குரல்களை எல்லாம் சந்தோஷின் இசையில் கேட்க முடிவதில்லை. ப்ரதீப் குமார், திவ்யா ரமணி, ஆன்டனி தாசன், கானா பாலா ( சில படங்க‌ளில் ஷான் ரோல்டன்) போன்றோர் குரல்களை நிறைய கேட்கலாம். ஆனால்  அட்டக்கத்தி தொடங்கி அவரது ஏழாவது தமிழ் படமான மெட்ராஸ் வரை எல்லா படங்க‌ளிலும் கூட  குறைய இந்த குரல்களை மட்டுமே திரும்ப திரும்ப கேட்க வேண்டியுள்ளது தான் சலிப்பு. 

சந்தோஷ் நாராயணின் இசையில் தொடர்ந்து கேட்கும் குரல்களை (கானா பாலா விதிவிலக்கு) வேறு யார் இசையிலும் கேட்க முடிவதில்லை. இவர்களின் குரல்கள் ஓரளவு வித்தியாசமானதாகவே இருந்தாலும் கூட இந்த குரல்களை கேட்டாலே கண்ணை மூடிக்கொண்டு இது சந்தோஷ் நாராயணன் இசையோ என்று சொல்லிவிடும் அபாயம் இருக்கிறது. மெட்ராஸ் படத்தில் 'ஆகாயம் தீ பிடிச்சா' என்ற பாடலை முதல் முறை எந்த படம் , இசையமைப்பாளர் பெயர் எல்லாம் தெரியாமலே கேட்டு , சந்தோஷ் நாராயணன் இசை போல் உள்ளதே என்று நண்பர்களிடம் விசாரித்தால், அட ஆமாம்! இது டிபிகல் ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக் என்று சொல்லும் நிலையை தனக்குத்தானே ஹாரிஸ் நிறுவியுள்ளதைப் போல சந்தோஷ் நாராயணனும் அதே சலிப்பூட்டும் குரல்கள் மூலம் ஒரு வட்டத்துக்குள் சிக்கி இருக்கிறாரோ? 

இந்த ஒரு விஷயத்தில் சந்தோஷிடமிருந்து அழகாக வேறுபடுகிறார் ஜிப்ரான். 
ரஹ்மானுக்கு அடுத்து, இன்றைய நிலையில் 
ஜிப்ரான் இசையில் இருக்கும் வெரைட்டி மற்றும் சாய்ஸ் ஆஃப் வாய்ஸ் வேறு எவரிடமும் இல்லை என்று தைரியமாக சொல்லலாம்.சுந்தர் நாராயண ராவை மட்டும் இவர் இசையில் அடிக்கடி கேட்க முடிகிறது.மேலும் தன்னுடைய பல படங்களில் ஜிப்ரானே பாடியும் விடுகிறார். 

வாகை சூடவா மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜிப்ரான் , தொடர்ந்து இசையமைத்த வத்திக்குச்சி, நையாண்டி, குட்டிபுலி போன்ற படங்களும் சோபிக்கவில்லை, இசையும் சொல்லிக்கொள்ளும்படி  இல்லை. சந்தோஷ்  நாராயணன் அளவுக்கு இவர் பிரமலாகாதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் ஒரு காரணம் எனலாம். திருமணம் எனும் நக்காஹ, அமரகாவியம்  ஆகிய படங்களும் சரியாக போகவில்லை எனினும்,இசை உலகில் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது என்று சொல்லலாம்.அதன் விளைவே கமல்ஹாசனின் அடுத்த மூன்று படங்களுக்குமே இவர்தான் இசை. ஆனால்  தொடர்ந்து கமல் படங்களுக்கு இசை என்பதே சற்று கலவரமளிப்பது வேறு விஷயம். காணாமல் போனவர்கள் லிஸ்டில் ஜிப்ரான் சேராதவரை நமக்கு அதிர்ஷ்டமே. 

எல்லா இசையமைப்பாளர்களுமே ஓவ்வொரு கட்டத்தில் ஒரு பாடகன் அல்லது பாடகியின் குரல் மீது மையல் கொள்வது ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.தமன் இசையில் சுசித்ரா,அனிருத் இசையில் தனுஷ், ஜிவிபி இசையில் சைந்தவி, இமான் இசையில் ஷ்ரேயா, விஜய் ஆன்டனி இசையில் சாருலதா மணி- இப்படி எல்லா இசைய‌மைப்பாளர்களுக்கும் ஆஸ்தான பாடகர்கள் உண்டு. ஆனால் இந்த இசையமைப்பாளர்களின் ஃபேவரைட் பாடகர்கள் வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடுவதால் ஒரே குரலை மீண்டும் மீண்டும் கேட்கும் ஒரு வித சலிப்பு  சுலபத்தில் வருவதில்லை.

ஆடிக்கு ஒரு குத்து பாட்டும் அமாவாசைக்கு ஒரு மெலடியும் கொடுத்து யுவன், இமான் ,அனிருத் ,ஜிவிபி ,விஜய் ஆன்டனி ,செல்வ கணேஷ்,தமன்,  ஜோஷ்வா ஶ்ரீதர் ,ஷான் ரோல்டன் , விஜய் எபினேசர், தரண் ஆகியோர் களத்தில் இருந்தாலும் சகலரையும் ஓரங்கட்டி தங்களுக்கென ஒரு தனி இடத்தை தங்களின் கன்சிஸ்டென்சி மூலம்  சந்தோஷும் ஜிப்ரானும் நிறுவிய வண்ணம் உள்ளனர். இன்னும் அருமையான இசைக் கோர்வைகளையும் வித்தியாசமான குரல்களையும் இருவரிடமிருந்துமே வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன். 

Thursday 9 October 2014

மாறுவேடம்


மிஸ்டிக் மெட்ராஸ் மற்றும் க்ராண்ட் பேரன்ட்ஸ் டே இரண்டையும் சேர்த்து குழந்தைகளின் அலங்கார அணிவகுப்புடன் கொண்டாடியது யோஹானின் பள்ளி. தமிழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற புள்ளிகள் போல குழந்தைகளுக்கு மாறுவேடம் தான் ஹைலைட்.வீரபாண்டிய கட்டபொம்மன்  முதல் விஜய் அமிர்தராஜ் வரை, டாக்டர் முத்துலக்ஷமி ரெட்டியிலிருந்து அம்மா வரை என்று ஏகத்துக்கு கவர் செய்திருந்தனர். எந்த அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெர்சனாலிட்டியின் பெயர் தரப்பட்டதோ யாமறியேன் பராபரமே. யோஹானின் நண்பனுக்கு புஷ்பவனம் குப்புசாமி வேடம்! அந்த பையனின் அம்மா என்னிடம் அவர் யார், என்ன செய்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருந்தார். யோஹானுக்கு 
சர்.சி.வி. ராமன் வேடம். 

சர்.சி.வி. ராமனைப் பற்றி தெரிந்ததெல்லாம் ராமன் எஃபெக்ட்டும் நோபல் பரிசும் மட்டுமே. விக்கியில் தேடியதில், அவரைப் பற்றியும் அவர் உடுத்திய உடையை பற்றியும்  ஒரளவுக்கு ஐடியா கிடைத்தது. இந்த வேடத்திற்கான உடையை பற்றி இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டையோடு விழுங்கியவர்களை  விசாரித்ததில் ஏகப்பட்ட கடைகளை பட்டியலிட்டனர். குழந்தைகளின் உடையலங்காரத்திற்கென சினிமா நாடக கம்பெனி போல தனியாக கடைகளே இருப்பது எனக்கு பயங்கர ஆச்சர்யம்.

முகப்பேரின் ஒரு குறுக்குச் சந்தின் ஒரு இடுக்கான கட்டிடத்தின் குறுகலான மாடியின் கடைசியில் ஒரு சிறிய அறை. அது தான் கடை. கடையின் வெளித்தோற்றத்திற்கும் உள்ளே இருந்த விதவிதமான ஆடைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை.அன்னி பெஸன்ட் முதல் சுனிதா வில்லியம்ஸ் ஆடை வரை எல்லா விதமான ஆடைகளும் இருந்தன. ஆனால் எல்லா ஆடைகளையுமே சௌகார்பெட் ஹோல் சேல் வியாபாரி கணக்காக குப்பைப் போல குவித்து வைத்திருந்தார்கள். 

நான் சர்.சி வி ராமன் உடை என கேட்டவுடன் ஒரு கருநீல கலர் அங்கியை ஹேங்கரில் இருந்து எடுத்து 'நேரு, ராதாகிருஷ்ணன் எல்லாருக்கும் இதே தான்' என்று கொடுத்தார் கடையில் இருந்தவர். அந்த குப்பை மேட்டை கலைக்கவில்லை என்று ஒரு சின்ன திருப்தி. ஆனால் அந்த திருப்தி கொஞ்ச நேரம் கூட நீடிக்க வில்லை. 'கீழ போட தோத்தி' என்று கேட்டது தான் தாமதம் அந்த குப்பயைக் கிளறத் தொடங்கி மேட்டுக்குள் தலைமறைவானார் அந்த அங்கி தந்த மனிதர். 

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ஒரு பழுப்பு கலர் தோத்தியை உருவி நீட்டினார்.

'ப்ரவுன் வேண்டாம் வெள்ளை குடுங்களேன்'
'இது வெள்ளை தான் மேடம் கொஞ்சம் (!!) கலர் டல் ஆயிடுச்சி'
'எப்ப துவச்சது கடைசியா?'
'ஞாபகமில்லையே'
'தலைப்பாகை ? '
'பாரதியாருக்கு போடுறது தான் மேடம் இவருக்கும்'  

அழுக்கேறிய தலைப்பாகை ஒன்றை தந்தார்.சர் சி. வி ராமன் என்றாலே இதெல்லாம் செட்டாக தான் தருவார்களாம். தோத்தி வேண்டாம் என்று சொன்னாலும் அதே காசு தானாம். வாடகைக்கு எடுத்துத் தொலைத்தேன் எல்லாவற்றையும். கிளம்பும் போது 'கண்ணாடி மறந்துட்டீங்க , காந்திக்கும் இவருக்கும் ஒரே கண்ணாடி தான், இந்தாங்க'  என்றார். 

என்னைப் போல் வேறு யாராவது காந்தி, நேரு, ராதாகிருஷ்ணன்,பாரதியார் ஆகியோரது காஸ்டியூம்  தனித்தனியாக கேட்டு வந்தால் என்ன செய்வார்கள்  என்ற யோசனையோடு அந்த அழுக்கு துணிமணிகளை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். சர். சி. வி .ராமனுடைய உடை இத்தனைப் பேருடைய உடைகளையும் கலந்து கட்டிய ஒரு ராமன் எஃபெக்ட் என்று அன்று தான் தெரிந்தது. அவர் ஷெர்வானி குர்தா போட்ட புகைப்படங்களும் இருந்தன. ஆனால் அந்த ஆடைகள் அனைத்தும்  சூப்பர் சிங்கர் அனந்த் வைத்தியநாதனை ஞாபகப்படுத்துவதாய் இருந்ததால் வேண்டாமென ஒதுக்கிவிட்டேன். 

சர். சி. வி ராமனுடய ட்ரெஸ்ஸை சர்ஃப் எக்ஸல் போட்டு துவைத்து காய வைத்து ரெடி பண்ணியாகிவிட்டது. அடுத்து சிவி ராமனை தயார் பண்ண வேண்டும். 

'ஃபுல் நேம் சொல்லு கண்ணா- சர்.சந்திரசேகர வெங்கட ராமன்'.
'சர் னா? '
'அது ஒரு பட்டம் மாதிரி கண்ணா'
'பட்டம் னா கைட் டாம்மா?' 
'இல்ல கண்ணா சர் வேண்டாம்,
சந்திரசேகர வெங்கட ராமன் மட்டும் சொல்லு'
'சந்திரசேகர வாமன ரூப ... '
'அய்யோ கண்ணா அது கணபதி ஸ்லோகம். சந்திரசேகர வெங்கட ராமன். எங்க சொல்லு'
'சந்திரசேகர...
'ம்ம்ம் சொல்லு'
'வாமன வெங்கட...'
'கண்ணா, வாமன விட்ரு, இன்னொரு முறை சேர்த்துக்கலாம் . இப்ப சொல்லு..'

 முழு பெயரையும் ஒரு வழியாக சொல்ல வைத்து கூட நாலு வரியையும் மனதில் ஏற்றி...சர்.சி வி ராமன் ரெடி. 

எல்லா ஆடைகளையும் திரும்பத் தருகையில் மறுபடியும் துவைத்து அயர்ன் செய்து கொடுத்தேன். பாவம் அடுத்து இந்த உடையை உடுத்தப் போகும் நம் தேச தலைவர்களின் அம்மாக்களுக்கு துவைக்கும் வேலையாவது குறையட்டும்.