Sunday 16 February 2014

தாத்தா பாட்டி

அண்மையில் ஒரு க்ரெஷ் (crèche)பற்றி விசாரிக்க சென்றிருந்த போது ஒரு காட்சியை காண நேர்ந்தது.  ஆர்வம் தாளாமல் (என்பதை விட மனசு கேட்காமல் என்பதே சரி) அங்கு இருந்த ஒரு எட்டு மாத குழந்தையைப் பற்றி விசாரித்தேன். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் பால் புட்டி, பால் பவுடர், சத்து மாவு காஞ்சி சகிதம் வந்து இறங்கி விடுவார் போல. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இல்லையாம். பெண்ணைப் பெற்றவர்களுக்கு சென்னை ஒத்து வர வில்லையாம். பையனைப் பெற்றவர்கள் ரொம்பவே வயதானவர்கள். ஆக, குழந்தையைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி இல்லை. வேலைக்காரியை நம்பி வீட்டில் தனியாக குழந்தையை விட்டுவிட்டு வர மனதில்லை. வேலையையும் விட முடியாத சூழ்நிலை. வேறு வழி? ஆறு மாதத்திலிருந்தே க்ரெஷ் தானாம்.  
கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம்! இரவு குழந்தையை வந்து எடுத்துச் செல்ல ஏழு எட்டு மணி ஆகிவிடுமாம். குழந்தை பெரும்பாலும் தூங்கிவிட்டிருக்கும்.அது விழிப்போடு பெற்றோரிடம் விளையாடும் நேரம் எவ்வளவு எப்போது என்பதையெல்லாம் யோசிக்காமல் இருப்பது நல்லது. அப்படி எதுக்கு வேலைக்கு போகணும் என்று வேடிக்கை பார்க்கும் எவரும் சுலபமாக கமெண்ட் அடிக்க முடியும்.அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ யாரு கண்டா! 

தவிர்க்க முடியாத சூழலில் வேலைக்கு செல்வது ஒருபுறமிருக்க வேறு எதற்கோ ஆசைப்பட்டு பால் குடி மாறா பச்சப்பிள்ளையை விட்டுவிட்டு வெளிநாடு செல்பவர்களும் உண்டு.குழந்தைப் பிறந்து மூன்றாவது மாதத்திலேயே தாய்க்கு ஆன்- சைட் வேலை. வேறு எங்கே  குட்டி சுவரில் தான்.இப்போது வாய்ப்பை விட்டால் மறுபடி கிடைக்காதாம்.மூன்றே மாதமான தாய்ப்பால் மட்டுமே உண்ணும் குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு பறந்தாயிற்று.போனால் வருவதற்கு குறைந்தது எட்டு மாதம் ஆகும் என்று தெரிந்தே செல்லும் பெற்றோரை எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? இதற்கு பின் வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்காது என்று பறப்பவர்களுக்கு குழந்தையின் இந்த பருவமும் திரும்ப கிடைக்காது என்று கேட்காமலே அறிவுரை வழங்குபவர்களிடம் அதெல்லாம் நாங்க அடுத்த குழந்தைக்கு பார்த்துக்கிறோம் என்று வாயடைத்து விடுகிறார்கள். 

தாய்பாலின் மகத்துவத்தை அறிவுறுத்தி அரசுப்பணிகளில் கூட மூன்று மாதம் இருந்த மட்டர்னிட்டி லீவை ஆறு மாதமாக மாற்றி விட்டார்கள்.ஒரு குழந்தைய பாத்துக்கவே வழிய காணோம் இதுல ரெண்டாவது வேறயா என்று சலித்துக்கொள்ளும் என்னைப் போன்ற ஆட்களிடம் இப்பத்தான் ஆறு மாசம் லீவாமே என்று இழுத்து வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் ஆவலோடு நம் முகம் பார்ப்பவரிடம் ஏழாம் மாசம் பிள்ளைய ஸ்கூல்ல  சேர்த்துட்டு நீங்க கூட இருந்து கவனிச்சிக்க  முடியுமா என்றே கேட்க தோன்றுகிறது! 

குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள்- தாத்தா பாட்டி அத்தை யாரோ ஒருவர்-  உள்ளனர் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் என்று வேலைக்கு செல்லும் ஒரு தாயிடம் கேட்டால் புரியும். வேலைக்காரியிடம் குழந்தையை விட்டு செல்லும் குடும்பங்களையே சென்னைப் போன்ற பெருநகரங்களில் பார்க்க முடிகிறது. வேலையாள் குழந்தையை பார்த்துக்கொள்வாள் சரி, வேலையாளை பார்த்துக்கொள்வது யார்?? 

சரியான வயதில் திருமணம் முடித்து குழந்தையையும் பெற்றுக்கொள்ள சொல்லி பெருசுகள் வலியுறுத்துவதில், இந்த ஒன்னே காலணா சமூகம் தங்களை கேள்வி கேட்கும் முன் தங்கள் கடமையை  முடித்துவிட வேண்டும் என்ற உண்மையை தாண்டி வேறு ஒரு அர்த்தமும் உள்ளது.அது வயதான காலத்தில் தங்களால் பேர பிள்ளைகளை வளர்க்க உதவ முடியாது என்ற அவர்களின் நியாயமான கவலையே ஆகும். தாய் தந்தையை முதியோர் இல்லத்திற்கு பத்தி விட்டவர்களை இதில் கணக்கில் கொள்ள வேண்டாம். 

எங்களை எல்லாம் எப்படி வளர்த்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.பெற்றோர்  இருவரும் ஆசிரியர்கள். வீட்டில் எப்போதுமே எங்களை கவனித்துக்கொள்ள ஊரிலிருந்து வரவழைத்த ஒரு பெண் இருக்கும். என் அக்காவுக்கு ஏழு வயதென்றால் எனக்கு இரண்டு வயது. எங்களைப் பார்த்துக்கொள்ளும் பெண்ணிற்கு ஒரு பதிமூன்று பதினான்கு வயதிருக்கும். அது ஊட்டுவது தான் சாப்பாடு. எந்த நம்பிக்கையில் எங்களை விட்டு சென்றனரோ பெற்றோர் அந்த நம்பிக்கை இன்று எள்ளளவும் வேலையாள் மீது வைக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்கள் அப்படி. பத்து வருடம் வீட்டில் சோறு போட்டு வளர்த்தவனே அந்த வீட்டு குழந்தையை பலாத்காரம் செய்வது,ஒரு தங்க சங்கிலிக்காக வீட்டு டிரைவர் குழந்தையை கொல்வது, நூறு இருநூறுக்காக குழந்தையை பிச்சை எடுக்க வாடகைக்கு அனுப்புவது, குழந்தைக்கு காஃப் சிரப்பை ஊற்றிவிட்டு தங்கள் 'மற்ற' வேலைகளை கவனிப்பது...இப்படி எல்லாம் நடக்க கூட முடியுமா என்று பெற்றவர்கள் யோசித்து கூட பார்க்க முடியாத சூழலில் நம்மை வளர்த்து ஆளாக்கி கல்யாணமே கட்டிக் கொடுத்து விட்டார்கள் நம் பெற்றோர்கள்.  இத்தகைய குரூரமான சூழல் நம் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பது துரதிஷ்டமே! 

தாத்தா பாட்டி மீது குற்றச்சாட்டுகளும் உண்டு. நம்மை ஊரில் இல்லாத கெடுபிடிகளோடு வளர்த்துவிட்டு பேரப்பிள்ளைகளிடம் அநியாயத்திற்கு செல்லம் கொஞ்ச வேண்டியது. அதோடு நின்றால் பரவாயில்லை. நாம் நம் பிள்ளையை கண்டிக்க போக, குழந்தைக்கு என்ன தெரியும் அதை ஏன் திட்ற என்று வரிந்துக் கட்டிக்கொண்டு முன்னாடி நிற்பார்கள். தாத்தா பாட்டி செல்லம் கொடுத்து கெடுக்கிறார்கள் என்ற பரவலான கருத்து எல்லா இடங்களிலும் உண்டு. உங்க அப்பாவால தான் இப்படி பேசுறான் உங்க அம்மாவால தான் அப்படி ஆடறான் என்று தாத்தா பாட்டி கொடுக்கும் செல்லத்தினால் கணவன் மனைவியிடையேயும் மனஸ்தாபம் வரும். ஆனால் இப்போது குழந்தைகள் வளரும் சூழலில் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை . குழந்தை ஓரளவு வளரும் வரை அவர்கள் உடனிருப்பது ஆகப் பெரும் துணை. அந்த கொடுப்பினை இல்லை என்றால் தாயாவது குழந்தை பள்ளி செல்லும் வயதை எட்டும் வரை உடனிருக்க வேண்டும். ஆனால் இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் தான் பெருவாரியான குடும்பங்கள் பெருநகரங்களில் தத்தளிக்கின்றன. 

தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு, பிள்ளைகளுக்காக வாழ்ந்தது போதாது என்று பேரப்பிள்ளைகளுக்காகவும் மெனக்கட தயாராக இருக்கும் தாத்தா பாட்டிகளின் நடுவே சற்றே வித்தியாசமான தம்பதியரும் உள்ளனர். கல்யாணம் செய்து வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக சொல்லி  எதிலும் தலையிடாமல் இருப்பவர்கள், 
இனிமேல் தான் நாங்கள் எங்கள் வாழ்கையை வாழ வேண்டும் என்ற கோரிக்கையோடு ஊர் உலகத்தை சுற்றிப் பார்க்க கிளம்புபவர்கள்,கடைசி காலத்தில் தாங்கள் வாழ்ந்த ஊரிலேயே இருக்க ஆசைப்படுபவர்கள்....இப்படி ஒரு நியாயமான லிஸ்டும் உண்டு. 

தங்கள் வாழ்கையை இனிமேலாவது தாங்கள் விரும்பியபடி வாழ விரும்பும் அவர்களை நாம் இன்னமும் சார்ந்து இருந்து இம்சைப்படுத்தாமல் வாழவிடுவதும் நமது கடமை தானே? 

12 comments:

ஹேமா (HVL) said...

//தங்கள் வாழ்கையை இனிமேலாவது தாங்கள் விரும்பியபடி வாழ விரும்பும் அவர்களை நாம் இன்னமும் சார்ந்து இருந்து இம்சைப்படுத்தாமல் வாழவிடுவதும் நமது கடமை தானே? //
உண்மை! ஆனால் இது ஆனால் இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து சில வேளைகளில் மாறுபடுகிறது.

vcl said...

Very true. I could relate to every word being a working mother of 1 yr old twin babies.

Padmini said...

Well written. .from across the miles, hugs to you Aruna.

Padmini said...

Well written Aruna...from across the miles, hugs to you.

Padmini said...

Well written Aruna, from across the miles, hugs to you. ..

Unknown said...

Beautifully written and very practical. Wow. Sharing in my FB page.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பகிர்வு..

எல் கே said...

குழந்தையுடன் இருந்து வளர்க்க முடியாதென்றால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். இது என் கருத்து மட்டுமே

naray said...

Just what do you want the readers to conclude?

அமர பாரதி said...

100% true. There is no solution for this. All we can expect is that the baby care centres are professionally taking care of the babies, thats all. At least babies are safe with baby care centers. There is no other option for office going parents and not all grand parents are ready to take care of the grand children. Grand parents at this time is extremely selfish and do not want to extend their helping hand for any reason. They are very very selfish and they can expect the same from their kids.

hema said...

Excellent article Aruna. ..I can relate as a working mom..

swarna said...

Superb akka.....you actually read my mind...☺☺