Tuesday 6 May 2014

மொட்டை




மொட்டைகளின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. நல்ல உருண்டையான முகங்களின் மண்டைகள் லேசான மேடு பள்ளங்களோடு உருளை கிழங்கு போலவே இருக்கும். நல்ல சிவப்பான மொட்டை  வெள்ளைக்காரரைப் பார்த்தால் பீட் ரூட் போலவும் நீள்வட்ட முக அமைப்புக்கு மொட்டை சுரைக்கையாயை போல் தெரியும் எனக்கு. 
காய்கறிகள் ஏன் மொட்டைகளோடு எனக்கு ஞாபகம் வருகின்றன என்பது விளங்காத புதிர்   

குழந்தைப் பருவத்தில் போட்டப்படும் முதல் மொட்டை எப்போதுமே விசேஷமானது. வளர்ந்து பெரியவனாகும் வரை பெற்றோர் முடிவு செய்யும் காரணங்களுக்காக மட்டுமே மொட்டை . கல்லூரிக்கு  வந்த பிறகு பெரும்பாலும் பெற்றோர் மொட்டை விஷயத்தில் 'தலை'யிடுவதில்லை. மகனாக விருப்பப்பட்டு மொட்டை அடித்துக்கொண்டால் தான் உண்டு. பெரும்பாலும் கல்லூரியில் இடம் கிடைத்தது,பாஸ் செய்தது, பின்னர் வேலை கிடைத்தது, நல்லபடியாக கல்யாணம் நடந்தது என்று எல்லாவற்றுக்கும் அப்பா அம்மா என்று இரு ஜீவன்கள் நமக்கு முன்னே மொட்டை போட்டுக் கொண்டு   நிற்பதை பல குடும்பங்களில் காணலாம்.என்   திருமணம்   நன்றாக நடந்து  முடிந்த கையோடு என் அப்பா  நான் இவ்வளவு  நாட்கள்  அவருக்கு  அடித்த மொட்டை  போதாது என்று  புது மொட்டையோடு வந்து நின்றார்.நல்ல அழகான  மொட்டை அது . மறக்க முடியாத சில மொட்டைகளில் அதுவும் ஒன்று.

ஒருவர் மொட்டை அடித்துக்கொள்ள  அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன . சடங்கு மொட்டை, சம்பிரதாய  மொட்டை,வேண்டுதல் மொட்டை, வெயில் மொட்டை, பேஷன் மொட்டை,சொட்டைமொட்டை,
சரும நோய் மொட்டை,
ஹீரோவுக்காக மொட்டை,அரசியல்   தொண்டன் மொட்டை, கவன ஈர்ப்பு மொட்டை  என மொட்டைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.  
இதெல்லாம் நமக்கு நாமே திட்டமிட்டு போட்டுக்கொள்ளும் மொட்டை. நம்  சம்மதம் இல்லாமல் நமக்கு மொட்டை அடிக்கப்படுவது மண்டையைப் பிளந்து பார்க்கும் அறுவை சிகிச்சைக்காகவே இருக்கும். 

வேண்டுதலுக்காக அடிக்கப்படும்  மொட்டை கடவுளிடம் நாம் வைத்துக் கொள்ளும் ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் தானே. ஆனால் அதிலேயும் வெளிச்சம் பட்ட மொட்டையைப் போல நம் சுயநலம் பளிச்சிடும்.இல்லையா பின்ன? எடுக்கும் போதும் வலிக்காமல், எடுத்த சுவடே  தெரியாமல்  எடுத்தால் வளர்ந்து விடும் என்று தெரிந்து தானே மொட்டை போடுகிறோம்? ஒரு முறை  மொட்டை அடித்தால்  மறுபடி வளரவே வளராது  என்று படைக்கப்பட்டிருந்தால்  எத்தனைப்  பேர் முடி கொடுக்க முன் வருவார்கள்? திருப்பதியில் ஜருகண்டி ஜருகண்டிக்கு வேலையே இல்லாமல் நின்று நிதானமாக பெருமாளை  ரசித்து சேவித்து வரலாம் தானே? உடனே சாமிக்கு மொட்டை போடுவதை  கிண்டல் செய்வதாக யாரும் பொங்கத் தேவையில்லை.

 வாழ்க்கையில் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கோ   நம்மை சார்ந்தவருக்கோ மொட்டைப் போட்டிருப்போம் . பிறந்த போது மண்டையில் முளைத்த முடியோடு மண்ணுக்குள்   செல்பவர்கள் குறைவு.கிட்டத்தட்ட எல்லா மதங்களிலுமே மொட்டை போடும் வழக்கம் உண்டு. ஹிந்து, கிருத்துவம், முஸ்லிம், ஜியூஸ், புத்திசம், சைனீஸ்... எல்லாவற்றிலும் முதல் முடி எடுத்தலை ஒரு சடங்காகவே கொண்டுள்ளனர். அதிலும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பாகவே செய்கின்றனர். ஏனெனில் அதற்கு பிறகு ஆண்களைப் போல பெண்கள் மொட்டை போடுவதில்லை என்ற காரணத்தினால். 

ஆண்களுக்கு எப்படியோ கூந்தல் பெண்களுக்கு ஒரு மிகப் பெரிய அசெட்.நீண்ட கூந்தலே ஒரு தனி அழகு தான்.பெண்களின்  மொட்டைக்கான  காரணத்தை  தெரிந்துக்  கொள்ள எல்லோரிடமும் ஒரு சிறு ஆர்வம் எப்போதுமே தொக்கி நிற்கத்தான் செய்கிறது.பெண்கள் பெரும்பாலும் பூ முடி கொடுப்பதோடு நின்று விடுவார்கள்.மூன்று இன்ச்சுக்கும் குறைவாக முடியை வெட்டிவிட்டு அது வளருதா வளருதா என்று அளந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால் துணிந்து மொட்டை போடும் பெண்களும் உண்டு. அது பெரும்பாலும்  கணவனின் உடல் நிலைக்கோ, குழந்தையின் உடல் நிலைக்கோ நேர்ந்துக்கொண்டதாகவே இருக்கும். தனது காதலை பெற்றோர் ஒத்துக்கொள்ள வேண்டும் அதே சமயம்  தன்னைப் பார்க்க வேறு வரனும் வரக்கூடாது என்று மொட்டைப்  போட்ட  பெண்களும் உண்டு.

சில குடும்பங்களில் இன்றளவும் முதல் குழந்தை பிறந்தவுடன் மருமகள் கட்டாயம் மொட்டை போட வேண்டும் என்ற சடங்கு உண்டு. அது இருபது வயது மருமகளானாலும் சரி முப்பது வயதான மருமளானாலும் சரி அதே மொட்டை தான். அந்த காலத்தில் சில வீடுகளில் இந்த பழக்கம் உண்டு. அடுத்த குழந்தை உடனே வேண்டாம் என்பதற்காக பெருசுகள் முதல் குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கு முன்னரே தாய்க்கு மொட்டை போட்டு விடுவார்களாம். தாய்க்கு மொட்டை போட்டால் அடுத்த குழந்தையை எப்படி தள்ளி போட முடியும் என்று சின்னப்பிள்ளைதனமாக கேட்க கூடாது. ஆனால் நாளாக நாளாக அதை ஒரு சடங்காகவே மாற்றிவிட்டது வீட்டில் உள்ள பெருசுகள்.மொட்டையும் போட்டு அடுத்த ஒன்றரை  வருடத்துக்குள்  இரண்டாவது குழந்தை பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தேர்தல் முடிந்த சமயம் எதற்கு இந்த மொட்டை புராணம்?  கூந்தல் பற்றியே எழுதி போர் அடித்துப் போனதால் ஒரு மாறுதலுக்காக மொட்டை... 

7 comments:

Unknown said...

யாருப்பா அங்க ? திருப்பதிக்கு ஒரு ப்ளைட்டு டிக்கட்டு குடுப்பா .. ஒரு அழகான மொக்க ... சாரி சாரி ... மொட்டை போடனும்.

மரப்பசு said...

நல்ல பதிவு.எங்கள் ஊர் பக்கம் (தூத்துக்குடி மாவட்டம்) பெண்கள் எளிதில் மொட்டை போட மாட்டார்கள்.ஆனால் சென்னையில் பெண்கள் சரக் சரக் என்று சாமி நேர்ச்சையைக் காட்டி மொட்டை போடுவார்கள். சென்னை வந்த புதிதில் எனக்கு இது பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது :)

Unknown said...

Sivanjothi777@gmail.com

Unknown said...

Sivanjothi777@gmail.com

Unknown said...

Indian head shaving video

Unknown said...

Indian head shaving video

Anonymous said...

Marumagal mottai