Wednesday 27 August 2014

ட்ரங்கன் ட்ரைவிங்

சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த செய்தி."கார் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் பலி. மூன்றாமவர் படுகாயம்." 

அந்த விபத்தில் இறந்த இரண்டு இளைஞர்களுக்குமே இருபத்தியேழு வயது.இரவு ஒன்பது மணிக்கு ஊருக்குள் இருக்கும் ஒரு முக்கியச் சாலையில் (புறவழிச்சாலை அல்ல)குடித்துவிட்டு காரை தறிக்கெட்டு ஓட்டியதால் விபத்து நேர்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மூவரும் (அன்று) குடித்திருக்கவில்லை. இவர்கள் கெட்ட நேரம் அன்று குடித்திருந்தது கார் ஒட்டுனர் மட்டுமே. 

இரு சக்கர வாகன விபத்தில் பலி என்ற செய்தியை படிக்கும் போதெல்லாம் மனதிலெழும் காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது தண்ணி. இரண்டாவது ஹெல்மெட். ஒன்றைப் போடக்கூடாது, இன்னொன்றை கட்டாயம் போடவேண்டும். பெரும்பாலான வாகன விபத்துகள் இந்த இரண்ணடையும் மாற்றிப் பின்பற்றுவதாலேயே ஏற்படுகின்றன. 

குடி போதையில் வண்டி ஓட்டி தன் குடியோடு சேர்த்து அடுத்தவன் குடியையும் கெடுக்கும் புண்ணியாத்மாக்கள் கத்துக்குட்டிகளாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.பல முறை இதே முக்திநிலையில் வண்டி ஓட்டி எந்த விபத்தும் செய்யாத, செய்தாலும் யாரிடமும் சிக்காத,சிக்கினாலும் சுலபத்தில் சிக்கலிலிருந்து விடுபடத் தெரிந்த, ஆள், பதவி, பணம் என ஏதோ ஒரு வகையில் பலம் பொருந்தியவராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

இப்போதெல்லாம் 'ட்ரங்கன் ட்ரைவிங்' என்ற வார்த்தை தினமும் ஒரு முறையாவது எங்கேயாவது எப்படியோ காதில் விழுந்துத் தொலைத்து விடுகிறது. குடித்துவிட்டு வண்டியை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பது ஆட்டோவின் பின் எழுதப்பட்டுள்ள பெண்ணின் திருமண வயது 21 மாதிரி அழுத்தமில்லாத ஒரு சாதாரண வாக்கியமாகிவிட்டது. நம் ஊரில் ஒருவன் குடித்துவிட்டு வண்டியை ஓட்டி மாட்டும் போது முதல் முறை அபராதம் விதிக்கப்படுகிறது. மாத கடைசியாக இருந்தால் இந்த அபராதமும் அவசியமற்று போகும். இரண்டாவது, மூன்றாவது முறையும் அதே தவறு செய்தால் அந்த அபராதத் தொகையும் அது போய்ச் சேரும் இடமும் மட்டுமே மாறுபடுகின்றன. 

குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பதைக் கடுமையாகப் பின்பற்றினால் வாரா வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஊரெங்கும் நடக்கும் உற்சவங்களில் ஊரில் பாதிப் பேருக்கு ட்ரைவிங் லைசென்ஸ் இல்லாமல் போயிருக்கும். திங்கட் கிழமை காலை ஆட்டோக்காரர்களுக்கு அமோகமாய் விடிந்திருக்கும். ஆனால் நம் ஊரில் 'குடி போதையில் வண்டி ஓட்டியவர் ஓட்டுனர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது' போன்ற செய்திகள் ரமணன் சொல்லி மழை வரும் கதை மாதிரி தானே உள்ளது? 

சாலை விபத்தினால் மரணம் எனும் செய்தி தினமும் டிவியிலும் பேப்பரிலும் ராசிப்பலன், வானிலை, தங்கம் விலை நிலவரம் மாதிரி தினமுமே சொல்லப்படும் வழக்கமான செய்தியாகிப் போய்விட்டது. பாதிக்கப்பட்டவரோ இறந்தவரோ நமக்குத் 
தெரியாதவராக இருக்கும் பட்சத்தில் நாம் இது போன்ற சம்பவங்களைச் செய்தித்தாளின் அடுத்தப் பக்கம் திருப்பும் போதே பெரும்பாலும் மறந்து விடுவோம். 
மேற்கூறிய சம்பவமும் அவ்வாறான ஒன்றே. 

நாலு ரவுண்டுக்குப் பின்னாடியும் நானெல்லாம் ஸ்டெடியா ஏரோப்ளேனே ஓட்டுவேன் போன்ற வீர வசனங்கள் பப்ளிக்காக ஒலிக்கத் தொடங்கியுள்ள காலம் இது. குடி இந்த அளவு ஊக்குவிக்கப்படும் நம் ஊரில் லோக்கல் சரக்கடித்தால் மூன்று ரவுண்டு ,ஃபாரின் சரக்கு என்றால் இரண்டு ரவுண்டு வரை வண்டி ஓட்டலாம், அதற்கு அதிகமானால் வண்டி ஓட்டக்கூடாது போன்ற புது மாதிரி சட்டங்களைக் கூட வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம். 

சாலை விபத்துகளுக்கான வேறு பல சில்லறைக் காரணங்கள் என்று பார்த்தால் ஓவர் ஸ்பீடிங், இருவர் செல்ல வேண்டிய வாகனத்தில் சர்க்கஸ் மாதிரி எத்தனை பேர் வேண்டுமானலும் தொற்றிக்கொண்டு பயணித்தல், நோ என்ட்ரியில் வண்டி ஓட்டுதல், அவரவர் வசதிக்கேற்ப சிவப்பு மஞ்சள் பச்சையை மதித்தல் என ஒரு லிஸ்டே போடலாம். குடித்துவிட்டு ஓட்டுவது குற்றமாகப் பார்க்கப்படுமளவு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர்,சில சமயங்களில் ஐந்து பேர் (பெட்ரோல் டாங்கின் மீது ஒன்று,அப்பாவுக்குப் பின்னாடி ஒன்று,அம்மா மடியில் ஒன்று) அடங்கிய குடும்பமே அசாதாரணமாகப் பயணிப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை,அந்த குடும்பத்துக்கும் இது போன்ற ஒரு விபத்து நேரும் வரை. 

கூட்டிக் கழித்துப் பெருக்கி துடைத்துப் பார்த்தால் இத்தகைய விபத்துகள் எல்லாவற்றுக்குமே மூலக்காரணம் சாலை விதிகளை அவரவர் இஷ்டப்படி மதிப்பதே என்பது தெளிவாகப் புரியும் .முதல் முறை கண்டுக்கொள்ளாமல் விடப்படும் சிறு சிறு தவறுகள் அனைத்தும் பூதாகரமாக அதன் விளைவுகளைக் காண்பிக்கத் தொடங்கிய பின்னரே கதறுவது நமக்கும் ரொம்பவே பழகிவிட்டது.சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக உள்ள நாடுகளில் கூட மற்ற குற்றங்கள் எப்படியோ ஆனால் 'சாலை விபத்தின் மூலம் உயிரிழப்பு' நம் நாட்டைப் போல எங்குமே மலிந்து காணப்படுவதில்லை. 

முதல் பத்தியில் கூறிய விபத்தை நிகழ்த்தியவர் என்னவோ அதற்கான சுவடே தெரியாமல் தனது அன்றாட வாழ்வினை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.ஏற்கனவே இரண்டு முறை இதே பரவச நிலைமையில் விபத்து உண்டாக்கிய பெருமையும் இவரைச் சேரும்.சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக அறிந்து வைத்திருக்கும் இந்தப் புத்திசாலிக்குத் தண்டனைப் பெற்றுத் தருவது அத்தனை எளிதான விஷயமல்ல என்பதை நன்றாகப் புரிந்துக்கொண்டுள்ள இறந்த இளைஞர்களின் பெற்றோர், இன்னமுமே வழக்குப் பதிவுசெய்யாமல் தயங்கி தயங்கி நிற்கின்றனர் என்பது கூடுதல் செய்தி. 

நம் நாட்டில் என்ன தவறு செய்தாலும் பணம்,பதவி,பலம் இருந்தால் எப்பேர்பட்ட குற்றங்களிலிருந்தும் வெளியே வந்துவிட முடியும் என்ற மோசமான முன்னுதாரணம் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதிய வைக்கப்படுவது வேதனையான விஷயம். இந்த விபத்தும் அதே தர்ம கணக்கில் தான் சேர்த்தி. இதுவே விதி மீறல்களுக்கான அடிப்படை காரணமாகவும் அமைந்து போவது நமது துரதிஷ்டமே. 

1 comment:

அமர பாரதி said...

குடி தமிழ் நாட்டில் ஒரு கலாச்சாரமாகவே மாறி விட்டது. குடித்தது விட்டு நந்தி ஒட்டி விபத்து ஏற்பட்டால் லைசென்ஸ் ரத்து அவசியம் செய்ய வேண்டும். மேலும் சிறைத் தண்டனையும் அவசியம். பொதுவாகவே மனிதத் தன்மை அருகி வருகிறது. அனைத்தும் வேஷங்கள், தனி மனித நலமே முக்கியம் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கிறது.