Monday 15 December 2014

சந்தூர் அம்மாக்கள்


காலையில் பிள்ளையை பள்ளியில் கொண்டு விடுவதை என்ஜாய் பண்ணுவதற்கு ஒரு ஜென் மனநிலை தேவைப்படுகிறது. ஆனால் மதிய வேளையில் பிள்ளைக்காக காத்திருந்து பள்ளியிலிருந்து அழைத்து வருவது ஒரு சுகமான அனுபவம். எப்போதாவது தான் வாய்க்கும் இந்த பாக்கியம். அதனாலேயோ என்னவோ வேலைக்கு செல்லாத அம்மாக்களின் மேல் எனக்கு எப்போதுமே துக்கிளியூண்டு பொறாமை உண்டு. 

ஆடிக்குப் போனால் அடுத்து புரட்டாசிக்கு தான் பள்ளிக்கு செல்லும் ப்ராப்தம் வாய்க்கிறது எனக்கு. இதனால் க்ளாஸ் மிஸ்ஸை தவிர வேறு யாரையும் தெரிந்துவைத்துக்கொள்ள முடிவதில்லை. அப்பாக்களை பற்றி கேட்கவே வேண்டாம், பிள்ளைகளுக்கே பல நேரங்களில் அவர்களை அடையாளம் தெரிவதில்லை. அதனால் பள்ளியில் பிள்ளையுடன் படிக்கும் சக மாணவர்களின் அம்மாக்கள் சுத்தமாக பரிச்சயம் கிடையாது. 

யோஹானின் பள்ளி விளையாட்டு விழாவின் போது சுமார் பத்து பேர் அடங்கிய பெண்கள் கூட்டம் ஒன்று  ஒரே மாதிரி கண்ணைப்பறிக்கும் சிவப்பு நிறத்தில் உடையணிந்திருந்தனர். ஏதோ டான்ஸ் ட்ரூப் போல என்று நினைத்து விசாரித்தால் அந்த அழகு கும்பல் முழுக்க  எல்கேஜி குழந்தைகளின் அம்மாக்களாம்!கூடி கூடி க்ரூப் செல்ஃபி எடுப்பதை  தவிர பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் அந்த அழகு அம்மாக்களை பார்த்த  போது காலேஜ் படிக்கும் காலத்தில் சொல்லி வைத்து ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டு வந்த அலப்பரை விட்டது ஞாபகம் வந்தது. திருமணம் முடித்து, குழந்தை பெற்று, பிள்ளையின் பள்ளி விழாவிற்கு இவ்வாறு இந்த அம்மாக்களால் வர முடிந்தது என்னைப் பொருத்த மட்டில் ஆச்சர்யமான விஷயம். 

சாயங்காலம் ஸ்கேடிங், ட்ராயிங் , ஃபோனிக்ஸ்,டென்னிஸ் போன்ற எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள் நடக்கும் இடங்களில் அழகழகான இளம் அம்மாக்களை காணலாம். எனக்கு நேரம் வாய்க்கும் போதெல்லாம் இந்த சந்தூர் அம்மாக்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. 

முக்கால்வாசி பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போய்விட்டு வந்து மதியம் அரைகுறையுமாக தூங்கியெழுந்து பாதி தூக்கத்தில் தள்ளாடியபடியே தான்  வரும் க்ளாஸுக்கு.ஆனால் அம்மாக்கள் படு ஃப்ரெஷ்ஷாக  ஸ்டைலான கெட்டப்பில் தினமும் அசத்துகிறார்கள். 

பிள்ளையை டென்னிஸிலோ ஸ்கேட்டிங்கிலோ விட்டுவிட்டு தங்கள் ஜாக்கிங், வாக்கிங்கை முடித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள்ளாகவே ஹவுஸ் பார்ட்டி, ட்ரீட், அவுட்டிங் என அழகாக நேரத்தைப் பிரித்து அட்டவணை போட்டுக் கொள்கிறார்கள். 

ஜாக்கிங்,  வாக்கிங் போகாதவர்கள் காலையில் தூங்கி எழுந்து பிள்ளைக்கு வாயில் ப்ரஷை வைத்தது முதல் ஆரம்பிக்கிறார்கள் அரட்டையை. அப்படியே சினிமா, ம்யூசிக், சமையல், ட்ரெஸ், பார்ட்டி, ஷாப்பிங் ,கணவர், ஸ்போர்ட்ஸ் என டேக் ஆஃப் ஆகி மறுபடி அடுத்த நாள் பிள்ளைக்கு என்ன ஸ்நாக் தருவது என்பதில் முடிகிறது கச்சேரி. 

இந்த இளம் அம்மாக்கள் அனைவருமே  பட்டதாரிகள். பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்தவுடன் வேலையை விட்டவர்கள். குழந்தை ஒரளவு வளர்ந்து வரும் வரையோ அல்லது 'நாம் இருவர் நமக்கு இருவர்'என்ற எழுதப்படாத திட்டத்தை பூர்த்தி செய்யவோ வேலைக்கு செல்வதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளவர்கள். 

பேச்சில் தெறிக்கும் இளமை, குறும்பு, அலட்சியம் அவற்றோடு கூட இழையோடும் ஒரு வெகுளித்தனம் தான் இந்த சந்தூர் அம்மாக்களின் ஈர்ப்புக்கு காரணம் எனலாம். வயது ஏற ஏற பெண்கள் இளமையோடு சேர்த்து முதலில் தொலைப்பது அவர்களுக்கே உரிய வெகுளித்தனத்தை தான். இதனாலேயே பெரும்பலான பெண்கள் முப்பது வயதைக் கடக்கும் போதே நாற்பதை கடந்த முதிர்ச்சியோடு ஆளே உருமாறி வான்டடாக பெருசுகள் ஜீப்பில் ஏற முயலுகின்றனர். முகத்தின் முதிர்ச்சியும், உடலின் தளர்ச்சியும் அளவுக்கு மீறி வெளிப்படுவது இந்த வெகுளித்தனத்தை தொலைக்கும் போது தான் என தோன்றுகிறது. 

இவர்கள் வயதில் நான் என்ன செய்துக்கொண்டிருந்தேன் என யோசித்துப் பார்த்தால்.. கண்றாவி, அப்போதும் ஏதோ ஒரு நுழைவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டுத்தானிருந்திருக்கிறேன். 
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேடிக்கை பார்க்கும் எனக்கு இந்த சந்தூர் அம்மாக்களின்  குதூகலம் பட்டாம்பூச்சி போல சடுதியில் தொற்றிக்கொள்கிறது. காலேஜ் வாழ்க்கை முடிந்த பின்பு இது போன்ற இளமை கச்சேரிகள் சாத்தியப்படாததால் தான் இன்னமும் இவர்களை ரசிக்க முடிகிறதோ என்னவோ .ஆனால் அதிக பட்சம் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் இந்த அழகு அம்மாக்கள் அனைவரும் ஒரு 'டிபிகல் அம்மா'வாக மாறி இருப்பார்கள் என்பதே நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனம் . 


பி. கு

இது போன்ற இடங்களில் அப்பாக்களை பார்க்கவே முடிவதில்லை.உண்மையில் அப்பாக்களுக்கு பொழுது போக்க அருமையான இடம் இந்த மாலை நேர எக்ஸ்ட்ரா க்ளாஸ்கள். 

No comments: