Monday 22 December 2014

பழைய கூழ் புது மொந்தையில்...


சீரில்ஸ் என்ற பெயரில் நமக்கு ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், ம்யுஸ்லி (muesli)  பரிச்சயமான அளவு  சமீபகாலங்கள் வரை சிறுதானியங்களின் பெயர்கள் கூட கேள்விப்பட்டிருக்கவில்லை. 

மொத்தம் ஏழு சிறுதானியங்கள்
(லிட்டில் மில்லெட்) . வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் (மக்கா சோளம் அல்ல), கேழ்வரகு. இதில் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் எல்லாம் சிறு வயதிலிருந்தே ஓரளவு பரிச்சயம்.  மீதமுள்ள நான்கும் சமீபத்தில் தெரிந்து கொண்ட பெயர்கள். 

இந்த சிறுதானியங்கள் வரகு, சாமை, தினை, குதிரைவாலி ஆகியவை வெளிர் பச்சை, மஞ்சள் , ப்ரவுன் என பல கலர்களில் இருந்தாலும் பாலிஷ் செய்யப்பட்டு கடைகளில் வைக்கப்பபட்டிருக்கும் பாக்கெட்டுகளில் எல்லாம் உருண்டை உருண்டயாக ஹோமியோபதி குளிகை மாதிரியே இருக்கின்றன.ஹோமியோபதி மருந்தை பார்த்திராதவர்கள் பாலிஷ் செய்யப்படாத ஜவ்வரிசியின் மினியேச்சர் சைஸை கம்பேர் செய்துக் கொள்ளலாம். 

அதனால் சிறுதானியங்களை பாக்கெட்டுகளில் போடப்பட்டுள்ள பெயரை வைத்து தான் தெரிந்து கொள்ள முடிகிறது.பெயரை மாற்றி ஒட்டி வைத்திருந்தால் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். இவை பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவையிலும் ஒரே மாதிரி தான்.  கம்பு , கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் தனித்துவமான சுவையை போல மற்ற சிறுதானியங்களுக்கு ப்ரத்யேக சுவை என எதுவும் உணர முடிவதில்லை. 

கேழ்வரகு,கம்பங் கூழ் தவிர்த்து வேறு எதையும் நாம் இது நாள் வரை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டோம். இப்போதுமே கூட சர்க்கரை வியாதி, உடல் பருமன் என்று எதையாவது சொல்லி பயமுறுத்தி தான் ஓட்ஸின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நம் கவனத்தை சிறுதானியங்கள் பக்கம் இழுக்கிறார்கள். சக்கரை நோயாளிகள் மட்டுமில்லாது பொடென்ஷிடயல் டயாபிடிக் லிஸ்ட்டில் வருபவர்களும் இந்த வகை உணவுகளுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். 

பல் துலக்கும் பேஸ்டில் ஆரம்பித்து இரவு உபயோகிக்கும் கொசுவத்தி வரை உலகமயமாக்கலின் தாக்கத்தை எல்லா நிலைகளிலும் உணர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம்ம ஊர் மக்கா சோளத்தை விட்டு விட்டு குழந்தைகளுக்கே அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் தானே வாங்கித் தருகிறோம்? எதற்கு மவுசு அதிகமோ அதற்கு விலையும் அதிகமாக இருப்பது ஆச்சர்யமில்லை. கிலோ நாற்பது ரூபாய்க்கு அரிசி வாங்குவதை தவிர்த்து கிலோ நூற்றியிருபது ரூபாய்க்கு விற்கப்படும் வரகு, சாமை, தினையை எவ்வளவு பேர் வாங்கி சாப்பிட முடியும்? அந்த காலத்தில் கேட்பாரற்று கிடந்த உணவை இன்று எங்கேயோ தூக்கி வைத்துள்ளோம்! ஆர்கானிக் ஸ்டோர் என்ற பெயரில் தனியே கொள்ளையடிக்க விட்டுவிட்டு தள்ளி நின்று வேடிக்கை பார்க்கிறோம். நம்முடைய சிறுதானியங்களை கண்டுகொள்ளாமல் ஓட்ஸின் பின்னால் அலைந்ததற்கான விலையே இந்த நூற்றியிருபது ரூபாய். 

என் அப்பா காலத்தில் இது போன்ற சிறுதானிய உணவை தாத்தாவின் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் தான் சாப்பிடுவார்களாம். அதாவது அரிசி சோறு பொங்கி சாப்பிட வசதி இல்லாதவர்கள்.என்றைக்காவது ஒரு நாள் பாட்டி வரகு அரிசியிலோ சாமை சோறோ பிள்ளைகளுக்கு வடித்துப் போட்டால் தாத்தா பாட்டியை அடிக்கவே வந்து விடுவாராம். இன்று அப்பாவிடம் வரகரிசி சாதம் , தினை இட்லி , குதிரைவாலி தோசை , சாமை பொங்கல் என்று ஏதோ புது ரெஸ்பி கண்டுபிடித்துவிட்ட களிப்பில் சிலாகித்தால் அப்பா அவருடைய அந்த கால கதையை சொல்லி சிரிக்கிறார். 




No comments: