Thursday 18 December 2014

என்னமோ போங்க!



என்னமோ போங்க! 


நம் ஊரில் வீடு வேலை செய்பவர்,குழந்தை பார்த்துகொள்கிறவர்கள் , சமையல் செய்வோர் ஆகியோரை பெரிதும் நம்பியே வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை நகர்கிறது. எல்லா வேலைகளையும் தானே செய்தாலும் கூட கூட்டுக் குடும்பம் இல்லாத இந்த காலத்தில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியாவது  ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.  

வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த பிரச்னையை சந்தித்திருப்பீர்கள்  என்றே நம்புகிறேன். ஊருக்குச்  செல்லும் வேலைசெய்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டு நின்று விடுவது. ஊருக்கு போகும்  போது நன்றாகவே பேசிவிட்டு செல்பவர்கள் ஊருக்கு போன பின் நம்மை சுத்தலில் விட்டு விடுகிறார்கள். நிச்சயமாக சொன்ன தேதியில் கிளம்பி வர மாட்டார்கள். நாம் போன் செய்தால் பெரும்பாலும் சுவிட்ச் ஆப் என்றே வரும்.அப்படியே தவறி போன் எடுத்து பேசினாலும் இது வரை கேள்வியே பட்டிராத அவங்க  ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட தங்கச்சியோட மச்சினனுக்கு கையில நகசுத்தி, ஆபரேஷன் பண்ணனும் என்பார்கள். நமக்கோ ஆபீசில் போட்ட லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியாத நிலைமையா  இருக்கும்.அப்போது  தான் வேலையிடத்தில்  எக்ஸாம் வரும்,மினிஸ்டர் வருவார், ஹெல்த் செக்ரட்டரி திடீர் விசிட் அடிப்பார் , இன்ஸ்பெக்ஷன்  வரும், மாதாந்திர கிளினிகல் மீட்டிங் வரும்... கட்டாயம் வந்துடறேனு சொல்லிட்டு போன வேலையாள் தவிர மற்ற எல்லோரும் கும்மி கொட்டிக்கொண்டே ஒரு சேர வந்து நிற்பார்கள்.  

மேலதிகாரியிடம் லீவ் கேட்கவும் தர்மசங்கடம்.யார் என்றே தெரியாத ஒருவரின் நகசுத்து  எனக்கே வந்திருந்தால் தேவலை போல தோன்றும். 
சரி எப்போ தான் வருவீங்க என்று கேட்டால் இதோ நாளைக்கு ,இன்னும் ரெண்டு நாள் ,இன்னும் நாலு நாள்...இப்படி வரையறை இல்லாமல் நீண்டு கொண்டே போகும் அவர்களின் லீவும் வேலையிடத்தில் சகட்டு மேனிக்கு லீவ் எடுக்கும் எனது கிரைம் ரேட்டும்.வேலையாள் வரும் வரை சூர்யாவின் அவள் வருவாளா தான் எங்க பேமிலி சாங்.டெய்லி ஒரு முறையாவது பாடிவிடுவோம். 

வேலைக்கும் செல்ல முடியாமல், முழுமனதோடு வீட்டிலும் ஒன்றி வேலை செய்ய முடியாமல்,வேலைக்கு வேற ஆள் தேடலாமா இல்லை  நானே வேலையை விட்டுவிடலாமா என்று போராட்டமாக இருக்கும் போது போன் வரும் வேலைக்காரியிடமிருந்து .லவ் பண்ணும் போது அவர் நம்பர் பார்த்து கூட இவ்வளவு குஷியாகி இருக்குமா மனது தெரியவில்லை! வேலையாள் ஒரு சிறிய தயக்கம் கூட இல்லாமல் ,' யக்கா நான் இனிமேல் வேலைக்கு வரலைக்கா ' என்பாள். இன்று வருவாள் நாளை வந்து விடுவாள் என்று நம்பி இருந்துவிட்டு வரவே மாட்டாள் என்பதை ஜீரணிக்க எத்தனை பாட்டில் ஜெலுசில் தேவைப்படும் என்றே புரியாமல் குழம்பி நின்ற தருணங்கள் கணக்கே இல்லை!  தான் வேறு இடம் பார்த்துவிட்டதாக படு கேஷுவலாக சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். 

வீட்டில் உள்ளவர் சொல்லும் சமாதானம், பரவயில்லையே சொல்லிட்டு தான நின்னுச்சி   என்பதே. இதை முன்பே சொல்லி இருந்தால் லீவில் இருந்த போதே வேறு ஆளையாவது தேடி இருப்பேனே என்று அங்கலாய்ப்பாக இருக்கும். வெளியில் இருந்து பார்ப்போருக்கு ( பல நேரம் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கே கூட)இது ஒரு மேட்டரா    என்று தோன்றும். புது ஆளை தேடிப்பிடித்து , நமக்கு ஏற்றார் போல டியூன் செய்வது லேசான வேலை அல்ல. குழந்தையைப் பார்த்துக் கொள்பவரை குழந்தைக்கும் வேறு பிடிக்க வேண்டும்! 

நமது தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைப்பது பெண் தேடுவதை விட சிரமமான  ஒன்று.ஏஜென்சி மூலம் தேடிச் சலித்துவிட்டேன் . பெரும்பாலான ஏஜென்சிகள் ப்ராத்தல் நடத்தும் இடங்களைப்  போலவே உள்ளன. அதுவும் நடக்குமோ என்னவோ யார் கண்டா! இத்தனைக்கும் ஏஜென்சியின் நம்பர் மற்றும் அட்ரஸ் பெருமைமிக்க JUS DIAL லில் வாங்கியது. ஒரு மட்டமான தெருவில் ஏஜென்சி என்று எந்தவித போர்டும் இல்லாத ஒரு அரதப்பழசான வீட்டின் மாடியில் ஒரு குறுகலான அறையில் வரிசையாக லேடீஸ் எல்லோரும் அமர்ந்து இருப்பார்கள். நாம் அவர்களில் யார் வேண்டுமோ செலக்ட் செய்து கொள்ளலாம். எனக்கு கமல்ஹாசன் படங்களில்  பார்த்த பலப்பல காட்சிகள் மண்டைக்குள் ஓடும்.ஒன்றிரண்டு இடங்களை  பார்த்த(!) பின்பு ஏஜென்சிகளுக்கு நேரில் செல்வதையே விட்டு விட்டேன்.

இதனால் கண்ட சிக்கல்களும் பல. அட்ரஸ் கொடுத்து விட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்பி வைப்பார்கள்.ஒரு முறை அது போல சமையலுக்கு ஒரு ஆள் வந்தது.35 வயது அம்மா என்று சொல்லியிருந்தார்கள். நேரில் பார்த்த போது பகீரென்றது.  ஒரு 55வயது சொல்லலாம் . ஆயா என்பதே சரி.வயதானவர்களை எப்போதுமே வேலைக்கு வைத்ததில்லை. ஏஜென்சிக்கு போன் போட்டு திட்டினேன். ஆள் இல்லை மேடம் அதுவரைக்கும் அட்ஜஸ்ட்  பண்ணிக்கோங்க என்றார்கள். வேற வழி? 

ஆயா கேஸ் அடுப்பில் சமைத்ததில்லையாம்.மற்றபடி எல்லா வகை சமையலும் தெரியுமாம்.எந்த அடுப்பில் எல்லா சமையலும் பழகி இருக்கும் ஆயா என்ற யோசனை வராமல் இல்லை. ஒரு மாதம் ஆளில்லாமல் கஷ்டப்பட்டதற்கு வந்திருந்த ஆயா மல்லிகா பத்ரிநாத் போலவே தெரிந்தார் எனக்கு!ஒரு வேளை தந்தூரி, க்ரில்ட் ஐடம்ஸ் மட்டும் செய்யுமோ ஆயா  என்று நினைத்துக்கொண்டே  முதல் நாள் அடுப்பை பற்ற வைக்க செய்ய சொல்லி கொடுத்து நானே சமைத்தும் வைத்தேன். எல்லாம் புரிந்ததாக மண்டைய மண்டைய ஆட்டினார் ஆயா. அடுத்த நாள் காலையில் அவசரமாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம்.நாங்கள் கிளம்பும் போது ஆயா ஒரு கேள்வி கேட்டது. ஏம்மா அந்த அடுப்பு அணையலேனா  தண்ணி தெளிச்சு அணைசிக்கலாமா? வாயே திறக்கவில்லை நான்.  லீவ் போட்டு  வீட்டிலேயே உட்கார்ந்து விட்டேன். 
ஏஜென்சி கதை இப்படி! 

தற்போது அடுத்து வேலையாள் தேடும் படலம் இனிதே ஆரம்பமாகி உள்ளது.தெரிந்தவர் அறிந்தவர் புரிந்தவர் மற்றும் பல வர்கள் மூலம் ஆள் தேட ஆரம்பித்துள்ளேன்.வேலைக்கு ஆள் தேடி அலைந்து அலைந்து, வேலைக்கரர்களோடு  எனக்கு இருக்கும் அனுபவத்தை கணக்கில் கொண்டு  டாக்டர் தொழிலை விட்டு விட்டு ஒரு மேன் பவர்  ஏஜென்சி ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. நிச்சயம் லாபகரமான தொழிலாகவே இருக்கும். வேலைக்கு விருப்பமுள்ளோர் உங்கள் ரெசுமே கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும். 

vaippome_ aappu@ yakov . co.in


Aruna😊

No comments: